Skip to main content

‘பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரமாக்க வேண்டும்’ -ஈ.ஆர்.ஈஸ்வரன்

Published on 15/09/2020 | Edited on 15/09/2020

 

‘Part-time teachers should be made permanent’ - E.R.Eswaran

 

 

அரசு பள்ளியில் பகுதிநேர ஆசிரியர்களாக பணி செய்பவர்களை நிரந்தரமாக்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

அந்த அறிக்கையில், “கடந்த 10 ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறையை தீர்த்து பாடம் நடத்துவதற்காக பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்கள். பல நேரங்களில் பகுதிநேர ஆசிரியர்களை நம்பி முழுமையாகவே அரசு பள்ளிகள் நடந்த காலங்களும் உண்டு. பகுதிநேர ஆசிரியர்கள் திறமையானவர்களாக இருந்தால் மட்டும்தான் அந்தந்தப் பள்ளிகளில் பயன்படுத்திக் கொள்வார்கள்.

 

அதனால் திறமை வாய்ந்தவர்கள் தான் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள். பிற்காலத்தில் நிரந்தரமாக்கப்படுவீர்கள் என்ற வாக்குறுதியோடு தான் குறைந்த சம்பளத்தில் பணியில் சேர்ந்தார்கள். ஆரம்பத்தில் மாதம் 5,000 ரூபாயாக இருந்த சம்பளம் 10 ஆண்டுகள் கழித்து இன்றைக்கு 7,700 ரூபாயாக இருக்கிறது.

 

அரசாங்கம் பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரமாக்கிவிடக்கூடாது என்பதற்காக உள்நோக்கத்தோடு திட்டமிட்டு உபயோகப்படுத்துகிறார்கள். வருடத்தில் 11 மாதங்கள் மட்டுமே பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஒரு மாதம் சம்பளம் கொடுக்காமல் இருக்கின்ற காரணத்தினால் அவர்கள் தற்காலிக பணியாளராக தொடர்ந்து பணியாற்றி கொண்டிருக்கிறார்கள். எந்த விதத்திலும் மாணவர்களுக்கு கற்பிக்கின்ற விஷயத்தில் அவர்கள் திறமை குறைந்தவர்களும் இல்லை.

 

10 ஆண்டுகளை தாண்டி குறைந்த சம்பளத்தில் பகுதிநேரம் பணியாற்ற கூடியவர்களாக தற்காலிக பணியில் தொடர்ந்து கொண்டிருப்பதால் அவர்களை சார்ந்த குடும்பத்தார் எவ்வளவு சிரமப்படுவார்கள் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். எப்படியும் நிரந்தரமாக்கிவிடுவார்கள் என்ற நம்பிக்கையோடு பணியாற்றி கொண்டிருக்கின்ற பகுதிநேர ஆசிரியர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

 

தமிழக அரசு மனிதாபிமானத்தோடு, கொடுத்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும். ஒருமனதாக எல்லா கட்சிகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்மானமாக தான் இது இருக்கும். இன்னும் தாமதப்படுத்தாமல் பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரமாக்குகின்ற முடிவை தமிழக அரசு எடுத்து அந்தக் குடும்பங்களை காப்பாற்ற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாவட்டங்களுக்குள் இ-பாஸ் முறையைக் கைவிடுக... -கொ.ம.தே.க. ஈஸ்வரன் வேண்டுகோள்!

Published on 31/07/2020 | Edited on 31/07/2020

 

kdmk

 

"வீழ்ந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க மாவட்டங்களுக்குள் பயணிக்க தேவையான இ-பாஸ் முறையைக் கைவிட வேண்டும்." எனக் கூறியிருக்கிறார் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர் .ஈஸ்வரன் இது சம்பந்தமாக அவர் விரிவாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"தமிழக அரசு ஊரடங்கில் எவ்வளவு தளர்வுகள் அறிவித்தாலும் இ-பாஸ் முறை நடைமுறையில் இருப்பதால் தொழில்துறை இயங்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறது. அனைத்து மக்களுமே இ-பாஸ் பெற்று பயணிப்பது என்பது இயலாத ஒரு காரியம். மருத்துவம், இறப்பு உள்ளிட்ட அவசர தேவைகளுக்காக உண்மைநிலை சொல்லி அரசு கேட்கும் தகவல்கள் அனைத்தையும் கொடுத்தாலும் இ-பாஸ் நிராகரிக்கப்படுகிறது. மேல் சிகிச்சைக்கு செல்பவர்கள் தங்களது குடும்ப மருத்துவர்களிடம் மருத்துவம் மற்றும் ஆலோசனைகளைப் பெற முடிவதில்லை.

