வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து சேலம் திரும்பியவர்களில் நோய் தொற்று சந்தேகத்தின்பேரில் அரசு பொறியியல் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த 214 பேருக்கு நோய் தொற்று இல்லை என தெரிய வந்ததை அடுத்து, அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சேலம் மாநகரை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் பணி நிமித்தமாக அல்லது அவசர வேலையாக வெளிமாவட்டம் அல்லது வெளிமாநிலங்களுக்கு சென்று, மீண்டும் ஊர் திரும்புகையில் அவர்களுக்கு கரோனா நோய் தொற்று இருக்கிறதா என்பது குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அவ்வாறு சேலம் திரும்பும் நபர்கள், கருப்பூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் தனிமைப்படுத்தும் அறைகளில் தங்க வைக்கப்படுகின்றனர். பின்னர் மருத்துவப் பரிசோதனை முடிவுகளை பொருத்து அவர்கள் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
சேலம் மாநகராட்சி நிர்வாகம் ஏப். 27ம் தேதி முதல் இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, மே 4ம் தேதி வரை மொத்தம் 265 பேர் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர்.
அவர்களில் 214 பேரின் மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் யாருக்கும் கரோனா நோய் தொற்று இல்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் திங்கள்கிழமை (மே 4) வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள 51 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தும் பகுதியில் தங்க வைக்கப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஸ் தெரிவித்துள்ளார்.