Skip to main content

தந்தையின் நண்பரைக் கொன்ற மகன்; திருப்பூரில் பரபரப்பு - மூன்று மாதத்தில் நடந்தது என்ன?

Published on 09/09/2023 | Edited on 09/09/2023

 

Son incident father's friend in Tirupur

 

திருப்பூர் மாவட்டம் அவிநாசிக்கு அருகே அமைந்துள்ளது ராயன் கோயில் காலனி. இங்குள்ள 4வது வீதியில் வசித்து வருபவர் லட்சுமணன். 35 வயதான இவர், தென்காசி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர். லட்சுமணன், அவிநாசி பகுதியில் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் தொழிலை செய்து வருகிறார். இவரது மனைவி கங்கா. இந்த தம்பதிக்கு 16 வயதில் ஒரு மகனும், மகளும் உள்ளனர். 

 

இந்நிலையில், லட்சுமணனுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் நிறுவனத்தில் ஆர்டர் எடுக்கும்போது, அங்கு வேலை செய்த திருச்சி மாவட்டம் முசிறி பகுதியைச் சேர்ந்த யுவராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நண்பர்களாக மாறிய இவர்கள் அடிக்கடி சந்தித்து வந்தனர். இதற்கிடையில், யுவராஜ் குடிநீர் கம்பனியில் செய்துவந்த வேலையை விட்டுவிட்டு அவிநாசிக்கு அருகே உள்ள தனியார் கம்பனியில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.  ஆனால், யுவராஜ் வசிப்பதற்கு நிலையான இடம் இல்லாமல் தவித்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, இதையறிந்த லட்சுமணன் யுவராஜை கடந்த மூன்று மாதங்களாக தன்னுடைய வீட்டில் தங்க வைத்திருக்கிறார். அதன்பிறகு, லட்சுமணனும் யுவராஜூம் இணைந்து குடிநீர் கேன் விநியோகிக்கும் தொழிலிலும் ஈடுபட்டு வந்தனர். அந்த சமயம், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு லட்சுமணன் தான் குடியிருக்கும் வீட்டிற்கு அருகிலேயே  வள்ளியம்மாள் என்பவருக்கு சொந்தமான வாடகை வீட்டில் யுவராஜை தனியாக தங்கவைத்திருக்கிறார். இத்தகைய சூழலில், கடந்த 6ஆம் தேதியன்று யுவராஜ் தங்கியிருந்த வீடு பூட்டியே இருந்துள்ளது. அவர் நீண்ட நேரமாகியும் கதவை திறக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த வீட்டு உரிமையாளர் வள்ளியம்மாள் அந்த ஜன்னலை திறந்து பார்த்துள்ளார். அப்போது, வீட்டில் இருந்த யுவராஜ் கழுத்தறுக்கப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். ஒருகணம், இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தவர் கத்தி கூச்சலிட்டுள்ளார். அதன்பிறகு, அந்த இடத்தில் குவிந்த பொதுமக்களின் உதவியுடன் அவிநாசி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

 

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உயிரிழந்த யுவராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், யுவராஜை கொலை செய்தது யார்? எதற்காக செய்தார்கள் அல்லது ஏதேனும் முன்விரோதமா என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், கொலையாளியைக் கண்டுபிடிப்பதற்காக மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து அந்த இடத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கிருந்த மோப்ப நாய் யுவராஜ் வீட்டுக்கு அருகில் உள்ள அவரது நண்பரான லட்சுமணனின் வீட்டையே சுற்றி வந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீஸ் டீம், லட்சுமணனை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர். 

 

போலீசாரின் கிடுக்குப்பிடி கேள்விகளுக்கு தாக்கு பிடிக்க முடியாத லட்சுமணன் பல்வேறு உண்மைகளைத் தெரிவித்தார். அவர் சொன்ன தகவலின் படி சம்பவத்தன்று லட்சுமணனின் மகன் ரத்த கரையுடன் வீட்டுக்குள் வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த லட்சுமணன் தனது மகனிடம் நடந்த விஷயங்களை கேட்கும்போது தான் யுவராஜை கொலை செய்துவிட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து, என்ன செய்வது என தெரியாமல் திகைத்துப்போன லட்சுமணன் மனைவி கங்கா, மகன் மற்றும் மகள் ஆகியோரை தென்காசிக்கு பஸ்ஸில் அனுப்பி வைத்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து, லட்சுமணனின் மகன் தென்காசி நீதிமன்றத்தில் சரணடைந்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால், இந்த கொலை சம்பவம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. லட்சுமணன் வீட்டில் யுவராஜ் தங்கியிருந்த மூன்று மாதத்தில் அவர்களுக்குள் என்ன பிரச்சனை நடந்தது? எதற்காக லட்சுமணனின் மகன் யுவராஜை கொல்ல வேண்டும் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தற்போது, தந்தையின் நண்பரை மகனே கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் திருப்பூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.