Skip to main content

“நீ படிம்மா...நான் செலவ பாத்துக்கிறேன்...” - அமைச்சர் உறுதியால் நெகிழ்ந்த மாணவி

Published on 08/11/2022 | Edited on 08/11/2022

 

Minister Gandhi fully accepted the education expenses poor student

 

இராணிப்பேட்டை மாவட்டம் புளியங்கண்ணு கிராமத்தில் வசிக்கும் குடுகுடுப்பைக்காரர் சமூகத்தைச் சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி மல்லிப்பூ. இந்த தம்பதிக்கு 20 வயதில் பழனி என்ற மகனும், 14 வயதில் செல்வி என்ற மகளும் உள்ளனர்.

 

கூலித் தொழிலாளியான இவர்கள் சிறிய ஓலைக் குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். பாபு சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால்  இறந்துவிட்டார். குடும்பத்தைக் காப்பாற்ற மல்லிப்பூ தனது இரண்டு பிள்ளைகளைப் படிக்க வைக்க வீதி வீதியாகச் சென்று சுருக்குப் பை விற்பனை செய்துள்ளார். அந்த வருமானம் போதாததால், பிளாஸ்டிக் பொருட்களை தெருத்தெருவாக விற்பனை செய்து அந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். 

 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட வாகன விபத்தில் மல்லிப்பூ கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு அவரால் தொடர்ந்து வேலைக்குச் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கினார். இந்தச் சூழலில் குடும்ப வறுமை, சாப்பாட்டுக்கு வழியில்லாததால் மகன் பழனி பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டுக் குடுகுடுப்பைத் தொழிலினைச் செய்துள்ளார். அதிலும் போதிய வருமானம் கிடைக்காத காரணத்தினால் குடும்பத்தை நடத்த வேண்டும் என்பதற்காக அதே கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்த செல்வியும் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு தனது தாயார் மேற்கொண்டு வந்த சுருக்குப்பை விற்பனை மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை வீதி வீதியாகத் தலையில் சுமந்தவாறு நடந்து சென்று விற்பனை செய்துள்ளார். அதன் மூலமாக வரக்கூடிய வருமானத்தைக் கொண்டு அவர்களது குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார்.

 

Minister Gandhi fully accepted the education expenses poor student

 

இது குறித்த தகவல் சமூக நல ஆர்வலர்கள் மூலமாக அறிந்த கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, மாவட்ட ஆட்சியர் பாண்டியன் மற்றும் அதிகாரிகள் அச்சிறுமியின் வீட்டிற்கு நவம்பர் 7ஆம் தேதி நேரில் சென்று படுத்தப் படுக்கையாக உள்ள சிறுமியின் தாய்க்கு ஆறுதல் தெரிவித்தனர். சிறுமியின் பள்ளி மற்றும் கல்லூரி செலவு முழுவதையும் தானே ஏற்பதாக உறுதி அளித்த அமைச்சர், மல்லிப்பூவிற்கு உடனடியாக அரசின் சார்பில் இலவச வீடு கட்டித் தர ஆணையிட்டார். மேலும் அவருக்கு உடனடியாக முதியோர் ஓய்வூதியத்தை வழங்க உத்தரவிட்டார்.

 

சிறுமியின் சகோதரர் பழனிக்கு தனியார் தொழிற்சாலையில் பணி வழங்க நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார். தொடர்ந்து கல்வித்துறை அதிகாரிகளை அழைத்த அமைச்சர், மாணவியை இன்றே பள்ளியில் சேர்க்க உத்தரவிட்டார். அதன்படி மாவட்ட ஆட்சியர் பாண்டியன் அந்த மாணவியைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று வகுப்பில் மீண்டும் சேர்த்தார். அதன்படி மாணவி சீருடை உடுத்தி மகிழ்ச்சியோடு படிக்கத் துவங்கியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது