
'அதிமுக-பாஜக கூட்டணியைத் தோற்கடிப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு கூடுதல் முக்கியமானது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுக கூட்டணியில் அதிக தொகுதியில் போட்டியிடுவது' என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம், பேசுகையில், ''போட்டியிட்ட இடங்களை மட்டும் வைத்துக்கொண்டு வாக்கு சதவீதம் இப்படித்தான் இருக்கும் என்று சொல்லக்கூடாது. உதாரணத்திற்கு கன்னியாகுமரியில் நாங்கள் போட்டியிடவில்லை. ஆனால் நிறையத் தொழிலாளி வர்க்கம் நிறைந்திருக்கும் மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டம். ஒரு கட்டத்தில் மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு நேரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் அந்த மாவட்டத்தில் இருந்திருக்கிறார்கள். அதேபோல் கோயம்புத்தூர், திருப்பூர் போன்ற தொழிலாளர்கள் நிறைந்திருக்கின்ற அந்த மாவட்டங்களில் கடந்த காலங்களில் நாங்கள் போட்டியிடவில்லை. அதனால் 2021 தேர்தலில் வாங்கிய வாக்குகளை வைத்துக்கொண்டு, அதில் வெற்றி பெற்றோமா இல்லையா என்பதை மட்டும் வைத்துக்கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வாக்கு வங்கியை மதிப்பிடுவத்து சரியான மதிப்பீடாக இருக்காது.
2026 தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூடுதல் இடங்களில் போட்டியிட வேண்டும். கூடுதலான எண்ணிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்கு செல்ல வேண்டும் என தீர்மானித்திருக்கிறோம். அதற்கான முறையில் எங்கள் அணுகுமுறை இருக்கும். ஒவ்வொரு தோழமை கட்சிகளுமே ஒவ்வொரு தேர்தலிலும் கூடுதலான இடங்களில் போட்டியிட வேண்டும் என்று தான் நினைப்பார்கள். நாங்கள் குறைத்துக்கொள்கிறோம் என்று யாராவது சொல்வார்களா? அதற்கு ஏற்ப திமுக தலைமை என்கிற முறையில் அவர்கள் தான் இந்த கோரிக்கைகளை பேச்சுவார்த்தையின் பொழுது பரிசீலித்து ஒரு பொருத்தமான முடிவு எடுக்க வேண்டும். அதிமுக -பாஜக கூட்டணியை தோற்கடிப்பது என்ற தீர்மானம் எவ்வளவு முக்கியமானதோ அதே அளவுக்கு சிபிஎம் கூடுதல் தொகுதியில் போட்டியிடுவது என்பது எங்களுக்கு முக்கியமானது'' என்றார்.