அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். அதேசமயம் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு நீதிமன்றத்தின் அனுமதியோடு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவக்குழு கண்காணிப்பில் உள்ளார்.
இதற்கு முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் உள்ளதால், அவரை விடுவிக்கக் கோரி அவரது மனைவி மேகலா, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த மனுவைக் கடந்த வாரம் விசாரித்த நீதிமன்றம், செந்தில் பாலாஜி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி வழங்கியது. அதே சமயம் அமைச்சர் நீதிமன்றக் காவலில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டது. அமலாக்கத்துறையினர் தங்கள் மருத்துவக் குழுவினரைக் கொண்டு பரிசோதனை செய்து கொள்ளவும் அனுமதி வழங்கியது. செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு மனு மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு விசாரணை நடந்து வருகிறது. அப்போது செந்தில் பாலாஜி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இளங்கோ, கைது செய்வது குறித்து முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை. பின்னர் நள்ளிரவில் கைது செய்த அமலாக்கத்துறை காலை 8 மணிக்குத்தான் தகவல் தெரிவித்தனர் என்று பல வாதங்களை முன்வைத்து பேசினார்.
இதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசின் சொலிசிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதங்களை முன்வைத்து வருகிறார். அதில் "செந்தில் பாலாஜியின் கைதை சட்ட விரோதம் எனக்கூற முடியாது. நீதிமன்ற காவல் ஆணை பிறப்பிக்கும் முன் ஆட்கொணர்வு மனுத் தாக்கலானதால் கைது சட்ட விரோதம் இல்லை. நீதிமன்றக் காவலில் வைக்க கோரிய மனு 24 மணி நேரத்திற்குள் தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றமே உத்தரவு பிறப்பித்துள்ளதால், செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் இல்லை என்பது நிரூபணம் ஆகிறது. சட்ட விரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டப்படி ஆதாரங்கள் இருந்தால் கைது செய்யலாம். கைது செய்யும் போது அதற்கான காரணங்களைக் கூற வேண்டும் என சட்டத்தில் கூறவில்லை. கைதுக்கு பின்னர் காரணத்தை கூறலாம். போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகப் பணம் பெற்றதற்கு ஆதாரம் உள்ளது. ஆதாரங்கள் இருப்பதன் அடிப்படையிலேயே செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார்” என்று வாதத்தை முன் வைத்து வருகிறார்.