Skip to main content

பரிகாரத்திற்கு பாம்பு முன்னால் நாக்கை நீட்டிய நபர்; நாக்கிலேயே கொத்திய கண்ணாடிவிரியன்

Published on 26/11/2022 | Edited on 26/11/2022

 

A person who sticks out his tongue in front of a snake for atonement; Stinging vitreous on the tongue

 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே 54 வயதான நபர் ஒருவரின் கனவில் அடிக்கடி பாம்பு வந்துள்ளது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த அந்நபர் ஜோதிடரை நாடியுள்ளார். ஜோதிடர், பாம்பு கனவில் வந்தால் அதற்கு தனியாக பரிகாரம் இருக்கிறதென்று கூறி பாம்பிற்கு பூஜை செய்ய சொல்லியுள்ளார். மேலும், பாம்புப்புற்று உள்ள கோவிலையும் சுட்டிக்காட்டி பூஜைகள் முடிந்த பின் பாம்பிற்கு முன் நாக்கை காட்டுங்கள் என்றும் கூறியுள்ளார்.

 

ஜோதிடர் சொன்னதைக் கேட்டு பூஜைகள் முடிந்த பின் பாம்புப்புற்று அருகே கண்ணாடிவிரியன் பாம்பிற்கு முன் நாக்கை நீட்டியுள்ளார். எதிர்பாராத விதமாக பாம்பு அந்நபரின் நாக்கில் கொத்தியது. இதனால் அந்த நபர் மயக்கமடைந்தார். அவருடன் சென்ற உறவினர் ஒருவர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

 

ஈரோடு மணியம் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் செந்தில் குமார் கூறுகையில், “நோயாளி நவம்பர் 18 அன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த போது அவரது வாயில் ரத்தமாக இருந்தது. அவரது நாக்கு திசுக்கள் பாம்பின் விஷத்தினால் சேதமடைந்து இருந்தது. மேலும், விஷம் பரவாமல் இருப்பதற்காகவும் நோயாளியைக் காப்பாற்றவும் நாக்கை அகற்றியுள்ளோம்.  அதற்கு பிறகும் கூட நோயாளியின் உயிரைக் காப்பாற்ற நான்கு நாட்கள் போராடினோம்” என்றார். 

 

இதற்கு முன்பு கூட பாம்பிற்கு முத்தம் கொடுக்க முயன்ற நபரின் வாயில் பாம்பு கொத்தியது. இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலானது. தற்போது மீண்டும் அதே போன்ற நிகழ்வு நடந்துள்ளதால் இது போன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.