Skip to main content

“அரசுப் பேருந்துகளைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும்” - முதல்வர் அறிவுறுத்தல்

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
Maintain cleanliness of public transport Chief Minister's instruction

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் 634.99 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக 1666 பேருந்துகளை கொள்முதல் செய்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் முதற்கட்டமாக 100 பிஎஸ் 4 (BS-VI) பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் மத்திய பணிமனையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “அதிகரித்து வரும் போக்குவரத்துத் தேவைக்கேற்ப புதிதாக 1,000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் எனக் கடந்த 19.10.2022 அன்று சட்டப்பேரவையில் 110-விதியின்கீழ் அறிவித்தேன். அதன்படி, ரூ.634.99 கோடி மதிப்பீட்டில் புதிதாக 1,666 பிஎஸ் 4 பேருந்துகளைக் கொள்முதல் செய்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் முதற்கட்டமாக இன்று 100 புதிய பேருந்துகளைத் தொடங்கி வைத்தேன். எஞ்சியுள்ள பேருந்துகள் அடுத்த இரண்டு மாதங்களில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும். பொதுமக்கள் தங்கள் வீட்டின் சொந்த வாகனங்களில் பயணிப்பதைப் போன்று பொதுப் போக்குவரத்து பேருந்துகளைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், போக்குவரத்துக் கழகங்களின் மேலாண்மை இயக்குநர்கள், தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் பொருளாளர் கி. நடராஜன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 

சார்ந்த செய்திகள்