Skip to main content

மயான வசதி இல்லாத கிராமம்; சடலத்துடன் 3 மணி நேரம் காத்திருந்த அவலம்

Published on 25/10/2023 | Edited on 25/10/2023

 

Villagers suffering without a graveyard near Usilampatti

 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டிக்கு அருகே அமைந்துள்ள உத்தப்பநாயக்கனூர் பஞ்சாயத்துக்குட்பட்டது உ.புதுக்கோட்டை கிராமம். இந்தப் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தப் பகுதி மக்களுக்கு குடிநீர், மின்சாரம், சாலை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் முறையாக கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு துயரங்களுக்கு ஆளாகி வருகின்றனர். 

 

மேலும், இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அரசு அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால், அந்தப் புகாரை எடுத்துக்கொண்ட அதிகாரிகள் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.  அதே வேளையில், உ.புதுக்கோட்டை கிராமத்தில் மயான வசதி கூட இல்லாமல் அப்பகுதி மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் இறந்தவர்களின் உடல்களைப் பொது வெளியிலேயே அடக்கம் செய்ய வேண்டிய அவல நிலை நீண்ட காலமாகத் தொடர்கிறது.

 

இத்தகைய சூழலில், இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன். 50 வயது மதிக்கத்தக்க இவர் தான் வசிக்கும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கூலி வேலை செய்து வந்தார். இதற்கிடையில், மனோகரனுக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டிருந்தது.  இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மனோகரன் கடந்த 23 ஆம் தேதியன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதன்பிறகு, அவருடைய உடல் ஊர் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு அனைவரும் ஒன்றுகூடி இரங்கல் தெரிவித்தனர்.

 

இந்நிலையில், உ.புதுக்கோட்டை கிராமத்தில் மயான வசதி இல்லாத காரணத்தால் ஊருக்கு ஒதுக்குப்புறமான பொதுவெளியில் அவருடைய உடலை அடக்கம் செய்ய குழி தோண்டப்பட்டது. இத்தகைய சூழலில், யாரும் எதிர்பாராத நேரத்தில் அந்த பகுதியில் பலத்த  மழை பெய்தது. இதையடுத்து, அங்கிருந்த ஊர்மக்கள் கொட்டும் மழையிலும் மனோகரனின் உடலைத் தூக்கிக்கொண்டு மயானத்திற்கு வந்தனர். அப்போது, அங்கு பெய்த கனமழையால் மனோகரனின் உடலை அடக்கம் செய்வதற்காகத் தோண்டப்பட்ட குழியில் மழைநீர் தேங்கியுள்ளது. அதுமட்டுமின்றி, அந்தப் பகுதியில் கூரை கூட இல்லாத காரணத்தால் ஒரு தார் பாயின் கீழ் மனோகரனின் உடலைப் பாதுகாத்துக்கொண்டு மழை நிற்கும் வரை சுமார் 3 மணி நேரம் காத்துக்கொண்டிருந்தனர். அதன்பிறகு, மழை நின்றதை அடுத்து மனோகரனின் உடலை அடக்கம் செய்தனர். 

 

இதற்கிடையில், இறந்துபோன மனோகரனின் உடல் மழையால் அவலமடைந்த நிலையில் காணப்பட்டது அங்கிருந்தவர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அப்போது, அங்கிருந்த ஒருவர் இச்சம்பவத்தை தனது செல்போனில் வீடியோ எடுத்து வாட்சப்பில் லீக் செய்துள்ளார். தற்போது, இந்த வீடியோ காட்சிகள் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், உ.புதுக்கோட்டை கிராமத்திற்குப் பொது மயான வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் எனப் பல்வேறு தரப்பைச் சேர்ந்தவர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுரையில் இளைஞர்கள் அட்டூழியம்; வெளியான சிசிடிவி காட்சிகள்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
madurai incident Released CCTV footage

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) சித்திரை திருவிழாவின் போது மது போதையில் இருந்த 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒத்தக்கடை பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்குவது, பெண்கள் மீது தாக்குதல் நடத்துவது, அப்பகுதியில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்குவது, வீட்டிற்கு வெளியே உள்ள இருசக்கர வாகனங்களைத் தள்ளிவிட்டு உடைப்பது, கடைகளை சேதப்படுத்துவது எனத் தொடர்ந்து அராஜகங்களில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இத்தகைய சூழலில் தான் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கான் முகமது கான், கடந்த 22 ஆம் தேதி இரவு தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சுந்தரம் நகர் பகுதியில் வந்துள்ளார். அப்போது இந்த இளைஞர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் கான் முகமது கான் பலத்த காயம் அடைந்தார். அதன் பின்னர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையே இந்த இளைஞர்கள் ஐயப்பன் நகர் பகுகுதியில் சென்று அங்குள்ள இரண்டு கடைகளை அடித்து நொறுக்கினர். மேலும் கடையில் இருந்த பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

மதுரையில் ‘தமிழ்க் கவிஞர் நாள்’ கொண்டாட்டம் - தமிழக அரசு தகவல்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'Tamil Poet's Day' Celebration in Madurai - Tamil Nadu Government Information!

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்ப்பில் பாவேந்தர் பாரதிதாசனின் 133 ஆம் பிறந்தநாள் நிகழ்வு தமிழ்க் கவிஞர் நாளாக நாளை (29.04.2024) காலை 10.30 மணிக்கு மதுரை உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாக அரங்கில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்றம் வழங்கும் கலை நிகழ்ச்சியோடு நிகழ்வு தொடங்குகிறது. தொடக்க விழாவில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஔவை அருள் நோக்கவுரை ஆற்றவுள்ளார். இந்நிகழ்விற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா தலைமையுரை வழங்கவுள்ளார்.

பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் தலைமையில் 'பாரதிதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது தமிழ் உணர்வே! சமுதாய உயர்வே' என்ற தலைப்பில் பட்டிமன்றமும், புலவர் செந்தலை கவுதமன் தலைமையில் 'பாவேந்தர் கண்ட படைப்புக்களங்கள்' என்ற தலைப்பில் கருத்தரங்கமும் முனைவர் சந்திர புஸ்பம் இசையரங்கமும் கவிஞர் நெல்லை ஜெயந்தா  தலைமையில் 'பாவேந்தரின் பார்வைகள்' என்ற தலைப்பில் கவியரங்கமும் நடைபெறவுள்ளது. மதுரை குரு மருத்துவமனையின் மருத்துவர் ச.கு.பாலமுருகன் நிறைவுரை வழங்கவுள்ளார். இந்நிகழ்வில் தமிழறிஞர்களும் பேராசிரியர்களும் அரசுப்பணியாளர்களும் தமிழார்வலர்களும் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் பாரதிதாசன். பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன் புரட்சிக்கவி என்றும், பாவேந்தர் என்றும் அழைக்கப்பட்டார். தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர் ஆவார். தமிழாசிரியர், கவிஞர், திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர் ஆவார்.