திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நவம்பர் 15 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு, எம்.பி. சி.என்.அண்ணாதுரை, எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, ஜோதி, சரவணன், இந்து சமய அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர், கலெக்டர் முருகேஷ், எஸ்.பி. கார்த்திகேயன் உட்பட அனைத்துத் துறை அதிகாரிகள், பொதுநல அமைப்பினர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டம் முடிந்து அனைவரும் புறப்பட்டுச் சென்ற பின்பு காவல்துறையிடம் தனது செல்போன் காணாமல் போய்விட்டது என செங்கம் தொகுதி எம்.எல்.ஏ. மு.பெ.கிரி வாய்மொழியாகப் புகார் கூறியதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து சைபர் க்ரைம் போலீசார் மூலமாக செல்போனைத் தேடும் படலம் துவங்கியுள்ளது. காஸ்ட்லியான செல்போன் என்பதால் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மொபைல் திருடு போன இரண்டு மணி நேரம் ரிங் போய்க்கொண்டு இருந்ததாகவும், அதன்பின் தற்போது வரை அது சுவிட்ச் ஆப் நிலையிலேயே உள்ளது என்கிறார்கள் காவல்துறையினரும், செல்போனைப் பறிகொடுத்த எம்.எல்.ஏ. தரப்பினரும்.
எம்.எல்.ஏ.வின் செல்போன் திருடு போனதைத் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டத்தின் வீடியோ பதிவுகள், சிசிடிவி காட்சிகளை வாங்கி காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். அதில் கிடைத்த சில தடயங்கள் மற்றும் டெக்னிக்கல் டிப்பார்ட்மெண்ட் தந்த க்ளுவை கொண்டு சில செல்போன் கடைகளில் விசாரணை நடத்தினர். அதில் ஒரு செல்போன் கடை ஊழியர் சொன்ன தகவலின் படி, அதிமுகவோடு கூட்டணியில் உள்ள கட்சி ஒன்றின் மாநில நிர்வாகியை சந்தேக வளையத்தில் காவல்துறை கொண்டுவந்துள்ளது. அவரிடம் சாதாரண முறையில் செல்போன் குறித்து விசாரித்த போது, எனக்கு தெரியாது எனச் சொன்னதாகக் கூறப்படுகிறது.
தனது செல்போன் திருடு போய்விட்டது என எம்.எல்.ஏ. இதுவரை முறையாகப் புகார் தராததால் சட்டப்படி விசாரிக்காமல், ஆப் தி ரெக்கார்டாகவே விசாரணை நடத்துகிறது காவல்துறை என்பது குறிப்பிடத்தக்கது.