Skip to main content

சித்திரை திருவிழா: கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் திரண்ட திருநங்கைகள்

Published on 03/05/2018 | Edited on 03/05/2018

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 18 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். கடந்த 17-ந் தேதி இந்த விழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருநங்கைகள் தாலிகட்டி கொள்ளும் நிகழ்ச்சி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் திருநங்கைகள், கூத்தாண்டவரை தங்கள் கணவராக ஏற்றுக்கொண்டு கோவில் பூசாரி கையால் தாலி கட்டிக்கொண்டனர். தொடர்ந்து அரவாணுக்கு மனைவிகள் ஆகிவிட்டோம் என்கிற மகிழ்ச்சியில் இரவு முழுவதும் கூட்டம், கூட்டமாக கும்மியடித்து ஆடிப்பாடி அவர்கள் மகிழ்ந்தனர்.
 

விழாவில் 16-ம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. பின்னர் பெரியசெவலை சாலையில் உள்ள அழிகளம் நோக்கி தேர் புறப்பட்டது. அதுவரை புதுமண பெண்கள் போல் தங்களை ஆடை, அணிகலன்களால் அலங்கரித்துக்கொண்டு மகிழ்ச்சியாக இருந்த திருநங்கைகள் சோகமயமாகினர். பலர் ஒப்பாரி வைத்து கதறி அழுத படியே தேரை பின்தொடர்ந்து சென்றார்கள்.
 

மதியம் 1 மணியளவில் அழிகளம் எனப்படும் நத்தம் கிராம பந்தலை தேர் சென்றடைந்தது. அங்கு அரவாண் களப்பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது திருநங்கைகள் தங்கள் தலையில் சூடியிருந்த பூக்களை பிய்த்து எறிந்து, நெற்றியில் உள்ள குங்குமப்பொட்டை அழித்தனர். தொடர்ந்து பூசாரிகள், திருநங்கைகள் கையிலிருக்கும் வளையல்களை உடைத்து, கழுத்தில் அணிந்திருந்த தாலியை அறுத்தெறிந்தார்கள்.
 

அதன் பிறகு திருநங்கைகள் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு சென்று குளித்து தலை மூழ்கி வெள்ளை சேலை அணிந்து விதவைக் கோலம் பூண்டு சோகமாக அவரவர் சொந்த ஊருக்கு திரும்பிச் சென்றனர்.
 

18-ம் நாள் நிகழ்ச்சியாக நாளை தர்மர் பட்டாபிஷேகமும் நடக்கிறது. இந்த நிகழ்ச்சிகளோடு இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நிறைவடைகிறது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரைத் திருவிழா; ஆடிப் பாடி மகிழ்ந்த திருநங்கைகள்

Published on 03/05/2023 | Edited on 03/05/2023

 

kallakurichi koovagam koothandavar temple chithirai festival transgender participated

 

மகாபாரதப் போரில் பாண்டவர்கள் வெற்றி பெறுவதற்காக 32 சாமுத்ரிகா லட்சணம் பொருந்திய இளைஞனைக் களப்பலி கொடுத்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

 

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 18 ஆம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இவ்விழாவானது 18 நாட்கள் நடைபெற்றது. இந்த விழாவில் முக்கிய நிகழ்வான தாலி கட்டும் நிகழ்ச்சி நேற்று மாலை (02.05.2023) தொடங்கியது. அப்பொழுது நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கோவிலில் குவிந்தனர். அங்கு சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு கோவில் முன்பாக அமைக்கப்பட்ட கடைகளில் தாலி, வளையல், குங்குமம் உள்ளிட்ட அலங்கார ஆபரண பொருட்கள் விற்கப்பட்டன. அவற்றை வாங்கி அணிந்து கொண்ட திருநங்கைகள் மணப்பெண் கோலத்தில் கோயிலுக்குள் சென்று பூசாரிகள் கையால் தாலி கட்டிக் கொண்டு அரவானைக் கணவனாக ஏற்றுக் கொண்டனர்.

 

அதனைத் தொடர்ந்து அவர்கள் கோயில் வளாகத்தில் கும்மியடித்தும் ஆடிப் பாடியும் மகிழ்ந்தனர். இரவு முழுவதும் திருநங்கைகள் மிகவும் சந்தோஷமாகக் கோயில் பகுதியில் சுற்றி வந்தனர். ஒருவரை ஒருவர் நலம் விசாரிப்பது அவரவர் வாழ்க்கை நிலை வேலை பார்க்கும் இடத்தில் உள்ள பிரச்சனைகள் இப்படி திருவிழாவில் கூடும் உற்றார் உறவினர்களிடம் திருநங்கைகள் விடிய விடியப் பேசிக் கொண்டிருந்தனர்.

 

kallakurichi koovagam koothandavar temple chithirai festival transgender participated

இதனைத் தொடர்ந்து இன்று காலை திருத்தேரோட்டம் நடைபெற்றது. திருவிழாவில் பொதுமக்களுக்கும் திருநங்கைகளுக்கும் இடையூறு இன்றி சாலையோர கடைகள் வைக்கப்பட்டிருந்தன. தற்காலிக கழிவறைகள் குளியல் அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த விழாவில் பாதுகாப்புப் பணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் மற்றும் 4 ஏடிஎஸ்பி 11 டிஎஸ்பி 48 இன்ஸ்பெக்டர்கள் என சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் கோயில் வளாகத்தில் எதுவும் அசம்பாவிதம் நேராத வண்ணம் கோயிலைச் சுற்றி நூற்றுக்கு மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. விழாவிற்கான ஏற்பாடுகளை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் சரவண்குமார், அதிகாரிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி மிகச் சிறப்பான முறையில் விழா நடத்துவதற்கு முன் நின்று ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

 

kallakurichi koovagam koothandavar temple chithirai festival transgender participated

காலையில் அரவான் களப்பலி கொடுத்த பிறகு திருநங்கைகள் வெள்ளைச் சேலை உடுத்தி தாலி அறுத்து ஒப்பாரி வைத்து சடங்கு செய்துவிட்டு அவரவர் ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர். 

 

 

Next Story

காலணியை எடுக்கச் சொன்ன விவகாரம்; ஆட்சியர் வருத்தம்!

Published on 15/04/2023 | Edited on 15/04/2023

 

kallakurichi collector sarvankumar viral video related clarification

 

சமீபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தனது உதவியாளரை அழைத்து தனது செருப்பை தூக்கச் சொன்ன விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா வரும் 18ம்  தேதி சாகை வார்த்தல் உடன் தொடங்க உள்ளது. இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான திருநங்கைகள் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்து கலந்து கொள்வார்கள். அடுத்த மாதம் இரண்டாம் தேதி தாலி கட்டுதல் நிகழ்ச்சியும் அதற்கு அடுத்த நாள் திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளது.

 

இதனையொட்டி திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தலைமையில் காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொள்வதற்காக கூத்தாண்டவர் கோவிலுக்கு வருகை தந்த போது கோவில் உள்ளே செல்வதற்கு முன்பு மாவட்ட ஆட்சியர் தனது காலணியை கழட்டி விட்டு தனது உதவியாளரை அழைத்து காலணியை எடுத்துச் செல்லுமாறு கூறி உள்ளார். அதனைத் தொடர்ந்து காலணிகளை அவரது உதவியாளர் எடுத்துச் சென்ற சம்பவம் அங்கே ஆய்வுக்காக வந்திருந்த மற்ற அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும்  சலசலப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார், கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் நடைபெற்ற சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.