Skip to main content

தமிழ்வழிக் கல்வி- விவரம் கோரியது டிஎன்பிஎஸ்சி!

Published on 31/07/2021 | Edited on 31/07/2021

 

tnpsc press release examiners certificates uploading

 

அரசு வேலைவாய்ப்பில் தமிழ்வழிக் கல்வி பயின்றோருக்கு இடஒதுக்கீடு வழங்க ஏதுவாக விவரம் கோரியது டிஎன்பிஎஸ்சி.

 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சியின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா இன்று (31/07/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தேர்வாணையத்தால் கடந்த 03/01/2021 அன்று நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - 1 (தொகுதி-1)இல் அடங்கிய பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வெழுதிய விண்ணப்பதாரர்களுள் தமிழ் வழியில் பயின்றுள்ளதாக தனது இணையவழி விண்ணப்பத்தில் கோரியுள்ள விண்ணப்பதாரர்கள், கீழ்க்காணும் கல்வித் தகுதிகளைத் தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் 05/08/2021 அன்று வெளியிடப்படவுள்ள உரிய படிவத்தில், 16/08/2021 முதல் 16/09/2021 வரை (வேலை நாட்களில்) ஸ்கேன் செய்து தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் டி.வி. நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும். 

 

1. பள்ளி முதல் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை. 
2. மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு அல்லது பட்டயப்படிப்பு.
3. பட்டப்படிப்பு. 

 

இதுகுறித்த தகவல், உரிய விண்ணப்பதாரர்களுக்கு அதாவது விண்ணப்பத்தில் தமிழ் வழியில் கல்விப் பயின்றதாகக் குறிப்பிட்டு முதல்நிலைத் தேர்வு எழுதியவர்களுக்கு மட்டும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கப்படும். இதைத் தவிர தேர்வாணைய இணையதளம் மூலமாகவும் இதுகுறித்த குறிப்பாணையினை 05/08/2021 முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 

 

மேற்குறிப்பிட்ட நாட்களுக்குள் விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவில்லை எனில் அவர்களது விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது." இவ்வாறு செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்