Skip to main content

கஜா புயலால் கரைந்த மண்பானைகள்;கவலையில் நெடுவாசல் மண்பாண்ட தொழிலாளர்கள்!!

Published on 02/12/2018 | Edited on 02/12/2018

நெடுவாசல் கிராமத்தில் பொங்கலுக்காக தயாரித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 50 ஆயிரம் மண் பானைகள், அடுப்புகள் கஜா புயலுடன் பெய்த மழையில் கரைந்து போனதால் தொழிலாளர்கள் கவலையுடன் உள்ளனர். 

 

workers in anxiety

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர், நெடுவாசல், மழையூர் மற்றும் பல கிராமங்களில் மண்பாண்ட தொழிலாளர்கள் மண் பானைகள், அடுப்புகள் செய்து வருகின்றனர். சில மாதங்களில் கிராம கோயில்களுக்கு மண் குதிரை சிலைகள் மற்றும் சுவாமி சிலைகள் செய்து வருகின்றனர். தற்போது சில்வர் மற்றும் அலுமினியம், போன்ற பாத்திரங்களின் வருகையால் மண் பாத்திரங்களுக்காண தேவை குறைந்துவிட்டது. ஆனால் தை பொங்கலுக்கு மண் பானையில் பொங்கல் வைக்கும் கலாச்சாரம் இன்றளவும் உள்ளது. 

 

பொங்கல் பானைகள் தை மாதம் தேவை என்றாலும் அதற்காண பானைகளின் தயாரிப்பு என்பது ஆடி மாதத்திலேயே தொடங்கிவிடுகிறது. 6 மாதங்கள் தொடர்ந்து செய்யப்படும் பானைகளே தை பொங்கலுக்கு மக்கள் வாங்கிச் செல்கின்றனர். எதிர் வரும் தை திருநாளுக்காகவும் மண்பாண்ட தொழிலாளர்கள் செய்து வைத்திருந்த பொங்கல் பானைகள், அடுப்புகளை கஜா புயல், மழை சிதைத்துவிட்டது. அதனால் இந்த ஆண்டும் பொங்கல் பானைகள் பற்றாக்குறையும், விலை ஏற்றமும் காணப்படலாம்.

 

workers in anxiety

 

இது குறித்து நெடுவாசல் மண்பாண்ட தொழிலாளிகள் கூறும் போது.. நெடுவாசல் மற்றும் ஒட்டியுள்ள நல்லாண்டார்கொல்லை கிராமத்தில் மட்டும் சுமார் 60 குடும்பங்கள் மண்பாண்டம் செய்யும் தொழில் செய்து வருகிறோம். நவீன பாத்திரங்களின் வருகையால் எங்கள் தொழில் நலிவடைந்து போனது. ஆதைவிட மண் கிடைப்பதும் சிரமமாக உள்ளது. ஒரு யூனிட் களிமண் கொண்டு வர ரூ. 8 ஆயிரம் செலவாகிறது. அதற்கு பிறகு மண்ணை காயவைத்து பொடியாக இடித்து தண்ணீரில் கலக்கி ஜல்லடையில் சளித்து பிறகு சில மாற்ற மண் கலந்த தான் பானைகள் செய்ய வேண்டும். அப்படி தான் ஆடி மாதம் முதல் செய்யப்பட்ட பொங்கல் பானைகள் சுடாமல் வீட்டிற்குள் வைத்திருந்தோம். கஜா புயல் மழையில் எங்கள் வீடுகள் சேதமடைந்து அத்தனை பானைகள், அடுப்புகள் அழிந்து போனது. இதனால் எங்களில் 5 மாத உழைப்பும் மண் வாங்கிய செலவும் வீணாகிவிட்டது. 

 

workers in anxiety

 

நெடுவாசல் பகுதியில் மட்டும் சுமார் 50 ஆயிரம் பொங்கல் பானைகள் கஜா புயலால் அழிந்துவிட்டது. இனிமேல் நாங்கள் அவ்வளவு பானைகளை செய்து சுடமுடியாது. அதனால் அழிந்த மண்பானைகளுக்கும் உடைந்த வீடுகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் கதர் வாரியத்தில் நாங்கள் வாங்கி கடன்களையும் தள்ளுபடி செய்வதுடன் நவீன கருவிகளை இலவசமாக வழங்க வேண்டும். அப்போது தான் மண்பாண்ட தொழிலாளர்கள் மீண்டு எழ முடியும் என்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்