Skip to main content

சாதி மறுப்பு திருமணத்தால் இளம்பெண் படுகொலை; பெற்றோர் கைது 

Published on 10/01/2024 | Edited on 10/01/2024
Parents arrested for incident daughter near Pattukottai

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள நெய்வவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் மகள் ஐஸ்வர்யா (19). அந்த ஊருக்கு பக்கத்து ஊரான பூவாளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர் மகன் நவீன்(19) டிப்ளமோ படித்துள்ளார்.

வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த நவீனும் ஐஸ்வர்யாவும் ஒன்றாகப் படித்தவர்கள் என்பதால் நண்பர்களாகப் பழகி பின்னர் காதலர்களாகினர். இருவரும் திருப்பூர் பகுதியில் வெவ்வேறு வேலைகள் செய்து வந்தாலும் ஒரே இடத்தில் தங்கி இருந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்ட படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவியதால் ஐஸ்வர்யாவின் தந்தை பல்லடம் சென்று காவல் நிலையத்தில் தன் மகளைக் காணவில்லை என்று புகார் கொடுத்துள்ளார். மேலும் ஐஸ்வர்யா - நவீன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்த போலீசார், ஜனவரி 2 ஆம் தேதி ஐஸ்வர்யாவை மீட்டு அவரது தந்தை பெருமாள் மற்றும் உறவினர்களுடன் அனுப்பி வைத்துள்ளனர்.

ஐஸ்வர்யாவை அவரது தந்தை அழைத்துச் செல்வதைப் பார்த்த நவீனும் அவர்களின் வாகனத்தை ஒட்டியே தனது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து ஊருக்கு வந்துள்ளார். ஐஸ்வர்யா வீடு வரை சென்று அதன் பிறகு தனது வீட்டிற்குச் சென்றுள்ளார். இந்த நிலையில் சில நாட்களாக ஐஸ்வர்யாவை வெளியில் காணவில்லை. அவரைக் கண்டுபிடிக்கக் கோரி வா.கொல்லைக்காடு காவல் நிலையத்தில் நவீன் புகார் கொடுத்திருந்த நிலையில், மற்றொரு வீடியோ போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதில் ஐஸ்வர்யாவை அவரது தந்தை உள்பட உறவினர்களே கொன்று எரித்துவிட்டதாகக் கூறப்பட்டிருந்ததாக அறியப்பட்டது. அதன் பிறகு தலைமறைவாக இருந்த பெருமாள் மற்றும் அவரது மனைவி ரோஜா உள்பட பலரை தேடிப் பிடித்த போலீசார் நடத்திய விசாரணையில், சாதி மறுப்பு திருமணம் செய்தது எங்களுக்கு அவமானமாக இருந்ததால் ஐஸ்வர்யாவை கொன்று மயானத்தில் வைத்து எரித்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

Parents arrested for incident daughter near Pattukottai

அதிர்ச்சியடைந்த போலீசார், ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் மற்றும் தாய் ரோஜா ஆகிய இருவரையும் கைது செய்து பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த மற்றவர்களையும் அடையாளம் கண்டு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சாதி மறுப்பு திருமணம் செய்ததால் பெற்ற மகளையே கொன்ற தாய் - தந்தையை நீதிமன்றம் அழைத்து வந்தபோது ஊரே வேடிக்கை பார்த்தது. பல்லடம் போலீசார், திருமணம் செய்துள்ள ஒரு தம்பதியை வழக்குப் பதிவு செய்யாமல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் புகார் கொடுத்தவர்களுடன் அனுப்பி வைத்ததால்தான் இப்படி ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளதாகப் பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்பும் நிலையில், பல்லடம் காவல் நிலைய ஆய்வாளர் முருகையன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

கோவில் காவலாளி அடித்துக் கொலை; போலீசார் தீவிர சோதனை!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
69-year-old temple watchman was beaten to passed away near Mappedu

