Skip to main content

“1 முதல் 5  வேண்டாம்... 12 வரை விரிவாக்குங்கள்...” - வைரலாகும் அமைச்சர் பிடிஆரின் பரிந்துரை 

Published on 26/08/2023 | Edited on 26/08/2023

 

Minister PTR video on breakfast scheme goes viral

 

காலை உணவுத் திட்டத்தை அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தும் நோக்கில், நாகை மாவட்டம் திருக்குவளையில் கலைஞர் படித்த அரசு நடுநிலைப் பள்ளியில் நேற்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் 31 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் அமர்ந்து உணவு அருந்தினார். இதேபோன்று தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள எம்.எல்.ஏக்கள். எம்.பிக்கள். அமைச்சர்கள் என அனைவரும் தங்கள் தொகுதிகளுக்கு உட்பட்ட பள்ளியில் இத்திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டனர். 

 

அந்த வகையில் மதுரையில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காலை உணவுத் திட்டத்தைத் தொடங்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். அப்போது அவர் மாணவர்களிடம் நடந்துகொண்ட விதம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மாணவர்களிடம் அமைச்சர் பிடிஆர், அனைவரும் நன்றாக சாப்பிடுங்கள் என்றார். மேலும் பக்கத்தில் இருந்த மாணவரிடம், “என்ன படிக்கிற, நல்லா படி, நல்லா சாப்பிடு” என்று கூறிக்கொண்டிருந்தார். அப்போது அதே பள்ளியைச் சேர்ந்த இடைநிலை வகுப்பு மாணவர்கள் அங்கு வந்தனர். அவர்களிடம் வகுப்பு குறித்தும் சாப்பிட்டீர்களா என்றும் கேட்டறிந்தார்.

 

பிறகு, 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை இருக்கும் பள்ளிகளில் மாணவர்களுக்குக் காலை உணவு தரப்படுகிறது. ஆனால் உயர்நிலை மற்றும் மேல்நிலையில் இருக்கும் பள்ளிகளில், ‘5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் காலை உணவு கொடுப்பது மாதிரியும், மற்ற மாணவர்களுக்குக் கொடுக்க முடியாத சூழலும் ஏற்படுகிறது’ என்று கூறிய அவர், அருகே இருந்த மதுரை மேயர் இந்திராணியை அழைத்து, “இது தொடர்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளின் பட்டியலை எடுத்து நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றுங்கள். பொது ஆர்வலர்கள் யாரெல்லாம் மாணவர்களுக்குச் சாப்பிடுவதற்கு நிதி கொடுக்கிறார்களோ கொடுக்கட்டும். நான் இந்த பள்ளிக்குப் பணம் கொடுக்கிறேன். அப்படி கிடைக்கும் பணத்தை வைத்து இதே ஒப்பந்ததாரரிடம் கொடுத்து அனைத்து மாணவர்களுக்கும் சேர்த்துச் சமைக்கச் சொல்லுவோம். ஒரே பள்ளியில் ஒருவருக்கு உணவு அளித்தும் ஒருவருக்கு உணவு அளிக்காமலும் இருப்பது சரியாக இருக்காது” என்றார். 

 

அப்போது 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் காலையில் சாப்பிடாமல் பள்ளிக்கு வந்ததால் தலைவலி, மயக்கம் ஏற்பட்டதாக கூறினார். அவருக்கு உடனடியாக சாப்பாடு கொடுக்கச் சொன்ன அமைச்சர் பிடிஆர், அந்த மாணவன் சாப்பிடும் வரை அவர் பக்கத்தில் உட்கார்ந்து அவரைப் பற்றிய விவரங்கள் கேட்டுக்கொண்டு முழு சாப்பாட்டையும் சாப்பிட வைத்தார். அப்போது அந்த மாணவரிடம், “என்னடா இவ்வளவு ஒல்லியாக இருக்க. ஒழுங்கா சாப்பிட மாட்டாயா? தினமும் சாப்டுவியா இல்லையா? உன்ன மாதிரி குழந்தைகள் தான் நம் எதிர்காலம். நீ சரியா சாப்டாம இப்படி இருந்தால் வயசான காலத்துல நாங்க எல்லாம் என்னப் பன்றது” என்று கேட்டார். அதற்கு, ‘கடந்த வருடம் மஞ்சள் காமாலை வந்தது’ என்றார் அந்த மாணவர். உடனடியாக உதவியாளரை அழைத்து, “இந்த பையன் ரொம்ப ஊட்டச்சத்து குறைபாடோட இருக்கான். இவனை நம்ம டீன் கிட்ட காட்டி தேவையான சிகிச்சை அளிக்க சொல்லுங்கள்” என்றார். பிறகு “இந்த பள்ளிக்கு மருத்துவ முகாம் ஒன்று நடத்துவோம்” என்றும் கூறினார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வரும் நிலையில் அமைச்சர் பிடிஆரின் பரிந்துரைக்கு சமூக வலைத்தளங்களில் லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

