Skip to main content

"மக்களின் அனுமதி இல்லாமல் ஒரு பிடி மண்ணை கூட எடுக்க அனுமதிக்க மாட்டோம்!' அன்புமணி ராமதாஸ் பேச்சு!

Published on 28/03/2022 | Edited on 28/03/2022

 

kl;

 

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி இந்தியா நிறுவனம் உள்ளது. இங்கு உள்ள திறந்தவெளி நிலக்கரி சுரங்கங்களில் இருந்து நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழ்நாடு மட்டுமின்றி புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, ஆந்திரா,தெலுங்கானா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது நிலக்கரி தோண்டி எடுப்பதற்காக ஏற்கனவே உள்ள சுரங்கங்களை விரிவாக்கம் செய்வதற்காகவும், புதிதாக மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்காகவும் என்.எல்.சி நிறுவனம் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களைக் கையகப்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தைக் கையகப்படுத்தும் பணியில் என்.எல்.சி ஈடுபட்டு வருகிறது.

 

இதனிடையே நிலம் கொடுப்பவர்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும், இழப்பீடாக ஏக்கர் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் நிலம் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் 'நெய்வேலி சுரங்கம் என்ற பெயரில் நிலங்களைப் பறிப்பதா?' என்ற தலைப்பில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் விருத்தாசலம் அருகேயுள்ள சிறுவரப்பூரில் மக்கள் சந்திப்பு கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பா.ம.க மாநில தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ, மாநில வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி, வழக்கறிஞர்கள் சமூகநீதிப்பேரவை தலைவர் கே.பாலு,  மாவட்ட தலைவர் தேவதாஸ் படையாண்டவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

 

கூட்டத்தில் பா.ம.க இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கருத்துகளைக் கேட்டார். பின்னர் அவர் செய்தியாளரிடம் பேசும்போது, "பாட்டன் பூட்டன் காலத்தில் இருந்து இந்த மண்ணிலேயே வாழ்ந்து வரும் மக்களுக்கு இந்த மண் மட்டுமே வாழ்வாதாரம். இந்த மண்ணை நம்பிதான் அவர்களும், அவர்களின் குழந்தைகளும், பேரக்குழந்தைகளும்  இவ்வளவு ஆண்டுகாலமாக வாழ்ந்து வருகின்றார்கள். இந்த மண்ணை பிடுங்கி எடுப்போம் என்று என்.எல்.சி நிர்வாகம் கங்கணம் கட்டியிருக்கிறது. பா.ம.க என்றுமே வளர்ச்சிக்கு எதிரான கட்சி கிடையாது. நமக்கு வளர்ச்சி தேவை.  வாழ்வாதாரத்தைப் பிடுங்கி, விவசாய நிலத்தைப் பிடுங்கி வளர்ச்சி என்ற போர்வையில் என்.எல்.சி நிறுவனம் செயல்படுவது கண்டிக்கத்தக்கது.  இந்த மக்கள் ஒரு பிடி மண்ணை கூட தரமாட்டோம் எனக் கூறியுள்ளார்கள். அவர்களுக்குப் பாதுகாவலராக  டாக்டர் ராமதாஸ்  இருக்கிறார். ஒரு பிடி மண்ணை மக்கள் அனுமதியில்லாமல் எடுக்க விடமாட்டோம். 

 

என்.எல்.சி நிர்வாகம் என்று இந்த மாவட்டத்திற்குள் நுழைந்ததோ அன்றே இந்த மாவட்டம் சீரழியத் தொடங்கி விட்டது.  என்.எல்.சி நிர்வாகம் 1956 ல் தொடங்கப்பட்ட நிறுவனம்.  ஒரு சில லட்சங்களை வைத்து அன்று 44 கிராமங்களில் முப்போகம் விளையும் 37 ஆயிரம் ஏக்கர் நிலத்தை பிடுங்கி எடுத்துவிட்டார்கள். அந்த 44 கிராமத்தில் உள்ள 44 ஆயிரம் மக்கள் எங்கே செல்வது எனத் தெரியாமல் நின்றனர். அதன் பிறகு நிலத்தடியில்  இருக்கின்ற நீரை உறிஞ்சி கடலுக்கு அனுப்பி வருகிறது. இது எங்குமே நடக்காத செயல். தன்னூற்று அதாவது ஆர்ட்டீசியன் என்பார்கள். 40, 50 வருடங்களுக்கு முன்பு தானாகத் தண்ணீர் பொங்கி ஊற்றியது. வீடு கட்ட குழி தோண்டினால் தண்ணீர் நிற்கும். இன்று 800, 1200 அடியில் தண்ணீர் உள்ளது. இதுதான் வளர்ச்சியா? 8 அடியில் இருந்த தண்ணீர் 800 அடிக்குச் சென்றதன் காரணம் இந்த என்.எல்.சி நிர்வாகம். 

 

1956 ல் ஒரு சில லட்சங்களில் முதலீடு செய்த என்.எல்.சி நிர்வாகம் இன்று அதன் மதிப்பு 54 ஆயிரம் கோடி. கடந்த வருடம் லாபம் மட்டுமே 11500 கோடி. இந்த மக்களுக்கும், இந்த மாவட்டத்திற்கும் இந்த நிறுவனம் என்ன செய்தது? தண்ணீரைச் சுரண்டி விவசாயத்தைப் பாழாக்கிய நிறுவனம். ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் நிரந்தரமாக்க வேண்டும் என 2008ல் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்தது. அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கு மேல்முறையீட்டு செல்கிறார்கள்.  உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுத்தும் இன்று வரை தொழிலாளர்களை நிரந்தரமாக்கவில்லை. ஒப்பந்த தொழிலாளர்களை சட்டீஸ்கர், ராஜஸ்தான், ஒடிசா, பீகார், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களிலிருந்து அழைத்து வருகிறார்கள். இங்கு நாம் கோவணம் கட்டிக் கொண்டு சுற்றித் திரிகிறோம். இனி நாங்கள் ஏமாறத் தயாராக இல்லை. அரசியலுக்காக நான் வரவில்லை. விவசாயிகள் எங்குப் பாதிக்கப்பட்டாலும் அங்கே நான் ஓடோடி வருவேன். காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினோம். 

 

இன்று ஒட்டுமொத்த காவிரி டெல்டா பகுதியும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  தேர்தல் நேரத்தில் 500, 1000, 2000  தருவார்கள். அதன் பிறகு தி.மு.க வும் அ.தி.மு.கவும் வரமாட்டார்கள். இடைப்பட்ட காலத்தில் பா.ம.க மட்டுமே மக்களுடன் இருக்கும். ராணுவமே வந்தாலும், நிலத்தைக் கையகப்படுத்த விடமாட்டோம். ஒரு பிடி மண்ணை கூட விட்டுத் தரமாட்டோம். இனிமேல் பலகட்ட போராட்டம் என் தலைமையில் நடைபெற உள்ளது. தற்போது சுரங்க விரிவாக்கத்திற்காக  49 கிராமங்களில் 25 ஆயிரம் ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தத் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறிவிட்டு எந்த வாக்குறுதியையும் என்.எல்.சி நிறைவேற்றவில்லை.

 

எனவே என்.எல்.சி மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இந்த என்.எல்.சி யால் இந்த மக்களுக்கும், இந்த மாவட்டத்திற்கும் எந்த பயனும் கிடையாது. 1956லிருந்து நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும், இருக்கின்ற வேலைகளை இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கும் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் என்.எல்.சி நிர்வாகத்தை மூடிவிட்டு வெளியேற வேண்டும். 11500 கோடி லாபத்தைக் கொண்டு ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஹரியானா போன்ற வெளிமாநிலங்களுக்குச் செய்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டிற்கு நாமம் போடுகிறார்கள்.  என்.எல்.சியால் நிலக்கரி துகள்கள் காற்றில் சூழ்ந்து சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு ஆஸ்துமா, கேன்சர் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகிறது. அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் என்.எல்.சியை பாமக எதிர்கொள்ளும். நிலம் கையகப்படுத்துதல்  வாழ்வாதார சமுதாய பிரச்சினை என்பதால் எல்.எல்.சி தனது நிலம் கையகப்படுத்துதல் முயற்சியைக் கைவிட வேண்டும்" என்றார். 

 

இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் செல்வ.மகேஷ், மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெ.கார்த்திகேயன், கிழக்கு மாவட்டச் செயலாளர் சண்.முத்துகிருஷ்ணன், வடக்கு மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன்,  மாநில நிர்வாகிகள் மருத்துவர் தமிழரசி, அசோக்குமார், ராஜ.தனபாண்டியன், விஜய்வர்மன், மோகன், விருத்தாசலம் ஒன்றியக்குழு துணைத்தலைவர் பூங்கோதை, முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் வடக்குத்து ஜெகன், சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தாதுக் கொள்ளையை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?'-பாமக அன்புமணி கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'Why does the Tamil Nadu government make fun of mineral theft?'-pmk Anbumani asked


'கோவையிலிருந்து கேரளத்திற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?'என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கூடலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இருந்து அண்டை மாநிலமாக கேரளத்திற்கு நூற்றுக்கணக்கான சரக்குந்துகளில் கனிமவளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்படுகின்றன. இதற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தியும், கடத்தல்காரர்களை பிடித்துக் கொடுத்தும் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கட்டாஞ்சி மலை அடிவாரத்தில் உள்ள செல்வபுரம் பகுதியில் கடந்த  26 ஆம் தேதி அதிகாலையில் இரு ஜே.சி.பி எந்திரங்கள் மூலம் கனிமவளங்கள் தோண்டி எடுக்கப்பட்டு 7 சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையறிந்த அப்பகுதி பொதுமக்களும், கட்டாஞ்சி மலை காணுயிர் பாதுகாப்பு சங்கத்தினரும் ஒன்று திரண்டு, கனிம வளங்களை கொள்ளை அடித்துச் சென்ற சரக்குந்துகளை சிறை பிடித்து காவல்துறை, வருவாய்த்துறை, வனத்துறை, கனிம வளத்துறை ஆகியவற்றின் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் காவல்துறையினர் மட்டும் தான் விரைந்து வந்து கடத்தல் சரக்குந்துகளை கைப்பற்றிச் சென்றனர். பிற துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை இதுவரை திரும்பிக் கூட பார்க்கவில்லை.

அண்மைக்காலங்களில் கூடலூர் பகுதி மணல் உள்ளிட்ட கனிமவளக் கொள்ளை நடப்பது இது முதல் முறையல்ல. தமிழ்நாடு முழுவதும் கடந்த 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல்கள் நடைபெற்று கொண்டிருந்த போது கூடலூர் பகுதியிலிருந்து ஏராளமான சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கனிம வளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டன. அதற்கும் முன்பும் பல ஆண்டுகளாக அப்பகுதியிலிருந்து கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுவது தொடர்கிறது. இதுதொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த ஆண்டு வருவாய் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தினர். அதன்பின் கடந்த சில மாதங்களாக ஓய்ந்திருந்த கனிமவளக் கொள்ளை மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் அங்கமான கூடலூர் நகராட்சி மலைதள பாதுகாப்பு அதிகாரம் கொண்ட பகுதியாகும். அங்கு கனிமவளக் கொள்ளை நடப்பது தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அப்பகுதியில் கனிமவளங்களை தோண்டி எடுக்கவும், கடத்திச் செல்லவும் தடை விதித்தது. அதனடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர்களும் பல்வேறு கட்டங்களில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனிமவளக்கொள்ளை நடத்த தடை விதித்தனர். ஆனாலும், அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அதிகாரிகளின் துணையுடன் கனிமக்கொள்ளை தொடர்கிறது.

கூடலூர் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறும் பகுதிகள் அனைத்தும் யானைகளின் வழித் தடமாக திகழ்பவை ஆகும். இந்தப் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறாமல் தடுக்க வேண்டியது வருவாய்த்துறை, வனத்துறை, கனிமவளத்துறை ஆகியவற்றின் கூட்டுப் பொறுப்பு ஆகும். ஆனால், இவற்றில் எந்தத் துறையும் கனிமவளக் கொள்ளையை கட்டுப்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. அதற்கு முதன்மையான காரணம் இந்தத் துறைகளின் உயரதிகாரிகள் ஊழலில் திளைப்பது தான்.

கூடலூர் பகுதியில் மட்டுமின்றி ஒட்டுமொத்த கோவை மாவட்டம் முழுவதும் கனிமவளக் கொள்ளை தடையின்றி நடைபெறுகிறது. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை ஆகிய வட்டங்களிலும், அருகிலுள்ள திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம் வட்டங்களிலும் சட்டவிரோத குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளத்திற்கும் தினமும் ஆயிரக்கணக்கான சரக்குந்துகளில் கல், மண், மணல், கிராவல் என அனைத்துக் கனிம வளங்களும், கடத்தப்படுகின்றன. கனிமவளக் கொள்ளையை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக மட்டும் கொங்கு மண்டலத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுக்கும், அவர்களுக்கு மேல் அதிகார பதவிகளில் இருப்பவர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.1000 கோடி வரை கையூட்டு வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. திமுக ஆட்சி நடந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் கனிமவளக் கொள்ளை மட்டும் தடைபடுவதே இல்லை. இரு கட்சிகளின் ஆட்சிகளிலும் ஒரே குழுவினர் தான் கனிமக் கொள்ளையை முன்னின்று நடத்துகின்றனர். கனிமவளங்கள் அளவில்லாமல் கொள்ளையடிக்கப்பட்டால் அது சுற்றுச் சூழலுக்கு ஈடு செய்ய முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தும். கோவை, திருப்பூர் மாவட்டம் உள்பட தமிழ்நாடு முழுவதும் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், தமிழ்நாடு முழுவதும் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க. முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

“புதிய பேருந்துகளை அரசு வாங்க வேண்டும்” - அன்புமணி ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani Ramadoss says Government should buy new buses

புதிய அரசு பேருந்துகளையும், தமிழக அரசு வாங்க வேண்டும் என்றும், பழைய பேருந்துகளைப் பராமரிக்க, உதிரி பாகங்களை வாங்க அரசு போதிய நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே. நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துனர் அமர்ந்திருந்த கடைசியில் இருந்து மூன்றாவது இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துனரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர் லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார். அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே திருச்சியில் பேருந்தின் இருக்கை கழன்று நடத்துநர் தூக்கி வீசப்பட்டுள்ளார். பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதைத்  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே ஒப்புக் கொண்டிருக்கிறார். 15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் 12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும், அவற்றைப் பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாதது தான் இத்தகைய அவல நிலை ஏற்படுவதற்கு காரணம் ஆகும். இத்தகைய அவல நிலைக்கு தி.மு.க தலைமையிலான திராவிட மாடல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள் கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள் ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள் வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும் பேருந்துகள் மட்டும் 15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும். பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும், உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.