Skip to main content

கடன்தாரர்களை கசக்கிப் பிழியும் தனியார் வங்கிகள் மீது நடவடிக்கை வேண்டும்: ராமதாஸ்

Published on 17/05/2020 | Edited on 17/05/2020
pmk



கடன் தவணையை கட்டாயப்படுத்தி வசூலிக்கும் தனியார் வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் மீது  கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

 

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " இந்தியா முழுவதும் அனைத்துத் தரப்பு மக்களும் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதைக் கருத்தில் கொண்டு, கடன் தவணைகளை செலுத்த இந்திய ரிசர்வ் வங்கி 3 மாத கால அவகாசம் வழங்கியுள்ள நிலையில், அதை மதிக்காமல் வாகனக் கடன் தவணைகளை உடனடியாக செலுத்தும்படி கடன்தாரர்களுக்கு தனியார் வங்கிகளும், நிதி நிறுவனங்களும் நெருக்கடி கொடுத்து வருகின்றன. சில நிதி நிறுவனங்கள் வழக்க்கம் போலவே வாடிக்கையாளர்களுக்கு மிரட்டல் விடுத்து வருவது கண்டிக்கத்தக்கது ஆகும்.
 

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் மற்றும் ஊரடங்கு ஆணை காரணமாக அமைப்பு சாரா தொழில் துறையினர் அனைவரும் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். அவர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு பாட்டாளி மக்கள் கட்சி தான், பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளிடமிருந்து  பெறப்பட்ட அனைத்து வகையான கடன்களுக்குமான மாதத் தவணைகளை 3 மாதங்களுக்கு ஒத்தி வைக்கும்படி மத்திய அரசுக்கும், இந்திய ரிசர்வ் வங்கிக்கும் முதன்முதலில் கோரிக்கை விடுத்தது. அதைத் தொடர்ந்து அனைத்து வகையான கடன்களுக்குமான மார்ச், ஏப்ரல், மற்றும் மே மாத தவணைகளை செலுத்தத் தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு தொடர்பான விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும் கூட, அந்த அறிவிப்பு, வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களுக்கு  மாதாந்திர கடன் தவணை செலுத்தும் சுமையிலிருந்து தற்காலிக விடுதலை அளித்தது என்பது உண்மை.
 

ஆனால், தனியார் வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களில் கடன் பெற்றவர்களுக்கு அந்த விடுதலை கூட கிடைக்கவில்லை. ரிசர்வ் வங்கி அறிவிப்பின்படி அனைத்து வகையான கடன் தவணைகளும் 3 மாதங்களுக்கு தானாக ஒத்திவைக்கப்பட்டிருக்க வேண்டும்; ரிசர்வ் வங்கி அறிவித்த சலுகை தங்களுக்குத் தேவையில்லை என்றும், கடன் தவணையை தொடர்ந்து செலுத்துவதாகவும்  எவரேனும் கடிதம் கொடுத்தால் அவர்களிடம் மட்டும் தான் கடன் தவணை தொடர்ந்து வசூலிக்கப்பட வேண்டும். பெரும்பான்மையான பொதுத்துறை வங்கிகள் இந்த அணுகுமுறையைத் தான் பின்பற்றுகின்றன. ஆனால், தனியார் வங்கிகளும், நிதிநிறுவனங்களும் இதை பின்பற்றாமல் அனைத்து தவணைகளையும் செலுத்தும்படி கட்டாயப்படுத்துகின்றன. இதனால் கடன்தாரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
 

சென்னையில் ஒருவர் அவரது தாயாரின் மருத்துவச் செலவுகளுக்காக காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து  பெற்ற தொகை அவரது வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்ட அடுத்த நிமிடமே, அவரது வாகனக்கடன் தவணைக்காக தனியார் வங்கியிடமிருந்து தன்னிச்சையாக எடுக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. வங்கிக் கணக்குகளில் பணம் இல்லாத கடன்தாரர்கள் கடன்தவணை செலுத்தத் தவறி விட்டதாக அறிவித்து, அவர்களை கடன் வசூல் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் தினமும் தொலைபேசியில் அழைத்து மிரட்டல் விடுத்து வருகின்றனர்.  அடுத்தக்கட்டமாக வீடுகளுக்கு தனியார் வங்கிகளும், நிதி நிறுவனங்களும் குண்டர்களை அனுப்புமோ என்ற அச்சத்தால் தனியார் நிறுவனங்களிடம் வாகனக்கடன் பெற்ற மக்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
 

