
மணப்பாறை அருகே இறந்துவிட்டதாகக் கருதி அழுதபோது இளைஞர் கண் விழித்ததால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள மருங்காபுரி ஒன்றியம், கண்ணூத்து அருகிலுள்ள பொன்னம்பட்டியைச் சேர்ந்தவர், காமநாயக்கர் மகன் ஆண்டி நாயக்கர்(23). இவர் வீட்டில் தனியாக இருந்தபோது உர மருந்தை அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். பிறகு அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டு மணப்பாறை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற போதிய பொருளாதார வசதி இல்லை எனக்கூறிய காமநாயக்கர், தன் மகனை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வகையில் மாற்றம் செய்து தர வலியுறுத்தியுள்ளார். அதனைத்தொடர்ந்து, தனியார் மருத்துவமனை நிர்வாகம், மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்குப் பரிந்துரை செய்து, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் செயற்கை சுவாசக் கருவிகளுடன் ஆண்டி நாயக்கரை அனுப்பிவைத்தது.

அப்போது மனக்குழப்பத்துக்கு ஆளான காமநாயக்கர், அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல விரும்பாமல், தனது பொன்னம்பட்டி வீட்டிற்கு மகனை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஆம்புலன்ஸிலிருந்து இறக்கப்பட்ட ஆண்டி நாயக்கர் உடலில் எவ்வித அசைவுமில்லை. இதனைக்கண்ட காமநாயக்கரும், உடனிருந்தவர்களும், ஆண்டிநாயக்கர் இறந்துவிட்டதாக நினைத்து கதறி அழுதனர். அப்போது ஆண்டிநாயக்கர் மூச்சுவிட்டு கண் விழித்ததால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், மீண்டும் 108 ஆம்புலன்ஸை வரவழைத்து ஆண்டிநாயக்கரை திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இறந்துவிட்டதாகக் கருதி அழுதபோது இளைஞர் கண்விழித்தது, பொன்னம்பட்டி மக்களை வியப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியிருக்கிறது.