Skip to main content

17 வயதில் திருமணம்; 2 வயது குழந்தையைக் கொன்று நாடகமாடிய தாய்!

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

Mother arrested for incident 2-year-old boy near Panruti

 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கந்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்தி(27) கூலித் தொழிலாளியான இவருக்கும், பண்ருட்டி அருகே உள்ள உறையூர் கிராமத்தைச் சேர்ந்த நித்யா(19) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மணிலா அறுவடைக்காக திருச்செங்கோடு பகுதிக்குச் சென்றபோது பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறி இருவரும் தனிமையில் இருந்து வந்துள்ளனர். பின்னர் திருமணம் செய்து கொண்டு கர்ப்பமாகி உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக நித்யா கடந்த 2 ஆண்டுகளாகச் சொந்த ஊரில் தனியாக மகனுடன் வசித்து வந்துள்ளார். 

 

இந்த நிலையில், கடந்த 22 ஆம் தேதி அவரது 2 வயது ஆண் குழந்தை இட்லி சாப்பிட்டுவிட்டுத் தூங்கியபோது பேச்சு மூச்சு இல்லாமல் இருந்துள்ளது. இதனால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் உறையூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து புதுப்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், உடல் பிரேதப் பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குழந்தை கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

 

அதனையடுத்து போலீசார், குழந்தையின் தாய் நித்யாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப் பின்னான தகவலைக் கூறினார். தொடர்ந்து  விசாரணை நடத்தியபோது, திருச்செங்கோடு பகுதியில் தனியாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இருவருக்கும் குடும்பப் பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு நாமக்கல் மாவட்டம் நல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தியபோது அப்போது நித்யாவுக்கு 17 வயது எனத் தெரியவந்தது. இதனால் குழந்தை திருமணம் செய்ததாகக் கூறி போக்சோ சட்டத்தின் கீழ் சக்தியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

இதனையடுத்து நித்யா தாய் வீடான உறையூரில் இரண்டு வயது ஆண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், பெற்றோர் இல்லாததால் தனிமையில் கணவர் இன்றி குழந்தையுடன் வசித்து வந்ததால், அப்பகுதியில் உள்ளவர்கள் இவரை ஏளனமாகப் பேசியுள்ளனர். இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு விரக்தியில் குழந்தையை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கிக் கொலை செய்துள்ளதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து புதுப்பேட்டை போலீசார் நித்யாவை கைது செய்தனர். தாயே அவரது 2 வயது ஆண் குழந்தையை கழுத்தை இறுக்கிக் கொலை செய்துவிட்டு நாடகம் ஆடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.