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுமாநகர் பகுதியில் புதிதாக விநாயகர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கட்டுமான பணிக்காக செங்கல் இறக்கி வைத்திருப்பதால், அதனை பாதுகாப்பதற்காக  கோவிலுக்கு காவலாளியாக செல்வம் (69) என்ற முதியவர் கடந்த இரண்டு நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கோவில் காவலாளி செல்வம் தலையில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த காவலாளி செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், முதியவர் செல்வத்திற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தனியாக வாழ்ந்து வந்தது தெரிந்தது. மப்பேடு மாநகரில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த இரண்டு நாட்களாக கோயில் கட்டுமான பணி காரணமாக இரவு காவலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது. எனவே புதிதாக கட்டப்படும் கோயிலில் 69 வயதான செல்லம் முதியவர் காவலாளியாக வேலை பார்த்த நிலையில் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்த கொலை நடைபெற்றது? இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளிக்கே பாதுகாப்பு இல்லாத சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Next Story

சங்கம்விடுதி குடிநீர் தொட்டி விவகாரம்! அதிகாரிகள் ஆய்வு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sangamviduthi drinking water tank issue officials investigation

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள குருவாண்டான் தெருவில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதே பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கும் இந்த தண்ணீரே வழங்கப்படுகிறது. ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமுதாய மக்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. பாகுபாடற்ற ஒற்றுமையான கிராமமாக உள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு காலையில் குழாயில் தண்ணீர் தூசியாக வந்துள்ளதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் தண்ணீர் தொட்டியில் ஏறிப் பார்த்துவிட்டு தண்ணீரை வெளியேற்றி பார்த்துள்ளனர். உள்ளே பாசி போல கருப்பாக ஆங்காங்கே கிடந்துள்ளது. அவற்றை சேகரித்து வெளியே எடுத்து பார்த்த போது கூடியிருந்தவர்கள் ஒவ்வொருவரும் மாட்டுச் சாணம் என்றும், தொட்டி சரியாக கழுவாததால் சேர்ந்துள்ள பாசி என்றும் கூறினர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

இந்த தகவல் அறிந்து வருவாய்த் துறை, ஊரகவளர்ச்சித்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரனை செய்தனர். தொடர்ந்து தண்ணீரையும், தண்ணீர் தொட்டியில்இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுகளையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றதுடன் தற்காலிகமாக சம்மந்தப்பட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து குடிநீர் கொடுப்பதை நிறுத்திவிட்டு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தனர். சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அறந்தாங்கி டிடி நமச்சிவாயம் தலைமையில் கடந்த 2 நாட்களாக அந்த ஊரில் மருத்துவ முகாம் நடந்து வருகிறது. மேலும் அதே பகுதியில் உள்ள காவிரி குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வழங்க அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள சிலர் கூறும் போது, தண்ணீர் தொட்டி சரிவர சுத்தம் செய்யாததால் தேங்கிய பாசி கரைந்து குழாய்களில் வந்திருக்கலாம். மேலும் இந்த ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமூதாயத்தவர்களுக்கும் தண்ணீர் போவதால் வேறு கழிவுகளை கலந்திருக்க அச்சப்படுவார்கள். ஆய்வு முடிவுகள் வந்த பிறகே உண்மை நிலை தெரியும். அதற்குள் யாரும் சமுதாய ரீதியாக அணுக வேண்டாம் என்கின்றனர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்த டிடி நமச்சிவாயம்.. கழிவு இருந்ததாக மக்கள் சொன்னார்கள் கழிவுகள், தண்ணீர் ஆய்விற்கு போய் உள்ளது. ஏதேனும் கலந்த தண்ணீரை குடித்திருந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு வந்திருக்கும். இதுவரை இந்த கிராமத்தில் அப்படி எந்த பாதிப்பும் இல்லை. மேலும் தண்ணீர் தொட்டியில் மீண்டும் சுத்தம் செய்து தண்ணீர் ஏற்றி குளோரின் செய்யப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்யும் போது கலப்படம் இருந்தால் தெரியும். இரண்டு நாள் மருத்துவ முகாமில் நேற்று 40 பேரும் இன்று 12 பேருமே வந்துள்ளனர். அவர்களும் சாதாரணமாக வந்தவர்கள் தான். தொடர்ந்து ஆய்வுகள் நடக்கிறது என்றார். இந்த நிலையில் போலீசார் வஜ்ரா வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.