Skip to main content

ரூ. 1 கோடி பறிமுதல்; ஊராட்சித் தலைவர் மீது வழக்குப்பதிவு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Rs. 1 crore confiscation; Case registered against panchayat chairman

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் மாவட்டம் எட்டரை ஊராட்சி மன்றத் தலைவர் திவ்யா வீட்டில் ரூ.1 கோடி நேற்று (12.04.2024) தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. கைப்பற்றப்பட்ட ரூ.1 கோடி தொடர்பாக வருமான வரித்துறை விசாரித்து வந்தனர். அதனைத் தொடர்ந்து திவ்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.1 கோடி யார் மூலம் வந்தது என தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. எட்டரை ஊராட்சி மன்றத் தலைவர் திவ்யா அதிமுகவைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்