Skip to main content

ஜல சமாதி ஆவதற்குச் சென்னையிலிருந்து காசிக்குச் சென்ற பெண் மீட்பு ; போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி

Published on 21/06/2023 | Edited on 21/06/2023

 

Rescue of woman who went to Kashi from Chennai to become Jalasamati; Shocked by the police investigation

 

மகன் உயிரிழந்த சோகத்தைத் தாங்க முடியாத தாய் ஒருவர் கங்கையில் இறங்கி ஜல சமாதி ஆவதாக முடிவெடுத்து சென்னையிலிருந்து காசிக்குச் செல்ல முயன்ற நிலையில், அவர் நாக்பூரில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சி.எம்.சி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். ஆஞ்சநேயர் கோவிலில் அர்ச்சகராக சதீஷ் இருக்கிறார். இவருடைய மனைவி ஸ்ரீ வித்யா. இவர்களுக்கு 21 வயதில் ஸ்ரீ வர்ஷன் என்ற மகனும், 17 வயதில் ஒரு மகளும் உள்ளனர். கடந்த 4 ஆம் தேதி திடீரென ஸ்ரீ வர்ஷனுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஸ்ரீ வர்ஷன் உயிரிழந்தார்.

 

மகனின் உயிரிழப்பைத் தாங்க முடியாத தாய் ஸ்ரீ வித்யா, தொடர்ந்து மகனின் ஞாபகத்திலேயே இருந்தார். இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி அதிகாலை ஐந்து மணிக்கு கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு ஸ்ரீ வித்யா வெளியேறிவிட்டார். அதில் 'தன்னுடைய மகனைப் பிரிந்து வாழ முடியவில்லை. அவன் சென்ற இடத்திற்கே நானும் செல்கிறேன். மகள் 12 ஆம் வகுப்பு படித்து முடித்தவுடன் திருமணம் செய்துகொள்ள வேண்டும். நீ அழ வேண்டாம். தந்தையை நீ தான் பார்த்துக் கொள்ள வேண்டும்' என உருக்கமாக அந்த கடிதத்தில் எழுதி இருந்தார்.

 

இதனால் அதிர்ச்சியடைந்த அர்ச்சகரான சதீஷ், மனைவி காணாமல் போனது குறித்து தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார். உடனடியாக காவல் ஆய்வாளர் ராஜன் அந்த பகுதியில் இந்த சிசிடிவி காட்சிகளை பரிசோதித்தார். அப்பொழுது, ஸ்ரீ வித்யா மெட்ரோ மூலம் சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றது தெரிய வந்தது. அங்கிருந்து காசிக்கு புறப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. கங்கையில் ஜல சமாதி அடையப் போவதாக ஏற்கனவே உறவினர்களிடம் செல்போனில் கூறியதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

 

தொடர்ந்து ரயில்வே போலீசாருக்கு இது தொடர்பாக தகவல் கொடுக்கப்பட்டு முழு முயற்சியுடன் விசாரணை செய்து நாக்பூரில் ஸ்ரீ வித்யாவை உடனடியாக மீட்டனர். 'தற்கொலை செய்து கொண்டால் அடுத்த பிறவி மிகவும் கொடியதாக இருக்கும். எனவே புனித நதியான கங்கையில் இருந்து ஜல சமாதி ஆகலாம் அதனால் மோட்சம் கிடைக்கும்’ என அவர் நம்பியதாக போலீஸ் விசாரணையில் அவர் கூறியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

திக் திக் நொடிகள்... சென்னையை கலங்கடித்த சம்பவம்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Tick-tick seconds... a child saved by tact

சென்னை ஆவடியில் நான்காவது மாடியில் இருந்து கீழே தவறிவிழ முற்பட்ட நிலையில் குழந்தை காப்பாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை ஆவடி பகுதியில் வசித்து வரும் வெங்கடேசன்-ரம்யா தம்பதிக்கு 7 மாத குழந்தை உள்ளது. இன்று காலை குழந்தையின் தாய் ரம்யா குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது கை தவறி குழந்தை நான்காவது மாடியில் இருந்து இரண்டாவது தளத்தில் உள்ள வெளிப்புற கூரை மீது விழுந்தது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் குழந்தை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொண்டனர். கீழே பெட்ஷீட் போன்றவை விரிக்கப்பட்டு குழந்தை விழுந்தால் பிடிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து திக் திக் நொடிகளை கடந்து அந்த பகுதியை சேர்ந்த ஹரி என்ற இளைஞர் ஒருவர் சாதுர்யமாக செயல்பட்டு குழந்தையை பத்திரமாக மீட்டார். காப்பாற்றப்பட்ட குழந்தையானது உடனடியாக ஆவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.