Skip to main content

“ரயில் தீ விபத்தில் சதி வேலைக்கான சாத்தியம் இல்லை” - ரயில்வே ஏடிஜிபி வனிதா 

Published on 26/08/2023 | Edited on 26/08/2023

 

No possibility of in train fire  Railway ADGP Vanitha

 

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவிலிருந்து தென்னிந்தியாவில் சாமி தரிசனம் செய்வதற்காக 60க்கும் மேற்பட்ட பக்தர்கள் லக்னோ - ராமேஸ்வரம் யாத்திரை சுற்றுலா ரயில் மூலம் கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி தமிழகம் வந்திருந்தனர். நேற்று நாகர்கோவிலில் பத்மநாபா கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு இன்று மதுரை வந்தடைந்த இந்த ரயில் மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது ரயில் பெட்டியில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த ரயிலில் வந்த பயணிகள் சமைத்துச் சாப்பிடுவதற்காக சிலிண்டரை எடுத்து வந்துள்ளனர். இன்று காலை டீ போடுவதற்குப் பயணிகள் சிலிண்டர் பற்ற வைத்தபோது தீ விபத்து ஏற்பட்டுள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

மேலும் அவர்கள் மூன்று சிலிண்டர்கள் மற்றும் விறகுகளும் வைத்திருந்ததால் தீ மளமளவெனப் பற்றியதில் அந்த ரயில் பெட்டி முழுவதும் தீப்பற்றியது. இதில், 2 பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ. 3 லட்சமும், ரயில்வே நிர்வாகம் சார்பில் தலா ரூ.10 லட்சமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த விபத்து குறித்து உ.பி மாநிலம் சீதாப்பூரைச் சேர்ந்த தனியார் சுற்றுலா நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்ய தென்னக ரயில்வே போலீசார் லக்னோ போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளனர். இந்த நிறுவனத்தின் மேலாளர் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் ரயில் தீ விபத்தில் இறந்த 9 பேரின் உடல்களும் இன்று இரவு பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் மதுரையில் இருந்து சென்னை கொண்டு வரப்படுகிறது. சென்னையில் இருந்து 9 பேரின் உடல்களும் விமானம் மூலம் லக்னோவுக்கு நாளை அனுப்பி வைக்கப்பட உள்ளது.

 

No possibility of in train fire  Railway ADGP Vanitha

 

இந்நிலையில் தெற்கு ரயில்வே காவல் கூடுதல் இயக்குநர் வனிதா விபத்து குறித்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ரயில் தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. பயணிகளை அனுப்பி வைத்த தனியார் டிராவல்ஸ் நிறுவனம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் டிராவல்ஸ் நிறுவனத்தினரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். ரயில் பெட்டியில் சிலிண்டர் பற்ற வைத்து டீ வைத்துள்ளனர். அப்போது சிலிண்டர் அடுப்பில் இருந்து தீ பரவி தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அடுப்பு எரிப்பதற்கான விறகு மற்றும் கரி உள்ளிட்ட எரிப்பொருள்கள் ரயில் பெட்டியில் இருந்தன. வட இந்தியாவில் இருந்து வரும் அனைத்து ரயில்களையும் சோதனை செய்கிறோம். ஆனால் இது போன்று இவ்வளவு எரிபொருட்களுடன் ரயிலில் பயணித்ததை இப்போது தான் பார்க்கிறோம். மதுரை ரயில் நிலையத்துக்கு முன்பாகவே ரயில் நிறுத்தப்பட்டிருந்ததால் இந்த ரயிலில் சோதனை நடத்தவில்லை. ரயில் தீ விபத்தில் சதி வேலைக்கான சாத்தியம் எதுவும் இல்லை” என தெரிவித்தார். 

 

 

 

சார்ந்த செய்திகள்