‘அறிவியல் ரீதியிலான சிறந்த பயிற்சி’ - விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவிப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Best Scientific Practice Sports Development Authority Notice

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2024 ஆம் ஆண்டுக்கான கோடைகால பயிற்சி முகாம் குறைந்த கட்டணத்தில் அறிவியல் ரீதியிலான சிறந்த பயிற்சி அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஒவ்வொரு வருடமும் 18 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியர்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட விளையாட்டுகளில் அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் சென்னையில் அமைந்துள்ள நவீன விளையாட்டு அரங்கங்களில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்றுநர்களைக் கொண்டு கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி முகாமில் தகுதி பெற்ற பயிற்றுநர்களைக் கொண்டு விஞ்ஞான ரீதியலான பயிற்சி (காலை, மாலை இருவேளைகளிலும்), சிற்றுண்டி, குடிநீர், பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்கள் மற்றும் சீருடை (T-Shirt) வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை மற்றும் நவீன விளையாட்டரங்கங்களில் 2013 ஆம் ஆண்டு முதல் கோடைகால பயிற்சி முகாமிற்கான பயிற்சி கட்டணம் பெறப்பட்டு வந்துள்ளது. எடுத்துக்காட்டாக 2013 ஆம் ஆண்டு டென்னிஸ் ரூ.1,500/-ம் இறகுப்பந்து ரூ. 1,000/- ம் கிரிக்கெட் ரூ.500/-ம் போல ஒவ்வொரு விளையாட்டுக்கும் வெவ்வெறு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டில் தடகளம், வாள் விளையாட்டு, கைப்பந்து, கையுந்துப்பந்து விளையாட்டுகளுக்குத் தலா 500/- ரூபாயும் கிரிக்கெட், கால்பந்து, ஜிம்நாஸ்டிக்ஸ், வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் போன்ற விளையாட்டுகளுக்கு ரூ. 1000/-மும் டென்னிஸ் ரூ. 1,500/-ம் இறகுப்பந்து போன்ற விளையாட்டுகளுக்கு ரூ. 2000/- வரை பயிற்சிக் கட்டணமாக பெறப்பட்டு வந்தது. 

Best Scientific Practice Sports Development Authority Notice

ஆனால், மாணவ மாணவியரிடையே பெருகி வரும் விளையாட்டு ஆர்வத்தை ஊக்கப்படுத்தவும் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்த பயிற்றுநர்கள் காலி இடங்களில் பல்வேறு மாவட்டங்களில் பணியமர்த்தப்பட்ட 76 பயிற்றுநர்களின் சேவை மாணவ, மாணவியர்க்கு கிடைக்கும் வகையிலும் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் மேம்படுத்தப்பட்ட விளையாட்டு வசதிகளில் விளையாடும் வாய்ப்பை மாணவ மாணவியர்க்கு அளிக்கும் வகையிலும் இந்த ஆண்டு 29.04.2024 முதல் 13.05.2024 வரை நடைபெறவுள்ள கோடைகால பயிற்சி முகாமில், ஏற்கெனவே. வெவ்வேறு பயிற்சிக் கட்டணம் (அதாவது ரூ.200/-லிருந்து ரூ.2000/- வரை) நிர்ணயிக்கப்பட்டு இருந்ததை தற்போது முறைப்படுத்தி அனைவரும் பயன் பெறும் வகையில் சென்னையில் அனைத்து விளையாட்டுகளுக்கும் ஒரே கட்டணமாக ரூ.500, பிற மாவட்டங்களில் ரூ.200 மட்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி முகாமில் அறிவியல் ரீதியிலான பயிற்சி, விளையாட்டு சீருடை, சிற்றுண்டி, சான்றிதழ்கள் போன்றவை மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படும்.

2013-ஆம் வருடம் முதல் 2019ஆம் ஆண்டு வரை (2016 ஆம் வருடம் நீங்கலாக தேர்தல் நடத்தை விதிமுறைகளை முன்னிட்டு) மாவட்ட தலைநகரங்களுக்குச் செலவினத் தொகையாகத் தலா ரூ. 8,000/- வரை வழங்கப்பட்டு வந்தது. 2020-2022 வரை கொரோனா காலத்தில் பயிற்சி முகாம் நடைபெறவில்லை. 2023-ஆம் ஆண்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கோடைக்கால பயிற்சி முகாம் 15 நாட்கள் நடைபெற்றது. இதற்கு அனைத்து மாவட்டத் தலைநகரங்களுக்கும் சென்னையில் உள்ள நவீன விளையாட்டரங்களுக்கும் செலவினத் தொகையாக ரூ.15,000/-ஆக உயர்த்தி வழங்கப்பட்டு அனைத்து விளையாட்டு வசதிகளுடன் 18 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியருக்கு பயிற்சி முகாம் சிறப்பான முறையில் நடத்தப்பட்டது. 2024 ஆம் ஆண்டும் இப்பயிற்சி முகாம் சிறப்பாக நடத்துவதற்கு அனைத்து மாவட்டங்களுக்கும் ரூ.15,000/- அனுப்பப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.