Skip to main content

6 வயது மகனை கொன்றுவிட்டு தாய், தந்தை தற்கொலை

Published on 23/02/2023 | Edited on 23/02/2023

 

Mother and father committed tragedy by their 6-year-old son

 

வாலாஜாபாத் அடுத்த அய்யம்பட்டியைச் சேர்ந்தவர் கலையரசன். 34 வயதான கலையரசன் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு சமையல் ஆர்டர்களை எடுத்து செய்து வந்தார். அவரது மனைவி நித்யா. 30 வயதான நித்யாவிற்கும் கலையரசனுக்கும் ஹேமந்த் குமார் என்ற 6 வயது மகன் உள்ளார்.

 

சில தினங்கள் முன்பு குடும்பத்துடன் திருவள்ளூர் அருகே உள்ள மப்பேடு வாசனாம்பட்டு பகுதியில் உள்ள தன் மனைவியின் வீட்டுக்கு சென்ற கலையரசன் ஓரிரு நாட்கள் அங்கேயே தங்கி இருந்துள்ளார். நேற்று முன்தினம் வழக்கம்போல் அனைவரும் இரவு உணவை முடித்துவிட்டு தூங்கச் சென்றனர். இந்நிலையில், நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவர்கள் இருந்த அறையின் கதவு திறக்கப்படாததால் நித்யாவின் தந்தை கதவைத் தட்டியுள்ளார். நெடுநேரமாகியும் நித்யா மற்றும் கலையரசன் கதவைத் திறக்காததால் சந்தேகம் அடைந்த நித்யாவின் பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அறையில் கலையரசன் மற்றும் நித்யா இருவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அருகில் பேரன் ஹேமந்த் குமாரும் விஷம் கொடுக்கப்பட்டு இறந்து கிடந்துள்ளார்.

 

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கலையரசன் குடும்பத்தினர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் ஏன் என விசாரித்து வருகின்றனர். கேட்டரிங் தொழில் சரியாக இல்லாததால் குடும்பம் நடத்த கலையரசன் மிகவும் கஷ்டப்பட்டு வந்ததாகத் தெரிகிறது. இதன் பிறகே அவரது மாமனார் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறியிருந்தனர். மேலும், தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று பல கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

பெற்ற மகனையே கொன்றுவிட்டு கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்