Skip to main content

செந்தில் பாலாஜி வழக்கில் கபில் சிபல் வாதம் நிறைவு

Published on 11/07/2023 | Edited on 11/07/2023

 

Kapil Sibal's arguments in Senthil Balaji case concluded

 

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் ஜூன் 14 ஆம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயர்நீதிமன்ற அனுமதியோடு சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார். அதேநேரம் செந்தில் பாலாஜி சட்டவிரோதக் காவலில் இருப்பதாக அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

இந்த வழக்கில் நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதையடுத்து இந்த வழக்கை மூன்றாவதாக உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி. கார்த்திகேயன் விசாரிப்பார் என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபூர்வாலா அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு கடந்த 6 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

 

இதையடுத்து கடந்த 7 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் சொலிசிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதத்தை முன்வைக்கையில், “செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரம் உள்ளதா, ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளோம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தை நீதிமன்றக் காவல் காலமாகக் கருத முடியாது. அமலாக்கத்துறையினர் கைது செய்யலாம், காவலில் எடுத்து விசாரிக்க முடியாது என இரு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்” என வாதத்தை முன்வைத்தார்.  அதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ வாதத்தை முன்வைக்கையில், “ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது என இரு நீதிபதிகளும் ஏற்றுக்கொண்டுள்ளனர் எனத் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி, “யாரும் ஆவணங்களைப் பார்க்காத நிலையில் கைதுக்கான காரணம் திருத்தப்பட்டுள்ளது எனக் கூற முடியாது. வழக்கு விசாரணையை 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் செந்தில் பாலாஜி வழக்கு, நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு இன்று காலை விசாரணைக்கு வந்தது. இதில், செந்தில் பாலாஜி தரப்பில் இருந்து மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோவும் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்து வருகின்றனர். கபில் சிபல் காணொளி வாயிலாக வாதத்தை முன்வைக்கையில், “சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தடைச் சட்ட வழக்கை பொறுத்தவரை புலனாய்வை அமலாக்கத்துறை மேற்கொள்கிறது. ஒழுங்குபடுத்தும் சட்ட விதிகள் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு காவல்துறையின் அதிகாரம் வழங்கவில்லை. எனவே காவலில் எடுக்க அமலாக்கத்துறையினருக்கு அதிகாரம் இல்லை. இந்த வழக்கை பொறுத்தவரை குற்றம் மூலம் பணத்தை வைத்திருப்பதாகவோ, அதை மறைத்திருப்பதாகவோ எந்த ஆதாரமும் இல்லை. இந்நிலையில் அமலாக்கத்துறைக்கு எங்கிருந்து ஆதாரம் கிடைத்தது. சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் படி அமலாக்கத்துறை விசாரிக்க முடியும். ஆனால் புலன் விசாரணை மேற்கொள்ள முடியாது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் கிடையாது. எனவே செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க முடியாது.

 

மேலும் செந்தில் பாலாஜியின் காவல் சட்ட விரோதம். பிஎம்எல்ஏ(PMLA) சட்டப்படி குற்றம் புரிந்திருக்கிறார் என்பதற்கான உரிய காரணங்கள் மற்றும் ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே கைது செய்யலாம். கைது செய்த 24 மணி நேரத்தில் ஆஜர்படுத்தி சீலிட்ட உறையில் ஆதாரத்தை சமர்ப்பித்து கைதுக்கான காரணங்களைத் தெரிவிக்க வேண்டும். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு உள்ள அதிகாரம் போல் தான் அமலாக்கத்துறைக்கும் அதிகாரம் உண்டு. குற்றம் சாட்டப்பட்டவர் குற்றம் புரிந்திருக்கலாம் என்ற தகவலை அடிப்படையாகக் கொண்டு போலீசார் புலன் விசாரணை செய்து கண்டுபிடிப்பார்கள். பிஎம்எல்ஏ வழக்கில் விசாரணையில் கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில் குற்றம் புரிந்திருக்கிறார் என்ற முடிவுக்கு வருவார்கள். இதையடுத்து அமலாக்கத்துறையினர் நீதிமன்றத்தில் புகார் அளித்து அந்த வகையில் அமலாக்கத்துறையினரின் விசாரணை கைது செய்வதுடன் முடிவடைந்து விடுகிறது. காவலில் விசாரிக்க அனுமதி பெற்ற அமலாக்கத்துறை அதை ஏன் அமல்படுத்தவில்லை. அமர்வு நீதிமன்றம் விதித்த நிபந்தனையால் விசாரிக்க முடியவில்லை என்றால் அதனை எதிர்த்து அமலாக்கத்துறை ஏன் நீதிமன்றத்தை நாடவில்லை. 15 நாட்கள் கஸ்டடி முடிந்தால் மீண்டும் கஸ்டடி கோர முடியாது. கஸ்டடி உத்தரவை செயல்படுத்தப்படாமல் முதல் 15 நாட்கள் முடிந்துவிட்டால் அது முடிந்தது தான். ஆட்கொணர்வு  வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ வாதிடுவார்” எனத் தனது வாதத்தை நிறைவு செய்தார்.

 

நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளபோது ஆட்கொணர்வு மனு எப்படி தாக்கல் செய்ய முடியும். அமலாக்கத்துறையை எவ்வாறு வகைப்படுத்துவது என நீதிபதி கேள்வி எழுப்பினார். இதையடுத்து வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ தனது வாதத்தை முன் வைத்து வருகிறார். நாளை (ஜூலை 12) அமலாக்கத்துறை சார்பில் சொலிசிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதங்களை முன்வைக்க உள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்