பக்கத்து மாவட்டத்தில் உள்ள பெற்றோரைப் பார்க்க முடியாமல் பிள்ளைகளும், பிள்ளைகளைப் பார்க்க முடியாமல் பெற்றோரும் பாசப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். முக்கிய காரணங்களுக்காக வெளியே பயணிக்க முடியாமல் பலர் மனவேதனையில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். படித்த விழிப்புணர்வு உள்ளவர்களுக்கே இ-பாஸ் முறை மிகவும் சிரமமானதாக இருக்கிறது. படித்தவர்களுக்கே இந்த நிலை என்றால் படிப்பு அறிவில்லாத சாமானிய மக்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்பதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். சிறு, குறு தொழில்களைச் செய்பவர்கள் தாங்கள் தயாரித்த பொருட்களை மற்ற மாவட்டங்களில் உள்ள பெரும் நிறுவனங்களுக்கு அனுப்ப முடியவில்லை.

இதனால் தொழில் நிறுவனங்களை தொடர்ச்சியாக நடத்த முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். நஷ்டத்தைத் தவிர்ப்பதற்காக பெரும்பாலான நிறுவனங்கள் வேலையாட்களைக் குறைக்கும் பணியில் இறங்கியிருக்கிறார்கள். தினந்தோறும் பக்கத்து மாவட்டங்களில் உள்ள நிறுவனங்களுக்கு வேலைக்குச் சென்று வந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் இ-பாஸ் முறையினால் வேலைக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது. அதேபோல ஊரடங்கினால் சொந்த ஊருக்குச் சென்ற தொழிலாளர்களை நிறுவனங்கள் அழைத்தும் பணிக்குத் திரும்ப முடியாமல் இருக்கிறார்கள். அரசின் உத்தரவை மதித்து இ-பாஸ் விண்ணப்பித்தால் நிராகரிக்கப்படுவது ஏன் ?.

விவசாயிகளும் இ-பாஸ் முறையினால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். குடியிருக்கும் மாவட்டமும், விவசாய நிலம் இருக்கும் மாவட்டமும் வேறுவேறாக இருப்பதால் விவசாயப் பணிகளில் ஈடுபட முடியாமல் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறார்கள். அருகருகே உள்ள மாவட்டங்களுக்குச் செல்ல விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாட்டினால் விளைவித்த பொருட்களை விற்க முடியாமலும், வியாபாரிகள் வாங்க முடியாமலும் செய்வதறியாமல் இருக்கிறார்கள். விளைவித்த பொருட்கள் வீணாவதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தைச் சந்திக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. இ-பாஸ் முறையைக் கைவிட்டால் மட்டுமே அனைத்துத் தொழில்களும் வேகமெடுக்கும். இதுவே இழந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவும். பல தளர்வுகள் கொடுத்திருந்தாலும் இ-பாஸ் முறையில் மக்களுக்கு உள்ள சிரமங்களைப் புரிந்து கொண்டு இன்றைக்குக் கைவிடுவது சாலச்சிறந்ததாக இருக்கும் என்று தமிழக அரசையும், தமிழக முதலமைச்சரையும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வலியுறுத்துகிறது." எனக் கூறியுள்ளார்.

 

 

Next Story

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏமாற்றுகிறார் - கொ.ம.தே.க. ஈஸ்வரன்!

Published on 08/08/2019 | Edited on 08/08/2019

"மழைநீரை சேமிக்கின்ற மக்களின் எண்ணங்களுக்கு தமிழக அரசு ஆதரவாக இல்லை.முதலமைச்சரின் உத்தரவு ஏமாற்று வேலை" என கூறிய கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் இ.ஆர்.ஈஸ்வரன் மேலும் கூறும்போது,

"தமிழகம் முழுவதும் ஏரி, குளங்களை தமிழக அரசு தூர்வார ஆர்வம் காட்டாததால் பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் இணைந்து ஏரி, குளங்களை தூர்வாரி மழைநீரை சேமிக்கின்ற முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்கள். ஆனால் அந்த பணிகளுக்கு அரசு தரப்பில் அனுமதி அளிப்பதற்கே தாமதப்படுத்துகிறார்கள். போராடி அனுமதி பெற்றாலும் ஒத்துழைப்பு தர மறுக்கிறார்கள்.

