
நேற்று திருப்பத்தூரில் நடைபெற்ற மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் பாமகவின் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசுகையில், ''பாமக நடத்திய மாநாட்டில் கூட்டத்தைப் பார்த்து திமுக ஒரு முடிவு பண்ணிவிட்டார்கள். வன்னியர் சமூகத்திற்கு துரோகம் செய்த திமுக என்று பேசிவிட்டேன். வன்னியர்கள் திமுகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள். காரணம் வன்னியர்களுக்கு துரோகம் செய்தது திமுக. களத்தில் நேர்மையாக திமுக நம்மைச் சந்திக்க முடியாது. தைரியம் கிடையாது. சூழ்ச்சியின் மூலமாகத்தான் குழப்பம் செய்ய வேண்டும் என்று செய்கிறார்கள். திமுக காரர்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான். சூழ்ச்சி செய்து, குழப்பம் செய்து சூழ்ச்சியாளர்களை வைத்து நம் கட்சியில் குழப்பம் நடக்கப் போவது கிடையாது. உறுதியான தைரியமான கட்சி பாமக தான்'' எனப் பேசியிருந்தார்.
இந்நிலையில் சென்னை அபிராமபுரத்தில் பாமகவின் ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர் பாமக எம்எல்ஏக்கள் திடீர் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''இந்த நேரத்தில் உடல்நிலை சரியில்லாமல் போய் இருக்கலாம். தொடர்பு கொண்டு பேசினேன் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். அவரவர் அவரவர்கள் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்'' எனக் கூறிய ராமதாஸ், ''நீங்கள் உங்கள் வேலைகளை பார்க்கிறீர்கள். விடாமல் என்னைத் துரத்துகிறீர்கள். இனிமேல் என்னை விடாமல் துரத்தாதீர்கள். இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். வேண்டாம். நீங்கள் எல்லாம் நல்ல பிள்ளைங்க. மகிழ்ச்சியாக தான் இருக்கிறது. என்னைத் தொந்தரவு பண்ணாதீர்கள்'' என்றார்.

'அன்புமணி ராமதாஸ் மேடையிலேயே உங்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளாரே' என்ற கேள்விக்கு, ''போக போக தெரியும்'' என்ற பாடலை பாடி கட்டிய ராமதாஸ், பாமகவில் நிலவும் பிரச்சினைகளுக்கு திமுக தான் காரணம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார் என்ற கேள்விக்கு, ''அப்பட்டமான பொய்; கடைந்து எடுத்த போய்'' என்று கூறினார்.