சுமார் 50 நாட்களாக மாசு இல்லாத தூய்மையான காற்றை மக்கள் சுவாசித்தனர். காரணம் தொழிற்சாலைகள், போக்குவரத்து வாகனங்கள் ஆகியவற்றின் மூலம் வெளியேற்றப்படும் புகையினால் வளிமண்டலத்தில் மாசு ஏற்படும். இதனால் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்து வெயிலின் தாக்கம் அதிகரிக்கவும் இதனால் மழையளவு குறையும் காரணம் என்று கூறப்பட்டது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாகனங்களின் புகையினால் ஏற்பட்ட மாசு காரணமாக டெல்லியில் சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு புகை மையமாகவும், அதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து டெல்லியில் வாகனங்களை ஷிப்ட் முறையில் இயக்குமாறு அம்மாநில அரசு உத்தரவு போட்டு அதை செயல்படுத்தியது.
ஆனால் இப்போது இந்தியா முழுவதும் மாசற்ற நல்ல காற்றை சுவாசித்து வருகிறார்கள். இந்த கரோனா மூலம் நடந்த மிக நல்ல செயல்களில் காற்றில் மாசு குறைந்ததும் மிக முக்கியமான ஒன்று.
இப்படிப்பட்ட இந்த நேரத்தில் விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள மேல் தனியாலம்பட்டு கிராமத்தின் அருகே பெரிய பெரிய விஐபிக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போதும், வசதி படைத்தவர்கள் திருமண நிகழ்வின் போது மணமக்கள் கைகளில் வைத்திருப்பதற்கும் விருந்தினர்களை வரவேற்கும் மரியாதை நிமித்தமாக அளிக்கப்படும் பொக்கே என்கிற பூங்கொத்துக்கள் இந்த ஊரில் தயாரிக்கப்படுகின்றன. அதற்கான தயாரிப்பு கம்பெனி இங்கு உள்ளது. அதன் மூலம் பொக்கே தயாரித்து பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்த கம்பெனியில் இருந்து வெளியாகும் பிளாஸ்டிக் கழிவுகளை மொத்தமாக சேர்த்து அவ்வப்போது தீயிட்டு கொளுத்துவார்கள். அதேபோன்று இன்று காலை பிளாஸ்டிக் கழிவுகளுக்கு தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். அதில் இருந்து பெருமளவில் கரும்புகை வானில் பரவும் காட்சி பார்ப்பதற்கு அருவருப்பாக இருந்தது.
அதோடு அந்த பகுதியில் உள்ள மக்களுக்கும் இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இனிமேல் இப்படித்தான் எல்லாம் தலைகீழாக நடக்கும். எல்லாம் பழைய நிலைக்கு மாற போகிறது என்கிறார்கள். திருவெண்ணைநல்லூர் மக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பேரளவிற்குதான் எப்போதும் செயல்படும் இப்போதும் அப்படித்தான் செயல்படுகிறது என்று நொந்துகொள்கிறார்கள் சூழலியல் ஆர்வலர்கள்.