Skip to main content

மாற்றுத்திறனாளிகளுக்கு இ.எம்.ஐ மறுக்கும் நிதி நிறுவனம்!

Published on 21/03/2023 | Edited on 21/03/2023

 

Refusal of EMI by financial institutions to disabled persons

 

உங்களுக்கெல்லாம் இ.எம்.ஐயில் பொருள் கொடுக்க முடியாது என முரண்டு பிடிக்கும் நிதி நிறுவனங்களுக்கு எதிராக வெகுண்டெழுந்த பார்வை மாற்றுத்திறனாளியின் செயல் பொதுமக்கள் மத்தியில் அதிகம் பாராட்டப்படுகிறது.

 

புதுக்கோட்டை மாவட்டம் கைக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்.சக்திவேல். பார்வை மாற்றுத்திறனாளியான இவர், தனது கடின உழைப்பால் படித்து முன்னேறி பெருங்களூர் அரசு மாதிரிப்பள்ளியில் முதுகலை தமிழ் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், தனது வீட்டிற்கு இ.எம்.ஐ தொகையில் ஏ.சி வாங்குவதற்காக பொன்.சக்திவேல், வடக்கு ராஜ வீதியில் உள்ள வசந்த் & கோ நிறுவனத்தில் தொலைப்பேசி மூலம் கேட்டுள்ளார். ஆனால், நிதி நிறுவனங்கள் சார்பில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு எம்.எம்.ஐ தொகையில் பொருள் கொடுப்பதில்லை எனக் கூறியதுடன் கடன் கொடுக்க மறுத்துள்ளனர். அதுமட்டுமின்றி, இதே போல் மற்றொரு பார்வை மாற்றுத்திறனாளிக்கும் சலவை இயந்திரம் பெற வந்தவர்களிடம் கடன் கொடுக்க மறுப்பு தெரிவித்ததை உதாரணமாகக் கூறியுள்ளனர்.

 

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பொன்.சக்திவேல் தனது ஆதங்கத்தை சோசியல் மீடியாவில் வெளிப்படுத்தியுள்ளார். அதில் அவர், "பார்வை மாற்றுத்திறனாளிகளின் கைரேகை பதிவையே, கையெழுத்தாக ஏற்க வேண்டும். சக மனிதர்களாகவே மதிக்க வேண்டும். கடன் வழங்குவதற்கு மாற்றுத்திறனைக் காரணம் காட்டக் கூடாது என ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா தொடர்ந்து கூறி வந்தாலும் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு இ.எம்.ஐ வழங்குவதில்லை” என பொன்.சக்திவேல் வருத்தம் தெரிவித்துள்ளார்.

 

பின்னர், இதுகுறித்து தகவலறிந்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மற்றும் உயரதிகாரிகள், சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் விளக்கம் கேட்டதுடன் ஆசிரியர் பொன்.சக்திவேலிடமும் பேசியுள்ளனர். இதையடுத்து, வசந்த & கோ நிறுவன ஊழியர்கள் நேராக ஆசிரியர் வீட்டிற்கே சென்று வருத்தம் தெரிவித்ததுடன் விரைவில் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளனர். மேலும், இந்த செய்தியை நக்கீரன் மூலம் மதுரை எம்.பி. சு.வெங்கடேசனின் கவனத்திற்கு கொண்டு சென்று இருக்கிறோம் எனவும், விரைவில் இதுகுறித்து நாடாளுமன்றத்தில் குரல் ஒலிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாழைமரம் தோரணங்களோடு தயாரான மாதிரி வாக்குப் பதிவு மையம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Voting registration center ready with banana trees

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி(நாளை) தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புரை பரபரப்புகள் அடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே வாக்குச் சாவடிகள் தயாராகிவிட்டது. மாதிரி வாக்குச் சாவடி என்று ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சில வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Voting registration center ready with banana trees

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் ஒரு வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து மாதிரி வாக்குச் சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப் சாவடிக்கு முன்பு வாழை மரம், தோரணங்கள் கட்டி வாசலில் வண்ணக் கோலமிட்டு பூ, பழம் தாம்பூலம் தட்டுடன் இனிப்பு வழங்கி வாக்குப் பதிவுக்கு வரும் வாக்காளர்களை வரவேற்று வாக்குப் பதிவுக்கு அனுப்பும் வண்ணம், வாக்குப் பதிவு மையத்திற்குள் விழா கூடம் போல அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடுகளை கீரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் செய்துள்ளனர்.

Next Story

வேங்கைவயல் விவகாரம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vengaivayal Affair High Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வழக்கறிஞர் மார்க்ஸ் ரவீந்தரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா அடங்கிய அமர்வில் இன்று (16.04.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், “இந்த விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனையும், குரல் மாதிரி பரிசோதனையும்” நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மனுதாரர் தரப்பில், “சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை எந்த ஒரு முழு விசாரணையையும் நடத்தவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “இந்தச் சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இத்தனை நாட்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். வேங்கைவயல் விவகாரத்தில் 3 மாதத்தில் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்து வழக்கு ஜூலை 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.