Skip to main content

மாஜி முதல்வரின் உதவியாளரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம்; சேலம் காவல்துறையினர் அழைப்பு!

Published on 01/12/2021 | Edited on 01/12/2021

 

Salem police call compliant aide to a former chief

 

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த புகாரில் கைதாகி உள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மணியிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என சேலம் மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர். 

 

சேலம் மாவட்டம், காடையாம்பட்டியைச் சேர்ந்தவர் மணி (52). இவர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் உதவியாளராக பணியாற்றி வந்தார். அப்போது முதல்வருடன் இருந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி, பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை வசூலித்து மோசடி செய்ததாகப் புகார்கள் கிளம்பின. ஆனாலும், அப்போது அதிமுக ஆட்சி அதிகாரத்தில் இருந்ததால் பாதிக்கப்பட்டவர்கள் துணிச்சலாகப் புகார் கொடுக்க முன்வரவில்லை. இப்படி ஏமாந்தவர்களில் சொந்தக் கட்சியினரும் ஏராளமானோர் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

 

இது ஒருபுறம் இருக்க, கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த பி.இ., பட்டதாரி இளைஞரான தமிழ்ச்செல்வன் (29) என்பவரிடம், தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கிக் கொடுப்பதாக 17 லட்சம் ரூபாய் வாங்கியிருக்கிறார் மணி. இதற்கு மணியின் நண்பர் செல்வக்குமார் என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார். ஆனால் சொன்னபடி வேலை வாங்கித் தராததோடு, பணத்தையும் தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். இதற்கிடையே மணி 4 லட்சம் ரூபாய் மட்டுமே தமிழ்ச்செல்வனிடம் கொடுத்துள்ளார். மீதப்பணத்தைக் திருப்பிக் கேட்டு பலமுறை நடையாய் நடந்தும் அவரை ஏமாற்றி வந்துள்ளார். 

 

இதுகுறித்து தமிழ்ச்செல்வன் சேலம் மாவட்டக் குற்றப்பிரிவில் புகார் அளித்தார். மணி, செல்வக்குமார் ஆகிய இருவர் மீதும் மோசடி, கூட்டுச்சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே அவர்கள் இருவரும் முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றம் சென்றனர். அங்கு அவர்களுடைய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து அவர்கள் தலைமறைவாகிவிட்டனர். 


இந்நிலையில், நவ. 28ம் தேதியன்று மணி சொந்த ஊருக்கு வந்திருந்தபோது அவரை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணியை விரைவில் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர்.
 

இதற்கிடையே, வேலை வாங்கிக் கொடுப்பதாக பண மோசடி செய்ததாக இதுவரை 14 பேர் மணி மீது புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, மணியிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் உரிய ஆதாரங்களுடன் புகார் தெரிவிக்கலாம் என சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர். அரசு வேலை மட்டுமின்றி கட்சிப்பதவிக்காக பணம் கொடுத்திருந்தாலும் அதுபற்றியும் புகார் தெரிவிக்கும்படி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 

இது மட்டுமின்றி மணியின் கூட்டாளியான செல்வக்குமாரைப் பிடிக்கவும் தனிப்படையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.