
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீ காந்த் கைது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. நடிகர் ஸ்ரீகாந்திற்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தின் பின்னணியை பார்க்கையில் சென்னையில் அ.தி.மு.க. முன்னாள் பிரமுகர் பிரசாந்த் என்பவர் மதுபானக் கூடத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாகக் கைது செய்யப்பட்டார். இவரிடம் நடந்த விசாரணையில் பிரதீப் என்பவர் உள்ளிட்ட சிலரிடம் இவர் தொடர்பில் இருப்பது தெரிய வந்தது. பிரதீப், போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடையவர் எனக் கூறப்படுகிறது. இதனிடையே அதிமுக முன்னாள் பிரமுகர் பிரசாந்த், தமிழ்த் திரைப்பட நடிகர்களுக்குப் போதைப் பொருள் சப்ளை செய்து வருவதாகச் சொல்லப்படும் நிலையில் இவரிடம் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வாங்கியதாகவும் பிரசாந்தின் செல்போனை ஆய்வு செய்ததில் அதில் ஸ்ரீகாந்த் தொடர்பில் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஸ்ரீகாந்திடம் நுங்கம்பாக்கம் காவல் துறையினர் நீண்ட விசாரணை நடத்தினர். அதன் பின்பு அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். பிரதீப் என்ற நபரிடம் இருந்து போதைப்பொருளை கிராம் ஒன்றிற்குக் கிட்டத்தட்ட ரூ.12 ஆயிரம் என 40 முறைக்கு மேலாக அதை அவர் உபயோகப்படுத்தியுள்ளார். இதற்காக ஆன்லைன் மூலமாகக் கிட்டத்தட்ட ரூ.4 லட்சத்து 72 ஆயிரம் வரை பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது. இவை அனைத்தும் உறுதிசெய்யப்பட்ட பிறகே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
முன்னாள் அதிமுக நிர்வாகி பிரசாந்த் மீது ஏற்கனவே பார் மோதல் தகராறு, வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தது என ஐந்து வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்ட பிரசாந்த் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக மீண்டும் இந்த வழக்கில் பிரசாந்த்தை கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.