Skip to main content

மீண்டும் ஒரு ஆணவக்கொலை... குடும்பமே இளம் பெண்ணை வெட்டிக் கொன்ற கொடூரம்!

Published on 08/05/2022 | Edited on 08/05/2022

 

thoothukudi second marriage incident... police investigation

 

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் காவல் சரகத்தில் வருகிற கருங்குளம் அருகே உள்ள தாதன்குளத்தைச் சேர்ந்தவர் சுடலைமுத்து. இவரின் முதல் மனைவி காளியம்மாள். இவர்களின் மகள் மகள் மீனா (21). தாய் காளியம்மாள் இறந்ததையடுத்து. சுடலைமுத்து முப்புடாதி என்பவரை 2 வது திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மாயாண்டி என்ற மகன் உள்ளார்.

 

இந்நிலையில் மீனாவிற்கு இசக்கிபாண்டி என்பவருடன் திருமணம் நடந்தது. ஆனால் கருத்துவேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்த மீனா, நெல்லை மாவட்டத்தின் நாங்குநேரியைச் சேர்ந்த முத்து என்பவரை 2 வது திருமணம் செய்திருக்கிறார். இந்த திருமண விவகாரம் அவரது குடும்பத்தார்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கிறது. ஆனாலும் அரசல் புரசலாகக் கேள்விப்பட்ட மீனாவின் பெற்றோர்களுக்குக் கடுமையான ஆத்திரம், அதனை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் தெரிகிறது.

 

இதனிடையே நேற்று முன்தினம் இரவு தாதன்குளத்தில் நடந்த கோவில் கொடை விழாவிற்கு மீனா தன் உறவினர் பார்வதியின் வீட்டிற்கு வந்திருக்கிறார். தகவலறிந்த மீனாவின் தந்தை சுடலைமுத்து, சித்தி முப்புடாதி, தம்பி மாயாண்டி, உறவினரான வீரம்மாள், இவரது மகன் முருகன் ஆகியோர் சென்று மீனாவிடம் அவளது 2 வது திருமணம் பற்றிக் கேட்டிருக்கிறார்கள். அது சமயம் மீனாவிற்கும், குடும்பத்தார்களுக்கும் வாக்குவாதம் முற்றி, தகராறு ஏற்பட்டிருக்கிறது. ஆத்திரமடைந்த சுடலைமுத்து உள்ளிட்ட குடும்பத்தார் மீனாவை அரிவாளால் சரமாரியாக வெட்டி இருக்கிறார்கள். இதில் பலத்த காயமடைந்து இரத்தச் சகதியில் சரிந்த மீனா சம்பவ இடத்திலேயே பலியானார்.

 

thoothukudi second marriage incident... police investigation

 

தகவலறிந்த செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் அருள், எஸ்.ஐ.கருத்தையா உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்தவர்கள், மீனாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள், வழக்குப்பதிவு செய்து சுடலைமுத்து மாயாண்டி முப்புடாதி, வீரம்மாள் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். தப்பித் தலைமறைவான முருகனை தேடி வருகின்றனர்.

 

பெற்ற மகளை குடும்பமே வெட்டிக் கொன்ற சம்பவம் செய்துங்கநல்லூர் ஏரியாவை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. அண்மையில் அண்டை மாநிலமான தெலுங்கானாவில் மதம் மாறி திருமணம் செய்து கொண்டதற்காக மணமகன் மணப்பெண்ணின் சகோதரர்களால் சாலையில் வெட்டி ஆணவப் படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் தூத்துக்குடியில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்