Skip to main content

முகநூல் காதல்; 8 பேரை திருமணம் செய்த இளம்பெண் 

Published on 14/02/2023 | Edited on 14/02/2023

 

mahalaxmi eight youngster marriage police case incident 

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வாணியம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்ராஜ் (வயது 25). விவசாயியான இவர் முகநூல் (facebook) பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார். மேலும் இதன் மூலம் பல்வேறு நபர்களை நண்பர்களாகச் சேர்த்து தகவல்களை பரிமாறிக் கொள்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார்.

 

இந்நிலையில்,  கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வேலூர் மாவட்டம் விருதம்பட்டு பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவரும் முகநூல் மூலம் அருள்ராஜிடம் நண்பராக சேர்ந்துள்ளார். மகாலட்சுமி 'தான் அனாதை என்றும், தனக்கு பெற்றோர் இல்லை என்றும், தன்னை உண்மையாக நேசிக்கும் நண்பர் தேவை' என்றும் இரக்கம் ஏற்படும்படி கூறி அருள்ராஜிடம் அறிமுகமாகியுள்ளார். பின்னர் அருள்ராஜை காதலிப்பதாகக் கூறியுள்ளார். மகாலட்சுமியின் ஆசை வார்த்தைகளை நம்பி அருள்ராஜ் அவரை உண்மையாக காதலித்துள்ளார். அதனைத் தொடர்ந்து தனது பெற்றோரிடம் பேசி திருமணம் செய்ய அனுமதி வாங்கிய அருள்ராஜ் கடந்த ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி அன்று திருவதிகையில் உள்ள கோயிலில் மகாலட்சுமியை முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

 

திருமணம் முடிந்து 4 மாதத்திற்குப் பிறகு, 'சென்னையில் தனது தோழிக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார். அவரை பார்த்துவிட்டு வருகிறேன்' என்று கூறிவிட்டு மகாலட்சுமி சென்றுள்ளார். மறுநாள் காலையில் அருள்ராஜ் பார்த்தபோது வீட்டில் இருந்த 7 பவுன் தங்க நகை, ரூபாய் 85 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றைக் காணவில்லை.  செல்போன் மூலம் மகாலட்சுமியை பலமுறை தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் ஆகியிருந்திருக்கிறது. இதனால் சந்தேகமடைந்த அருள்ராஜ் மனைவி கொடுத்த முகவரிக்கு சென்று விசாரித்த போது அதுபோன்று இங்கு யாரும் இல்லை எனக் கூறியுள்ளனர். இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்தார் அருள்ராஜ்.

 

இந்த சூழ்நிலையில் தொலைக்காட்சியில் பல்வேறு நபர்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு பணம், நகை திருடிய மகாலட்சுமி குறித்து செய்தி வெளியானதை கண்ட அருள்ராஜ்., தன்னை போல் இதுவரை 8 பேரை ஏமாற்றி திருமணம் செய்த பெண் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் போலீசார், மோசடி செய்த மகாலட்சுமி என்ற பெண்ணை தேடி வருகின்றனர். இந்தப் பெண்ணின் முழு நேர வேலையே பேஸ்புக் மூலம் கல்யாணம் ஆகாத ஆண்களிடம் பழகி அவர்களை காதலிக்கிறேன் என முதலில் ஆசை வார்த்தை கூறி, அவர்களை காதல் வலையில் விழ வைத்து திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்று கூறி அவர்களை திருமணம் செய்து கொள்வார். அதன்பிறகுதான் அவரின் சுயரூபம் தெரியவரும். திருமணமான முதல் நாளில் தனது கணவர்களிடம் தனக்கு அவசர வேலை இருப்பதாகக் கூறிவிட்டு யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் நகை, பணம் உள்ளிட்டவற்றை அபேஸ் செய்து கொண்டு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

 

mahalaxmi eight youngster marriage police case incident 

இதேபோன்று மகாலட்சுமி கடலூர், விழுப்புரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் ஆண்களிடம் கைவரிசையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் மகாலட்சுமி கடந்த இரண்டு தினங்களுக்கு முன் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு வாலிபரையும் தனது பாணியில் திருமணம் செய்து நகை பணத்தை அபேஸ் செய்து சென்றது தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியானது. மகாலட்சுமியை போலீசார் கைது செய்து விசாரிக்கும் பட்சத்தில் எத்தனை ஆண்கள் மகாலட்சுமியிடம் ஏமாந்து இருக்கிறார்கள் என்பது தெரியவரும். மேலும் இந்த சம்பவத்தில் மகாலட்சுமி மட்டும் ஈடுபட்டுள்ளாரா அல்லது இவர்கள் ஒரு குழுவாக செயல்படுகின்றனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.