Skip to main content

அதிமுக ஆட்சியில் ஒதுக்கப்படாத நிதி! திமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டுவிழா! சிதம்பரத்தில் அமையும் நூலகம்! 

Published on 20/06/2022 | Edited on 20/06/2022

 

Unallocated funds in the AIADMK regime! Foundation stone laying ceremony under DMK rule! Library located in Chidambaram!

 

சிதம்பரத்தில் ரூ.48 லட்சம் செலவில் நூலகம் கட்டும் பணிக்காக அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி திங்கள் கிழமை நடைபெற்றது.  


சிதம்பரம் நகரத்தில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக காசு கடைத்தெருவில் சிதம்பரம் கிளை நூலகம் தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்தது. அந்தக் கட்டிடம் பழுது ஏற்பட்டு மழைக்காலங்களில் மழை நீர் ஒழுகி பல லட்ச எண்ணிக்கையில் உள்ள புத்தகங்கள் வீணாகும் சூழல் ஏற்பட்டது. மேலும் நூலகத்திற்கு ஏற்ற சரியான இடவசதி இல்லாததால் நூலகத்தை அரசு இடத்தில் நவீன முறையில் அமைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது.


இதனை தொடந்து 2014-ல் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக உள்ள கே. பாலகிருஷ்ணன் பணியாற்றினார். அதே நேரத்தில் சிதம்பரம் நகர மன்றத் தலைவராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த பெளஜியா பேகம் நகர் மன்ற தலைவராக பணியாற்றினார். அப்போது நகராட்சி அலுவலகத்திற்கு எதிரே நகராட்சிக்கு சொந்தமான 4 ஆயிரம் சதுர அடி காலி இடத்தை நூலகம் கட்டுவதற்கு இலவசமாக தர வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.


அதனடிப்படையில் அப்போதிருந்த நகர்மன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் தீர்மானத்தின் பெயரில் 2014-ஆம் ஆண்டு நூலகம் கட்ட 4 ஆயிரம் சதுர அடி இடம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கிளை நூலகமாக செயல்பட்ட நூலகம் வருவாய் கோட்ட நூலகமாக தரம் உயர்த்தப்பட்டது.


கடந்த பல ஆண்டுகளாக நூலகம் கட்ட அதிமுக அரசு நிதி ஒதுக்கீடு செய்யாததால் நூலகம் கட்டமுடியாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், கடந்த ஒரு ஆண்டுக்கு முன் சிதம்பரம் சார் ஆட்சியராக பணியாற்றிய மதுபாலன் சிதம்பரத்தில் நவீன முறையில் நூலகம் அமைய வேண்டும் என்ற நோக்கில் நமக்கு நாமே திட்டம் மூலம் சிதம்பரம் பகுதியில் உள்ள வணிகர்கள் சங்கம், நகை வியாபாரிகள் சங்கம், பொதுநல அமைப்புகளை ஒருங்கிணைத்து நூலகம் கட்டுவதற்கு மக்கள் பங்களிப்பு நிதியாக ரூ 16 லட்சம் நிதி திரட்டியுள்ளார். பின்னர் அவர் பணி உயர்வு பெற்று சென்றார். 


இதனை தொடர்ந்து, நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ரூ. 32 லட்சம் மாணியமாக அரசு வழங்கியதால் மொத்தம் ரூ. 48 லட்சத்தில் 1800 ச.அடியில் நூலகத்திற்கு தரைதளம் நவீன முறையில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் நகர் மன்ற தலைவர் செந்தில்குமார் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இவருடன் சிதம்பரம் நகர மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன், நகராட்சி ஆணையர் அஜிதா பர்வீனா, பொறியாளர் மகாராஜன், மூத்த நகர்மன்ற உறுப்பினர்கள் ஜேம்ஸ் விஜயராகவன், ரமேஷ், அப்பு. சந்திரசேகரன், மணி, வெங்கடேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர்மன்ற உறுப்பினர் தஸ்லீமா, காங். மக்கீன் உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர். நூலகத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியை அறிந்த அனைத்து தரப்பு மக்களும் இதனை வரவேற்றுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்