Skip to main content

பெற்றோர் உதவியுடன் மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை; வெளியான அதிர்ச்சி தகவல்!

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Misbehaviour of student with the help of parents in nagercoil

நாகர்கோவில் மாவட்டம் கீரிப்பாறை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 12ஆம் வகுப்பு மாணவி. இவர், தனது குடும்பத்துடன் பூதப்பாண்டி பகுதியில் தங்கி இருந்து பள்ளியில் படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி பள்ளி மாணவி, மாலை நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதில் சந்தேகமடைந்த மாணவியின் பெற்றோர் பூதப்பாண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரின் பேரில், பூதப்பாண்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், அந்த மாணவி சில மாதங்களுக்கு முன்பு பள்ளி விடுமுறைக்காக கீரிப்பாறை பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கே, ஆரல்வாய்மொழி பாரதிநகர் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி பிரகாஷ் (23) என்பவரின் பாட்டி வீடு, மாணவியின் பாட்டி வீடு அருகே உள்ளது. அந்த வகையில், பிரகாஷும், தனது பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளார். 

பக்கத்து வீடு என்பதால், மாணவிக்கும் பிரகாஷுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில், சம்பவம் நடந்த அன்று பிரகாஷ் தனது பெற்றோர் உதவியுடன் மாணவியை கடத்தி திருப்பூர் அழைத்துச் சென்றுள்ளார். மேலும் அவர், அங்கு தனியாக வீடு எடுத்து, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனையடுத்து, மாணவி மாயமான வழக்கில் பிரகாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பிரகாஷை தேடி வருவதை அறிந்த பிரகாஷின் பெற்றோர், திருப்பூர் மாவட்டத்திற்கு சென்று மாணவியை அழைத்து வந்துள்ளனர். மேலும் அவர்கள், நேற்று முன் தினம் (06-03-24) மாணவியை பூதப்பாண்டி அருகே உள்ள கிராமத்தில் மாணவியின் வீட்டு முன்பு விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த வழக்கில் பிரகாஷும் தலைமறைவாகி விட்டார் என்பது தெரியவந்தது.

இதற்கிடையே, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து தலைமறைவாகியுள்ள பிரகாஷை பற்றி போலீசார் மேற்கொண்ட கூடுதல் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் கிடைத்தது. அதில், கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு, பிரகாஷுக்கும், திருமணமான பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய காதலாக மாறியுள்ளது.

இதனையடுத்து, அந்த பெண்ணை, அவரது குழந்தையுடன் அழைத்துக் கொண்டு ஆரல்வாய்மொழி பகுதியில் வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். அப்போது, பிரகாஷ், அந்த பெண்ணை கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதை தாங்காமல், அந்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. மேலும், பிரகாஷ் இது போல் பல பெண்களை கடத்தி வந்து திருமணம் செய்யாமலேயே குடும்பம் நடத்தி அவர்களை கொடுமை செய்து துரத்தி விடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், தலைமறைவான பிரகாஷை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

தாயோடு நீச்சல் பழகிய குழந்தைகள்; 3 பேர் உயிரிழப்பு

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Children who swim with their mother; 3 people lost their lives

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த பிச்சநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40.) இவரது மனைவி பவித்ரா (30). இத்தம்பதியினரின் மகன் ரித்திக் (9),மகள் நித்திகா ஸ்ரீ (7). தற்போது கோடை விடுமுறையில் பிள்ளைகள் வீட்டில் இருந்துள்ளனர். பவித்ரா தினமும் தனது பிள்ளைகளை அருகில் உள்ள விவசாய கிணற்றுக்கு அழைத்துச் சென்று, நீச்சல் பழக கற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதன்படி இன்று பவித்ரா தனது பிள்ளைகளுடன் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். குளிக்கப்போனவர்கள் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடத்துவங்கினர். அப்போது சிறுமி நித்திகாஸ்ரீ கிணற்றில் சடலமாக மிதப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் வேப்பங்குப்பம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேப்பங்குப்பம் காவல் துறையினர் ஒடுக்கத்தூர் தீயணைப்பு துறையினரின் உதவியோடு கிணற்றில் சடலமாக கிடந்த மூன்று பேரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிணற்றில் குளிக்கும் போது எதிர்பாராத விதமாக தாய் உட்பட 3 பேரும் கிணற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என முதல் கட்டமாகக் கூறப்படுகிறது. கோடை காலம் தொடங்கிய நிலையிலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையிலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் நீர் நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மருத்துவம் பார்ப்பது போல் வந்து தம்பதியைக் கழுத்தறுத்து படுகொலை; அதிரவைத்த கொடூரச் சம்பவம்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Shocking incident on strangled the couple in chennai

ஆவடி அருகே மிட்டனமல்லி காந்தி மெயின் ரோடு இரண்டாவது குறுக்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சித்த மருத்துவர் சிவன் நாயர். இவர், தனது வீட்டிலேயே மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி பிரசன்னா குமாரி. இவர் மத்திய அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவர். இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள். இவர்களது மகன், இதே பகுதியில் சித்த மருத்துவம் பார்த்து வருகிறார். இவர்களது மகள் வெளிநாட்டில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், வழக்கம் போல், இன்று சிவன் நாயர் தனது வீட்டில் சிகிச்சை பார்த்து வந்துள்ளார். அப்போது, சிகிச்சை பார்ப்பது போல வந்த மர்ம நபர்கள் சிவன் நாயர் மற்றும் அவரது மனைவி பிரசன்னா குமாரி ஆகியோரை கழுத்தை அறுத்து கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். இது குறித்து அக்கம் பக்கத்தினர் முத்தாபுதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முத்தாபுதுப்பேட்டை போலீசார், உயிரிழந்த தம்பதியின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மத்திய அரசு நிறுவனங்கள் அமைந்துள்ள பிரதான பகுதியில் கணவன், மனைவி ஆகியோர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதை அடுத்து 100 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் வீட்டில் இருந்த நகை பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனரா? என்றும், குடும்ப தகராறு காரணமாக கொலை நடத்தப்பட்டு இருக்குமா? என்ற கோணங்களிலும் முத்தாபுதுப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆவடி காவல் ஆணையரக பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலை, கொள்ளை சம்பவத்தால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இந்தப் பகுதியில், எங்கும் சி.சி.டி.வி கேமராக்கள் இல்லாததால் குற்றவாளிகளைப் பிடிக்க போலீசாருக்கு சவாலாக உள்ளது எனக் கூறப்படுகிறது. ஆவடியில் கணவன் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.