Skip to main content

மீண்டும் ஊருக்குள் புகுந்து கன்றுக்குட்டியை கடித்த சிறுத்தை; அச்சத்தில் தாளவாடி

Published on 08/09/2023 | Edited on 08/09/2023

 

The leopard that entered the town again and bit the calf; Trembling in fear

 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை, மான்கள் உட்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் கேர்மாளம் வனச்சரகத்திற்குட்பட்ட காட்டடி அருகே உள்ள வேடர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜன். இவர் 15 ஆடுகள், 5 மாடுகளை வளர்த்து வருகிறார்.

 

நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ஆடுகளை பட்டியில் கட்டி வைத்துவிட்டு தூங்க சென்று விட்டார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது பட்டியில் இருந்த 11 ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். கேர்மாளம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். அதில் சிறுத்தை கால் தடம் பதிவானதை கண்டுபிடித்தனர். இதையடுத்து சிறுத்தை தான் 11 ஆடுகளை கடித்துக் கொன்றது உறுதியானது.

 

இதனால் அந்த பகுதியைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பவர்கள், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று இரவு 11 மணி அளவில் ராஜன் தோட்டத்திற்கு மீண்டும் சிறுத்தை வந்துள்ளது. அங்கு தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த கன்றுக்குட்டியை சிறுத்தை கடித்துள்ளது. மாடுகளின் அலறல் சத்தம் கேட்டு ராஜன் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்களைப் பார்த்ததும் சிறுத்தை அங்கிருந்து ஓடி வனப்பகுதிக்குள் சென்று மறைந்து விட்டது. மீண்டும் சிறுத்தை வந்ததை கண்டு ராஜன் மற்றும் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். சிறுத்தை கடித்ததில் கன்றுக்குட்டிக்கு காது கழுத்தில் காயம் ஏற்பட்டது.

 

அங்கிருக்கும் வீடுகள் தனித்தனியாக வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால், சிறுத்தை வனப்பகுதியை விட்டு  வெளியேறி கால்நடைகளை வேட்டையாடி மீண்டும் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் வனப்பகுதிக்குள் சென்று மறைந்து விடுகிறது. இரண்டாவது முறையாக மீண்டும் சிறுத்தை ஊருக்குள் புகுந்ததால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். உடனடியாக ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து தேர்மாளம் வனத்துறையினர் அந்தப் பகுதியில் முகாமிட்டு முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு செய்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.