Skip to main content

மனைவி போட்ட ப்ளான்; சத்தமில்லாமல் முடித்த ஆண் நண்பர் - நடுநடுங்க வைக்கும் சம்பவம்!

Published on 08/05/2024 | Edited on 08/05/2024
 Woman incident her husband along with her male friend

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அமைந்துள்ளது கொமாரபாளையம் கிராமம். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல். 46 வயதான இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செல்வி. இவருக்கு வயது 36. இந்தத் தம்பதிக்கு 17 வயதில் மகன் உள்ளார். மேலும், பழனிவேல் தனக்கு கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை மேம்படுத்தி வந்தார்.

இந்நிலையில், கடந்த 2 ஆம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்ற பழனிவேல், அன்றைய தினம் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர், பழனிவேலை பல்வேறு இடங்களில் தேடிவந்த நிலையில் அவர் ஆயிபாளையம் அருகே உள்ள ரயில்வே பாலத்தின் கீழ் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்தச் சம்பவம் கொமாரபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே நேரம், இந்தத் தகவலை தெரிந்துகொண்ட பழனிவேலின் குடும்பம் அவரது உடலை பிடித்துக்கொண்டு கதறி துடித்தனர்.

இந்நிலையில், இதுகுறித்து தகவலறிந்த வெண்ணந்தூர் போலீசார் உயிரிழந்த பழனிவேலின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பழனிவேல் கொல்லப்பட்ட விவகாரத்தில் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அப்போது, போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பழனிவேலின் மனைவி செல்விக்கும், ஊராட்சி மன்ற தலைவரான அதிமுகவை சேர்ந்த கந்தசாமி என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்தது தெரியவந்தது. இதனிடையே, போலீசாரின் சந்தேகம் செல்வியின் பக்கம் திருமபியது.

இதையடுத்து, சந்தேக வளையத்தில் சிக்கிய செல்வியைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது, போலீசாரின் கிடுக்கிப்பிடி கேள்விகளில் சிக்கிய செல்வி பல்வேறு தகவல்களை கூறியிருக்கிறார். அந்த நேரத்தில், இதைக் கேட்ட போலீசார்.. அதிர்ச்சியில் உறைந்தனர். அதில், கொலை செய்யப்பட்ட பழனிவேலும் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமியும் அவரது நண்பர்களும் அடிக்கடி கந்தசாமி வீட்டுக்கு சென்று வந்தபோது. பழனிவேலின் மனைவி செல்விக்கும் கந்தசாமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தப் பழக்கம் ஒருகட்டத்தில் திருமணத்தை மீறிய உறவாக மாறி இருவரும் அடிக்கடி சந்தித்து தனிமையில் இருந்து வந்தனர். ஒருகட்டத்தில், இந்த விவகாரம் பழனிவேலுக்கு தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பழனிவேல் தனது மனைவி செல்வியைக் கண்டித்தது மட்டுமல்லாமல் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நாளடைவில், இது கந்தசாமி - செல்வி இருவருக்கும் எரிச்சலை உண்டாக்கியது. நாளுக்கு நாள் இவர்களுக்குள் ஏற்பட்ட கோபம் ஒருகட்டத்தில் கொலை வெறியாக மாறியுள்ளது. தங்களுடைய உறவுக்கு தடையாக இருக்கும் பழனிவேலை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர்.

அதன்படி, மனைவி செல்வியின் தூண்டுதலின் பேரில் ஆண் நண்பர் கந்தசாமி, சேலத்தைச் சேர்ந்த கூலிப்படை ரவி ஆகிய 3 பேரும் சேர்ந்து பழனிவேலை தனியாக அழைத்து பேசியுள்ளனர். அந்த நேரத்தில், இவர்கள் மூவரும் மது குடிக்கும்போது யாரும் எதிர்பாராத சமயத்தில் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் பழனிவேலை சரமாரியாக குத்தி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, இந்தக் கொலை சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட மனைவி செல்வி, கூலிப்படை ரவி மற்றும் தலைமறைவாக இருந்த ஆண் நண்பர் கந்தசாமி ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைக்கு அவர்கள் மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சார்ந்த செய்திகள்