Skip to main content

வேங்கைவயல் விவகாரம்: டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள நீதிபதி உத்தரவு

Published on 04/07/2023 | Edited on 04/07/2023

 

vengaivayal issue judge order dna test

 

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் என பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

 

புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் வேங்கைவயலைச் சேர்ந்த 8 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்த ஏற்கனவே உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால், அந்த 8 பேரும் டிஎன்ஏ பரிசோதனை நடத்த எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இது குறித்த வழக்கில் கடந்த 1 ஆம் தேதி புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணையும் நடைபெற்றது. அப்போது அவர்கள் 8 பேரும் ஆஜராகி டிஎன்ஏ பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கான காரணத்தை வாக்குமூலமாக அளித்திருந்தனர்.

 

இதையடுத்து வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி 8 பேரையும் டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள உத்தரவிட்டுள்ளார். நாளை 8 பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள ரத்த மாதிரிகளை வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்