Skip to main content

சேலத்தில் கள்ள லாட்டரி விற்பனையாளர்கள் இருவர் குண்டர் சட்டத்தில் கைது!

Published on 10/03/2021 | Edited on 10/03/2021

 

Two counterfeit lottery sellers in Salem

 

சேலத்தில் கள்ள லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

சேலம் தாதகாப்பட்டியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய நண்பரான சேலம் சீலநாயக்கன்பட்டி கே.ஆர்.நகரைச் சேர்ந்த சதீஸ் என்கிற சதீஸ்குமார் (42) கள்ளச் சந்தையில், அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகளை விற்று வந்தார்.

 

கடந்த பிப். 23 ஆம் தேதி, கோவிந்தராஜிடம் ஒரு வெள்ளைத்தாளில் லாட்டரி சீட்டுகளின் எண்கள் என்று கூறி சில எண்களை எழுதிக் கொடுத்துள்ளார் சதீஸ்குமார். அந்த எண்களுக்குப் பரிசு விழும் என்று சொல்லி ஏமாற்றி பணம் பறித்துள்ளார்.

 

அப்போது அங்கு வந்த வேறு இருவர், தங்களுக்கு குறித்துக் கொடுத்த எண்களுக்குப் பரிசுத்தொகை விழவில்லை என்று கூறி, சதீஸ்குமாரிடம் பணத்தைத் திரும்பக் கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த சதீஸ்குமார் கத்தி முனையில் அவர்களை மிரட்டியுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் சதீஸ்குமாரை, அன்னதானப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்ற உத்தரவின்பேரில் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

 

விசாரணையில், கடந்த 12 ஆண்டுகளில் இதுபோல லாட்டரியில் அதிக பரிசுத்தொகை கிடைக்கும் என்று கூறி பலரை மோசடி செய்திருப்பதும், இது தொடர்பாக அவர் மீது அன்னதானப்பட்டி காவல்நிலையத்தில் மட்டும் 25 புகார்கள் பதிவு செய்யப்பட்டு இருப்பதும் தெரிய வந்தது.

 

Two counterfeit lottery sellers in Salem

 

இந்த வழக்குகளில் பலமுறை அவர் நீதிமன்றத்தில் அபராதம் செலுத்திவிட்டு வெளியே வந்த பிறகு, மீண்டும் மீண்டும் பலரையும் லாட்டரி வலையில் வீழ்த்தி பணம் பறிப்பதையே தொழிலாக இருந்து வந்துள்ளார்.

 

இவரைப் போலவே, சேலம் மாவட்டம் ஓமலூர் தேக்கம்பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரிடம் கருப்பூரைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர், ஒரு துண்டு தாளில் சில எண்களைக் குறிப்பிட்டு, அது லாட்டரி சீட்டுகளின் எண்கள் என்றும், கட்டாயம் பரிசு விழும் என்று கூறியும் பணம் பறித்துள்ளார்.

 

ஆனால் சொன்னபடி அந்த எண்களுக்குப் பரிசு விழாததால் தன்னுடைய பணத்தைத் திருப்பிக் கேட்டுள்ளார் ராஜேந்திரன். அப்போது அவரை மாரியப்பன் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மாரியப்பன், தற்போது சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீதும் கருப்பூர் காவல் நிலையத்தில் 14 லாட்டரி மோசடி வழக்குகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளன.

 

தொடர்ந்து பொய் வாக்குறுதிகள் மூலம் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வந்த சதீஸ்குமார், மாரியப்பன் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல்துறை துணை ஆணையர் சந்திரசேகரன் பரிந்துரை செய்தார். அதன்பேரில், அவர்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய சேலம் மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் குமார், மார்ச் 8 ஆம் தேதி உத்தரவிட்டார். இருவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அதற்கான கைது ஆணை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரிடமும் நேரில் வழங்கப்பட்டது.

 

இவர்களில் சதீஸ்குமார் ஏற்கனவே 2014, 2016, 2018 ஆண்டுகளில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது 4வது முறையாக கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.