
இதுவரையிலும் பார்த்திடாத ஒன்றாக, அந்தக் குடியிருப்புப் பகுதியின் பெயர்ப்பலகையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலனின் பெயர் இடம் பெற்றிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் 24 திருநங்கைகளுக்கு குடியிருப்பு வசதி செய்துகொடுத்த மாவட்ட ஆட்சியர் என்பதால், அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக ‘அன்பு ஆட்சியர் வீ.ப.ஜெயசிலன் நகர்’ என்று அவருடைய பெயரையே, அப்பகுதிக்கு திருநங்கைகள் வைத்துவிட்டனர்.
அந்நகர் அமைந்த விதத்தைப் பார்ப்போம்..

ஊரகப் பகுதிகளில் உள்ள ஏழை, குடிசைவாழ் மக்கள் பாதுகாப்பான மற்றும் நிரந்தர வீடுகளில் வசிப்பதற்கு ஏதுவாக ‘குடிசை இல்லா தமிழ்நாடு’ என்ற இலக்கினை அடைந்திடும் வகையில், திருநங்கைகளுக்கு சமுதாயத்தில் ஒரு மதிப்பையும், மரியாதையையும் ஏற்படுத்தித் தரும் பொருட்டு, தமிழக முதல்வரின் முன்னோடித் திட்டமான கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கு, விருதுநகர் மாவட்டம் இ.குமாரலிங்கபுரம் ஊராட்சி, கோவில்புலிகுத்தி கிராமத்தில் 24 வீடுகள் கட்டுவதற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 24 வீடுகளைக் கட்டுவதற்கு ஒரு ‘வெண்டார்’ நியமனம் செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.
மேற்கண்ட நிர்வாக அனுமதி வழங்கப்பட்ட 24 திருநங்கைகளுக்காக, புதிதாகக் கட்டப்பட்ட வீடுகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தருவதற்கு, சமூகத்தின் மீதான தொழில் நிறுவனங்களின் பொறுப்பு நிதியிலிருந்து (CSR Fund), ஒரு வீட்டிற்கு தலா ரூ.1,00,000/-வீதம் 24 வீடுகளுக்கு ரூ.24,00,000/- கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து தரப்பட்டது. அதுமட்டுமின்றி, JJM திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனியாக குழாய்கள் அமைத்து தண்ணீர் தேவையும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இரவுகளில் பயமின்றி நிம்மதியாகத் துயிலும் பொருட்டு, ஒவ்வொரு வீட்டிற்கும் மின்சார வசதி அமைத்துத் தரப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் சிரமமின்றி அன்றாடப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, திருநங்கைகள் குடியிருக்கும் வீடுகளுக்கு, அடிப்படை வசதிகளான சிறுபாலம் அமைத்தல், வாறுகால் மற்றும் பேவர் பிளாக் அமைத்தல் பணிகள், ரூ.21,15,000/- மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றியப் பொது நிதியின் கீழ் செய்து முடிக்கப்பட்டது.

அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்து, திருநங்கைகளுக்கு உரிய வசிப்பிடம் அமைத்துக் கொடுத்து, தமிழ்நாட்டில் ஒரு முன்னுதாரணமாக விருதுநகர் மாவட்டத்தில் குடியிருப்பு வசதி செய்து கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆட்சியர் ஜெயசீலனுக்கு திருநங்கைகள் மத்தியில் நற்பெயர் ஏற்பட்டுள்ளது. மேலும், திருநங்கைகளுக்கு சமூகத்தில் ஒரு அந்தஸ்து கிடைக்கும் விதமாக, உரிய வாழ்வாதாரம் அமைத்துக்கொள்ள, தொழில்/பணி போன்ற ஏற்பாடுகளையும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் முன்னெடுத்து வருகிறார்.
திருநங்கைகளுக்காக புதிதாகக் கட்டப்பட்டுள்ள குடியிருப்பு வீடுகளை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் திறந்துவைத்தது குறிப்பிடத்தக்கது.