 

eswaran

 

கோவையில் சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் இருக்கின்ற ஆச்சான் குளம் மிகப்பெரிய குளம். 20 கிராமங்களில் நிலத்தடிநீரை மேம்படுத்தக் கூடிய குளம். பல ஆண்டுகளாக தூர்வாராமல் கிடப்பிலே போடப்பட்டதால் மழைநீரை சேமிக்கின்ற கொள்ளளவு வெகுவாக குறைந்து போனது. பொதுமக்களின் தொடர் கோரிக்கைகளும், போராட்டங்களும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல ஆனது. ஒவ்வொரு தேர்தலிலும் ஆச்சான் குளம் தூர்வாரப்படும் என்பது தேர்தல் வாக்குறுதியாகவே இருந்தது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனிடம் ஆச்சான் குளத்தை தூர்வார நிதி ஒதுக்க வேண்டும் என்று கேட்டிருந்தோம். வெற்றி பெற்ற பிறகு நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனை சந்தித்து கேட்டபோது 75 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி நானே முன்னின்று குளத்தை தூர்வாருகின்ற பணிகளை முடித்து வைக்கிறேன் என்றார். 

சொன்னபடியே ஆச்சான் குளத்திற்கு வந்து ஒரு கூட்டத்தை கூட்டி நிதி ஒதுக்குவதை பற்றியும், தூர்வாருகின்ற பணிகளை வேகப்படுத்துவது பற்றியும் அந்தப்பகுதி மக்களோடு சேர்ந்து ஆலோசித்தார். சூலூர் சட்டமன்ற உறுப்பினரும் தன்னுடைய பங்கிற்கு 10 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளாட்சித்துறை அமைச்சரை அழைத்து பணியை துவக்கி வைத்துள்ளார். அதற்கு பிறகு பொதுமக்கள் சார்பாக இயந்திரங்கள் இலவசமாக கொடுக்கப்பட்டு குளத்தை சுத்தம் செய்கின்ற பணிகள் வெகுவேகமாக நடந்தது.

வருடக்கணக்கில் வளர்ந்து கிடந்த சீமை கருவேலமரங்கள் வெகுவிரைவாக அகற்றப்பட்டன. 3 வாரத்திற்கு முன் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கலந்துகொண்ட கூட்டத்திலேயே குளத்தை எங்கெங்கே எவ்வளவு ஆழம் இருக்கிறது என்று அளவீடு செய்து திட்டமிட்டு தூர்வாரலாம் என்று ஆலோசிக்கப்பட்டது. பொதுப்பணித்துறைதான் இந்த அளவீடுகளை செய்து தூர்வாருகின்ற பணியை மேற்பார்வையிட அதிகாரம் கொண்டது. ஆனால் கடந்த 3 வாரங்களாக பொதுமக்களால் திரும்பத்திரும்ப கோரிக்கை வைத்தபோதும் அளவீடு செய்யாமல் பொதுப்பணித்துறை இழுத்தடிக்கிறது. இந்நேரம் பொதுப்பணித்துறை ஒத்துழைப்பு கொடுத்து அளவீட்டை முடித்திருந்தால் தூர்வாருகின்ற பணி வேகமாக நடந்திருக்கும். எப்படியாவது இதை தாமதப்படுத்தி மழை வரும் வரை இழுத்துவிட வேண்டுமென்ற எண்ணத்தில் தமிழக அரசு செயல்படுவதாக அந்தப்பகுதி மக்கள் சந்தேகப்படுகிறார்கள். முதலமைச்சர் ஒருபுறம் மக்கள் இயக்கம் ஆரம்பித்து ஒரு சொட்டுநீரை கூட வீணாக்காமல் சேமிப்போம் என்கிறார்.

உள்ளாட்சித்துறை அமைச்சர் விளம்பர தூதராக வந்து மழைநீர் சேகரிப்பை பற்றி தமிழக மக்களுக்கு அறிவுரை சொல்கிறார். ஆனால் அரசு எந்திரமோ மக்களே களமிறங்கி மழைநீரை சேமிக்க முயற்சித்தாலும் ஒத்துழைப்பு கொடுக்க மறுக்கிறது. தமிழகம் முழுவதும் இதேநிலைதான் என்று கேள்விப்படுகிறோம். நீர் மேலாண்மைக்கு என்று தனித்துறையை ஏற்படுத்தி தனி அமைச்சரை நியமிக்க வேண்டும். கோவை ஆச்சான் குளம் தூர்வாருகின்ற பணிகளுக்கு மக்களோடு ஒத்துழைப்பு கொடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை ஏமாற்றும் வேலையை கைவிட வேண்டும்."என்றார்.