வங்கிகளிடம் வாகனக்கடன் பெற்றவர்கள் வாகனங்களை இயக்குவதன் மூலம் கிடைக்கும் வாடகை வருமானத்தைக் கொண்டு தான் கடன் தவணையை செலுத்த வேண்டும். ஊரடங்கு காரணமாக வாகனங்களை இயக்க முடியாத நிலையில், கடன்தாரர்களிடம் பணம் இல்லை; அதனால் அவர்களால் தவணை செலுத்த முடியாது என்பதை உணர்ந்ததால் தான் அவற்றை ரிசர்வ் வங்கி ஒத்திவைத்தது. கடன் தவணை ஒத்திவைப்புக்காக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள வழிமுறைகளின்படி ஒத்திவைக்கப்படும் கடன் தவணைகளுக்கான மொத்த தொகை எவ்வளவோ, அதை செலுத்துவதுடன், அதற்கான கூடுதல் வட்டியாக 3 முதல் 5 மடங்கு தொகையை செலுத்த வேண்டியிருக்கும். இது மிக அதிகமான தொகை என்றாலும் கூட, உடனடியாக கடன் தவணை செலுத்துவதிலிருந்து விடுதலையாக இதைத் தவிர வேறு வழியில்லை என்பதால் தான் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள திட்டத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

 

ுப

அத்தகைய சூழலில், வருமானமே இல்லாதவர்களிடம் கடன் தவணையை செலுத்தும்படி மிரட்டுவதும், மருத்துவச் செலவுகளுக்காக காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து பெற்ற காப்பீட்டு தொகையை தனியார் வங்கிகள் தன்னிச்சையாக பறித்துக் கொள்வதும் மிகக்கொடிய மனித உரிமை மீறலாகும். ஏற்கனவே வருமானமின்றி வறுமையில் வாடும் மக்களுக்கு இது கூடுதல் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. வாடகை வாகன உரிமையாளர்களின் பொருளாதார நிலைமை கருத்தில் கொண்டு தான் சாலைவரி  உள்ளிட்ட வரிகளை செலுத்துவதற்கான காலக்கெடுவை தமிழக அரசு நீட்டித்திருக்கிறது. ஆனால்,   அரசுக்கு இருக்கும் கருணை கூட தனியார் வங்கிகளுக்கு இல்லை. இது இரக்கமற்ற செயலாகும்.
 

எனவே, இவ்விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு, வாகனக்கடன் பெற்றவர்களிடம் கடன் தவணையை கட்டாயப்படுத்தி வசூலிக்கும் தனியார் வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் மீது  கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 3 மாத கால கடன் தவணை ஒத்திவைப்புக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், எந்த விதமான கூடுதல் கட்டணமும்  இன்றி மார்ச் 31-ஆம் தேதியன்று எவ்வளவு நிலுவைத் தொகை உள்ளதோ, அதை மட்டும், மாதக் கடன் தவணைத் தொகையை அதிகரிக்காமல் வசூலிக்குமாறும் வங்கிகளுக்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும்"  என்றார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்ட நடத்துநர்; அன்புமனி கண்டனம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani condemns conductor being thrown with his seat in   moving govt bus

ஓடும் பேருந்தில், நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்டதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே.நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துநர் அமர்ந்திருந்த இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துநரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர்  லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார்.  அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே  திருச்சியில்  பேருந்தின் இருக்கை கழன்று  நடத்துநர்  தூக்கி வீசப்பட்டுள்ளார்.  பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை  தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை  திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதை  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே  ஒப்புக் கொண்டிருக்கிறார்.  15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பேருந்துகள்  12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன.  திமுக  ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும்,   அவற்றை பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாததுதான்  இத்தகைய அவல நிலை  ஏற்படுவதற்கு காரணம் ஆகும்.  இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள்  கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள்  ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள்  வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும்  பேருந்துகள் மட்டும்  15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றிற்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும்.  பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும்,  உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு  போதிய நிதி ஒதுக்கீடு  செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.