Skip to main content

ஒருவர்கூட இல்லாத அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம்!!! வேதாரண்யம் அவலம்

Published on 13/10/2018 | Edited on 13/10/2018
vedharanyam


 

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் கடந்த  2015ம்  ஆண்டு தொடங்கப்பட்ட அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் ஒருவர் கூட படிக்கவில்லை என்றும் துவங்கப்பட்ட நோக்கம் கேள்விக்குறியாகி வருவதை கண்டும்  சமூக ஆர்வலர்கள் கவலைக் கொள்கிறார்கள்.
 

தமிழகத்தில்  இடைநிலை ஆசிரியர்களை உருவாக்கும் நோக்கத்தோடு 2015- ஆம் ஆண்டு, அப்போதைய மாநில அரசு ஒரு புதிய திட்டத்தை உருவாக்கியது. அதன்படி ஒன்றிய அளவில் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை  தொடங்கி நடத்த திட்டமிடப்பட்டது. முதல்கட்டமாக மாநிலத்தின் 7 இடங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் வேதாரண்யத்திலும் செயல்பட அனுமதிக்கப்பட்டது. தற்காலிகமாக எஸ்.கே. சுப்பையா அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனம் தொடங்கபட்டது.


இப்பயிற்சி நிறுவனத்திற்கு முதல்வர், விரிவுரையாளர்கள் உள்ளிட்ட 15 பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டதோடு, மாணவர் சேர்க்கையை தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இரண்டாண்டுகள் இடைநிலை ஆசிரியர் பயிற்சி வழங்கும் இந்த நிறுவனத்தில், ஆண்டுதோறும் 50 மாணவர்களை சேர்த்து பயிற்சி அளிக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இன்றுவரை ஒருவர்கூட படிக்கவில்லை என்பது தான் கவலைக்கான காரணமாக இருக்கிறது.
 

பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி  அளிக்க அரசு முன்வந்தபோதிலும், இங்கு சேர்ந்து படிக்க மாணவர்கள் முன்வரவில்லை. ஆரம்பத்தில்  6 பேர் சேருவதற்கு முன்வந்தனர்,  அவர்களும் டி.சி. வாங்கிக்கொண்டு சென்றுவிட்டனர். 


வேதாரண்யம் நாகை சாலையில் செயல்பட்டு வந்த மாவட்ட அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் அரசின் கொள்கை முடிவால் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு நிரந்தரமாக மூடப்பட்டது. இந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தால் வேதாரண்யம் பகுதியில் அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் உருவாகவும், அதன் வாயிலாக அரசுப் பள்ளிகள் தவிர 64 -க்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகள் உருவாகவும் காரணமாக அமைந்தன. மூடப்பட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் பல ஆண்டு கோரிக்கையாக இருந்து வந்தது.


மாநில அரசின் கல்விக் கொள்கையின்படி, தமிழகத்தில் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் புற்றீசல்போல் அதிக எண்ணிக்கையில் அதிரடியாக திறக்கப்பட்டன. வேதாரண்யம் பகுதியில் மூன்று தனியார் கல்வியியல் கல்லூரிகளும், நான்கு இடங்களில் இடைநிலை ஆசிரியர் பயிற்சிக்கான தனியார் நிறுவனங்களும் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. இதனால், மற்ற இடங்களை ஒப்பிடும்போது இந்த பகுதியில் ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக  உள்ளது.
 

இந்த சூழலில் ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு முறை கொண்டுவரப்பட்டதால் ஆசிரியர்  பயிற்சிக்கான மோகமும் குறைந்தது, தனியார் நிறுவனங்களே மாணவர்கள் சேர்க்கை கிடைக்காமல் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. 
 

