Skip to main content

ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம்; “எப்படி அனுமதி வழங்க முடியும்?” - நீதிபதி கருத்து

Published on 07/07/2024 | Edited on 07/07/2024
Judge opinion Armstrong was buried

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று(5.7.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு  தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, ஆம்ஸ்ட்ராங் உடலைக் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி அவரது மனைவி பொற்கொடி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த தொடர்பான வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகம் இடம் நெரிசல் மிகுந்தப் பகுதி எனக்கூறி வரைபடங்களை சமர்ப்பித்து வாதாடினார். இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி பவானி சுப்பராயன், “சட்டப்படி குடியிருப்பு பகுதிகளில் உடலை அடக்கம் செய்ய முடியாது. ஆம்ஸ்ட்ராங் மரணம் பெரிய இழப்பாக இருந்தாலும் சட்ட விதிகளை மீற முடியாது. உடல் அடக்கம் செய்யக்கோரும் இடம் நெருக்கடியான பகுதி. மயானம் என்று அறிவிக்கப்பட்ட பகுதியில் தான் அடக்கம் செய்ய முடியும். வேறு பெரிய சாலை, விசாலமான இடம் இருந்தால் சொல்லுங்கள். இந்த யோசனை குறித்து மனுதாரரிடம் கேட்டுச் சொல்லுங்கள்; அதன்பிறகு உத்தரவு பிறப்பிக்கிறேன்” என்று கூறி காலை 10:30 மணிக்கு மனுதாரர் தரப்பினர் முடிவைச் சொல்ல வேண்டும் என்று நீதிபதி வழக்கு விசாரணையை 10:30 மணிக்கு ஒத்திவைத்தார். ஆனால், 12 மணிக்குத் தனது முடிவைச் சொல்வதாகப் பொற்கொடி தரப்பினர் முறையிட்டனர்.

அதன்படி, 12 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பொற்கொடி தரப்பு வழக்கறிஞர் வாதிட்டதாவது, “பெரம்பூரில் சுமார் 7.500 சதுர அடி நிலத்தில் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும். விஜயகாந்தின் உடலை அவரது நிலத்திலேயே அடக்கம் செய்ய அனுமதி தரப்பட்டது. விஜயகாந்தின் உடலை அடக்கம் செய்ய அனுமதி தரப்பட்டது போல் அனுமதி வழங்க வேண்டும்” என்று கூறினார். 

இதையடுத்து அரசு தரப்பில் கூறியதாவது, “ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய 200 சதுர அடி நிலம் ஒதுக்க தயாராக இருக்கிறது. ஆம்ஸ்ட்ராங் உடலை கண்ணியத்துடன் அடக்கம் செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். அதே சமயம் விதிகளை மீற முடியாது. ஆம்ஸ்ட்ராங்கின் உறவினர் திருவள்ளூரில் ஒரு ஏக்கர் நிலம் தர தயாராக இருக்கிறார். அந்த இடத்தில் மணிமண்டபமும் அமைக்கலாம்” என வாதிட்டார். 

இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, “ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய மனுதாரர் தெரிவிக்கும் புதிய இடமும் குடியிருப்பு பகுதியாகும். குடியிருப்பு பகுதியில் உடலை அடக்கம் செய்ய எப்படி அனுமதி வழங்க முடியும்?. முதலில் அரசு கூறும் இடத்தில் அடக்கம் செய்யுங்கள். உங்கள் விண்ணப்பத்தை மாநகராட்சி நிராகரித்துள்ளது. அரசுதான் உங்கள் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும். அதுவர் உடலை பள்ளியில் வைத்திருக்க முடியாது. ஆம்ஸ்ட்ராங் உடலை அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்வது நல்லது. அரசு தரப்பில் தரப்படும் புதிய இடம் தொடர்பாக அரசிடம் ஆம்ஸ்ட்ராங் மனைவி மனு அளிக்கலாம். அந்த மனுவை பரிசீலித்து அரசு முடிவெடுக்க வேண்டும். 

நாளை பள்ளிகள் திறக்கவுள்ளதால் இன்றே உடலை அடக்கம் செய்ய வேண்டும். புதிதாக குறிப்பிடும் நிலத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து அரசு ஆராய வேண்டும். குடியிருப்பு பகுதியில் அடக்கம் செய்ய சிலர் ஆட்சேபம் தெரிவிக்கலாம். ஒதுக்குபுறமாக விசாலமான இடத்தை தேர்ந்தெடுங்கள். நல்ல இடத்தில் மணிமண்டபம் அமைக்கலாம். அம்பேத்கர் மணிமண்டபம் போல விசாலமான இடத்தில் மணிமண்டபம் அமைத்தால் நிகழ்ச்சி நடத்த இடையூறு இருக்காது. இது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் அதிகார எல்லையைத் தாண்ட முடியாது. உடல் அடக்கம் தொடர்பான இடத்தை தேர்வு செய்வதில் அரசுதான் முடிவு எடுக்க முடியும்.” என்று கூறி வழக்கு விசாரணையை மதியம் 2:15 மணிக்கு ஒத்திவைத்தார். 

சார்ந்த செய்திகள்