Skip to main content

விடுதியில் தங்கி படித்துவரும் மாணவிகள் 8 பேருக்கு திடீர் வயிற்றுப்போக்கு! 

Published on 09/10/2021 | Edited on 09/10/2021

 

Sudden diarrhea in 8 students staying in hostels!

 

சேலத்தில் தனியார் விடுதியில் தங்கிப் படித்துவரும் 8 மாணவிகளுக்கு ஒரே நேரத்தில் திடீரென்று வயிற்றுப்போக்கு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

சேலம் மாவட்டம், சின்னத்திருப்பதி சாந்தி நகரில் பிண்டா பெண் குழந்தைகள் விடுதி செயல்பட்டுவருகிறது. இந்தக் காப்பகம், அரசு நிதியுதவியுடன் இயங்குகிறது. 

 

இந்த விடுதியில் 35 மாணவிகள் தங்கி, சேலத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படித்துவருகின்றனர். இங்கு தங்கியுள்ள பெண் குழந்தைகளுக்குத் தினமும் மூன்றுவேளை உணவும் விடுதி நிர்வாகமே வழங்குகிறது. பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் மட்டும் தங்களுக்குத் தேவையான மதிய உணவை விடுதியிலிருந்து எடுத்துச் சென்று விடுவார்கள். 

 

இந்த விடுதியில் தங்கியபடி 9 மற்றும் 10ஆம் வகுப்பு படித்துவரும் மாணவிகளுள் 8 பேர் அக். 7ஆம் தேதி வழக்கம்போல் காந்தி சாலையில் உள்ள பள்ளிக்குச் சென்றனர். அங்கு மதிய உணவு சாப்பிட்ட அவர்கள், சிறிது நேரத்திலேயே அடுத்தடுத்து வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டனர். 

 

மாலையில் விடுதிக்குத் திரும்பிய மாணவிகள், விடுதி காப்பாளர் சுகன்யாவிடம் இதுபற்றி தெரிவித்தனர். அதற்குப் பிறகும் அவர்களுக்கு விட்டு விட்டு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விடுதியில் உள்ள செவிலியர் ஒருவர் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். 

 

மேல்சிகிச்சைக்காக மாணவிகள் 8 பேரும் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. நேற்று (08/10/2021) காலை நிலவரப்படி அவர்கள் அனைவரும் ஓரளவு நலமாக இருப்பதாக மருத்துவமனைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

 

இதுகுறித்து கன்னங்குறிச்சி காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். விடுதியில் தங்கியுள்ள மாணவிகளின் உடலில் எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில், பள்ளிக்கு உணவை எடுத்துச்சென்று சாப்பிட்டவர்களுக்கு மட்டும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவிகள் பள்ளிக்குச் செல்லும் வழியிலோ அல்லது பள்ளியிலோ வேறு ஏதேனும் வாங்கி சாப்பிட்டார்களா என்பது குறித்தும் விசாரணை நடந்துவருகிறது. இச்சம்பவம் விடுதி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாணவர்களுக்கு கோடைக்கால இலவச விளையாட்டுப் பயிற்சி துவக்கம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Summer free sports training for students begins in Chidambaram

கோடைக்காலத்தில் மாணவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக இலவச விளையாட்டு பயிற்சிகள் துவக்கப்பட்டது.

சிதம்பரம் அரசு உதவி பெறும் ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளி சார்பாக சின்ன மார்க்கெட் பகுதியில் உள்ள பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவர்களை கோடைக்காலத்தில்  நல்வழிப்படுத்தும் விதமாக  இலவசமாக காலை மற்றும் மாலை வேலைகளில் யோகா, சிலம்பம், இறகு பந்து, கூடைப்பந்து, கபடி ஆகிய விளையாட்டுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

இதன் துவக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை பள்ளி மைதானத்தில்  நடைபெற்றது.  இந்நிகழ்சிக்கு ஆறுமுக அரசு உதவி பெறும் பள்ளி குழு செயலாளர் அருள் மொழி செல்வன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பள்ளி குழு தலைவர் சேது சுப்பிரமணியன் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு பயிற்சிகள் குறித்தும், அதனால் ஏற்படும் உடல் ரீதியான நன்மைகள் குறித்தும் பேசினார்கள்.

Summer free sports training for students begins in Chidambaram

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராம்குமார், உடற்கல்வி ஆசிரியர் எத்திராஜன், சிலம்பகளை ஆசிரியர் ராஜா ராம் யோகக்கலை ஆசிரியர் முத்துக்குமாரசாமி, கூடைப்பந்து நடராஜன், அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வி பயிற்றுநர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பயிற்சிகளை அளித்தனர். இதில் சிதம்பரம் நகரத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, பள்ளியின் தமிழாசிரியர் செல்வம் நன்றி கூறினார் இதில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Next Story

சிதம்பரத்தில் மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Higher education guidance program for students in Chidambaram

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய  மாணவ மாணவிகளுக்கு  உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்சிக்கு  சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி தலைமை தாங்கி மாணவர்கள் மத்தியில் பேசுகையில்  பன்னிரெண்டாம் வகுப்பு  முடித்து  அடுத்து என்ன படிக்கலாம்.  மாணவர்களின் கனவுகளை நினைவாக்கும்  படிப்புகள்  எவை,   உயர்கல்விக்கு செல்ல ஏராளமான உதவித் தொகை வாய்ப்புகள் உள்ளது என்றும்,   தேர்ச்சி பெற்ற அனைத்து  மாணவர்களுக்கும்  உயர் கல்விக்கான  வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு சிறப்பாகச் செய்து வருகிறது.  சிறந்த வாய்ப்புகளுக்கு எந்தக் கல்லூரியிலும்  சேர்ந்து படிக்கலாம்,  வருங்காலத்தைப் பலப்படுத்த எந்தப் பாடப்பிரிவைத்  தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து  மாணவர்களிடம் விளக்கி பேசினார்.

Higher education guidance program for students in Chidambaram

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆதிதிராவிட  மற்றும் பழங்குடியின நல அலுவலர்  லதா அனைவரையும் வரவேற்றார். மண்டல உதவி இயக்குநர் சுப்பிரமணியன்,  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவணகுமார்,  நந்தனார் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குகநாதன், குமராட்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவரசன்,  ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி,  பள்ளித்துணை ஆய்வாளர்  வாழ்முனி,  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதில் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, அருள்சங்கு, நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன்,  சுவாமி சகஜானந்தா மணி மண்டப ஒருங்கிணைப்பாளர் பாலையா, குமராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பாலமுருகன், உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள  ஆதி திராவிட நலத்துறை   பள்ளிகளின் மாணவ மாணவிகள்  300-க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டு  உயர்கல்வி குறித்து ஆலோசனைகளைப் பெற்றனர்.   இவர்களுக்கு உயர் கல்வி குறித்த விவரங்களை கருத்தாளர் கோபி வழங்கினார். சிதம்பரம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் சுதா அனைவருக்கும் நன்றி கூறினார்.