இந்த நிலையில், 35 ஆண்டுகளுக்கு பிறகு இப்பகுதியில் தொடங்கப்பட்டுள்ள அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனவத்தால் ஒரு பயனும் கிடையாது. இந்த புதிய ஆசிரியர் பயிற்சி நிறுவனத்துக்கு, ஏற்கனவே ஆசிரியர் பயிற்சி நிறுவனம் செயல்பட்ட பகுதியில் ரூ. 2 கோடியே 45 லட்சம் மதிப்பில் நிரந்தரக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் பயிற்சி பெறுவதற்குத்தான் மாணவர்கள் இல்லை. கட்டப்பட்ட கட்டடம் பயன்பாடின்றியே உள்ளதால், அதை பயன்பாட்டுக்கு கொண்டு வர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ".என்பதே சமூக ஆர்வலர்கள் பலரின் வலியுறுத்தலாக இருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆசிரியர் நடத்திய கொடூர சோதனை; அவமானம் தாங்காமல் மாணவி எடுத்த விபரீத முடிவு!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
A cruel experiment conducted by the teacher to student in karnataka

கர்நாடகா மாநிலம், பாகல்கோட்டை பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், பள்ளியில் இருந்து கடந்த 16ஆம் தேதி வீடு திரும்பினார். வீடு திரும்பிய அவர், வீட்டில் உள்ளவர்கள் யாரிடமும் பேசாமல் சோகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, வெளியே சென்ற மாணவியின் பெற்றோர், வீட்டுக்கு வந்து பார்த்த போது, தங்களது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாகல்கோட்டை போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், மாணவி படித்த பள்ளியில் ஆங்கில ஆசிரியராக ஜெயஸ்ரீ என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், ஜெயஸ்ரீ வைத்திருந்த பையில் இருந்த ரூ.2,000 பணத்தை காணவில்லை எனக் கூறப்படுகிறது. இதில் சந்தேகமடைந்த ஆசிரியர், 8ஆம் வகுப்பு படிக்கும் அந்த மாணவியை அழைத்து கேட்டுள்ளார். ஆனால், அந்த மாணவி, தான் அந்த பணத்தை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். மாணவி உறுதியாக கூறியும் சந்தேகம் அடங்காத ஜெயஸ்ரீ, சக மாணவிகள் முன்னிலையில் மாணவியின் ஆடைகளை களைந்து சோதனை செய்துள்ளார்.

இதில், மன உளைச்சல் அடைந்த மாணவி, பள்ளி முடிந்ததும் மாலை வீடு திரும்பியுள்ளார். மேலும், அவர் சோகம் தாங்காமல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, ஆங்கில ஆசிரியர் ஜெயஸ்ரீ மீது வழக்குப்பதிவு செய்து, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

கல்வித்துறையில் மற்றொரு சாதனை; தனியார் பள்ளியின் புதிய முயற்சி!

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
Private school's introduced AI teacher in kerala

உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது. பெரும்பாலான துறைகளில் தற்போது செயற்கை நுண்ணறிவு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இது நமது வேலைகளைச் சுலபமாகவும் திறம்படவும் செய்து முடிக்கிறது.

இந்த செயற்கை நுண்ணறிவு வரவால், தகவல் தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, மனிதர்கள் தொழில்நுட்பத்தில் செய்யக்கூடிய வேலைகளை, செயற்கை நுண்ணறிவின் மூலம் மிகவும் எளிதாக செய்ய முடியும். மேலும், இது கவிதைகள், கட்டுரைகள் மற்றும் கதைகள் எழுதும் திறன் படைத்தது என்பதுடன் மனிதனைப் போன்று கணினி குறியீடுகளையும் இதனால் எழுத முடியும். இந்த ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் கணினி உள்ளிட்ட இயந்திரங்களுக்கு மனிதர்களைப் போன்ற சிந்தனைகளைக் கொடுக்க விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர். 

அந்த வகையில், இந்தியாவில் முதல் முறையாக கேரள மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ‘ரோபோ’ ஆசிரியரை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில்  தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கற்பிக்கும் பணிக்காக ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்ட ‘ரோபோ’ ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘ஐரிஸ்’ (IRIS) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ ஆசிரியர், பள்ளி மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், மாணவர்களின் சந்தேகங்களையும் தீர்த்து வைக்கிறது. 

3 மொழிகளில் பேசவும், மாணவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும் திறன் கொண்ட இந்த ரோபோவின் கால்களுக்கு அடியில் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சக்கரங்கள் மூலம், ரோபோ ஆசிரியர் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு நகர்ந்து செல்ல முடியும். இந்த ரோபோவை ‘மேக்கர்ஸ் லேப்’ என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.