Skip to main content

கோவையில் தனியார் சிட் பண்ட் மோசடி.. நூற்றுக்குமேற்பட்டோர் சாலைமறியல் போராட்டம்!!

Published on 20/07/2019 | Edited on 20/07/2019

கோவை காந்திபுரம் 100அடி சாலை அருகில் செயல்பட்டு வரும் முத்து லேண்ட் டெவலப்பர்ஸ், மற்றும் முத்து சிட் பண்ட், முத்து தங்க நகை கடன் எனும் தனியார் சிட்டு கம்பனியில் சரியாக கட்டிய பணம் தரவில்லை என நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.

கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள முத்து லேண்ட் டெவலப்பர்ஸ் மற்றும் முத்து சிட் பண்ட் என தனியார் சிட்டு கம்பெனி 8 வருடமாக செயல்பட்டு வருகிறது. தமிழக வியாபாரிகள் சம்மேளன தலைவர் பரமசிவம் என்பவருக்கு சொந்தமான இந்த சீட்டு கம்பெனி மற்றும் நெல்லை முத்து விலாஸ் உரிமையாளர் இதைநடத்தி வருவதாலும், தினசரி நாளிதழில் பிரமாண்டமான முறையில் விளம்பரம் வெளியானதை நம்பி மக்கள் இந்த நிறுவனத்தில், தங்கநகை சீட்டு, மாத சீட்டு மற்றும் நில சீட்டு என அனைத்திலும் மக்கள் பணம் கட்டி வந்துள்ளனர். இதில் மாத சீட்டு மூலம் மாதம் ஆயிரம் வீதம் 24 மாதங்களுக்கு சீட்டு பிடிக்கப்பட்டு அவர்களிடம் பணம் திரும்பக் கொடுக்கும் பொழுது 32000 ஆக வட்டியுடன் சேர்த்து தருவதாக கூறியதை நம்பி, பொதுமக்கள் சீட்டில் சேர்ந்து உள்ளனர். 

Private chit fund scam in Coimbatore.. people protest


இருநூற்று ஐம்பதிற்கும் மேற்பட்ட நபர்கள் இந்த சிறு சேமிப்புத் திட்டத்தில் தங்களது தங்களது பெயரில் பணம் போட்டு வந்துள்ளனர். இதில் இரண்டு வருடம் கட்டி முடிந்த நிலையில் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய தொகை சரியான முறையில் வழங்கவில்லை எனவும், நிலம் சரியாக பத்திரபதிவு செய்து தரவில்லை எனவும், பொதுமக்கள் அலுவலகத்தில் வந்து கேட்ட பொழுது அவர்கள் பணமாக இல்லை காசோலையாக பெற்றுக் கொள்ளுங்கள் என அனைவரிடமும் காசோலையை அளித்துள்ளனர். 

காசோலை அதற்கான தேதி  வந்ததும் அந்த பேங்கில் போடும்பொழுது பணம் இல்லை என  தகவல் தெரிவித்துள்ளனர் பேங்க் அதிகாரிகள். இதனால் ஆத்திரமடைந்த மக்கள், அலுவலகத்தை நாடி அனைவரும் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில் 5000 நபர்களுக்கும் மேலாக சீட்டு மற்றும் நிலசீட்டு என சிறுக, சிறுக சேமித்த பணம் எனவும் மொத்த மதிப்பு 21கோடிக்கும் மேல் உள்ளது என கூறி பணம் கேட்டு அலுவலகத்தை சிறை பிடித்து உள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் ஒரே நேரத்தில் பணம் கேட்டு வந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த இரத்தினபுரி காவல் நிலைய ஆய்வாளர் தெய்வசிகாமணி, மற்றும் டிஎஸ்பி, எழிலரசன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சென்றும் பலனளிக்காத நிலையில் போராட்டம் மீண்டும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்