Skip to main content

தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு அநீதி! தலையிடுமா தமிழக அரசு?        

Published on 21/08/2022 | Edited on 21/08/2022

 

Injustice for Tamils ​​who returned home! Will the Tamil Nadu government intervene?

 

தாயகம் திரும்பியோரின் மறுவாழ்வுக்காக துவக்கப்பட்ட ரெப்கோ வீட்டுக் கடன் நிறுவனத்தின் தலைவராக ஐ.ஏ.எஸ். அதிகாரி அல்லாத நபர்கள் ஆக்கிரமித்துக் கொண்டு அநீதி இழைப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது குறித்து தமிழ்நாடு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முதன்மை செயலாளர் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்.சின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கிறார் ரெப்கோ வீட்டு கடன் நிறுவனத்தை நிறுவிய இயக்குநர் முனைவர்  திருவேங்கடம். 

 

இதையறிந்து திருவேங்கடத்தை நாம் தொடர்பு கொண்டு பேசிய போது, "பர்மா, இலங்கை, வியட்நாம்   ஆகிய நாடுகளில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்களின் மறுவாழ்வுக்காகவும் பொருளாதார மேம்பாட்டிற்காகவும் ரெப்கோ வங்கியை 1969- ஆம் ஆண்டில் துவக்கினார் கலைஞர். மேலும், தாயகம் திரும்பியவர்களுக்கு வீட்டுக் கடன் முன்னுரிமை கொடுத்து வழங்குவதற்காக, ரெப்கோ வீட்டுக் கடன் நிறுவனம் ஒன்றையும் கடந்த 2000 ஆண்டில் உருவாக்கினார் கலைஞர். 

 

ரெப்கோ வங்கியின் 100 சதவீத முதலீட்டில் இந்த ரெப்கோ வீட்டுக் கடன் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் தலைவராக தமிழக அரசின் பொதுத்துறை மற்றும் மறுவாழ்வுத்துறையின் செயலாளர்களே நியமிக்கப்பட்டு வந்தனர். அந்த வகையில், ரெப்கோ வீட்டு கடன் நிறுவனத்தின் நிர்வாகம் முழுவதும்  அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது.  

 

இதனால், தாயகம் திரும்பிய தமிழர்களின் மறுவாழ்வுக்காக பயன்பட்டு வந்தது இந்த நிறுவனம். மேலும், நிறுவனத்தின் சட்டவிதிகளின்படி, வீட்டுக் கடன் வழங்குவதில் தாயகம் திரும்பியவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். இதனால்  தாயகம் திரும்பிய தமிழர்களின் வீடு கட்டும் கனவுகள் நிறைவேறும். 

 

இந்த நிலையில், முந்தைய அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வந்ததை அடுத்து, ரெப்கோ வீட்டுக் கடன் நிறுவனத்தின் நிர்வாகம் அரசிடமிருந்து நழுவியது. இந்த நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரியை எடுத்து விட்டு தனி நபர்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டு, அரசின் அதிகாரம் என்பது போர்ட் இயக்குநர்களில் ஒருவர் என்பதாக சுருங்கிப் போனது. 

 

தமிழக அரசிடமிருந்து தலைவர் பதவி பறிபோன நிலையில், இந்த நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகள்  பிராமணர்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர். இதனால், முழுதும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினராக  இருக்கும்   தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு எதிரான மனநிலையிலேயே நிர்வாகத்தை நடத்தி வருகின்றனர். தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு வீட்டுக் கடன்  கொடுப்பதை கிட்டத்தட்ட  நிறுத்தி விட்டனர்.

 

குறிப்பாக, 11,000 கோடி ரூபாய் கடன் கொடுக்கப்பட்டிருப்பதில் சில கோடிகள் மட்டுமே தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து இந்த அநீதி நடந்து வருகிறது. 

 

இன்றைய நிலையில், தமிழகம் முழுவதும் 30 லட்சம் தாயகம் திரும்பிய தமிழர்கள் வீடின்றி அவதிப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் வீட்டுக் கடன் கேட்டால் கொடுக்கப்படுவதில்லை.  

 

அதேசமயம், இது தொடர்பாக அவர்கள் ஏதேனும் பிரச்சனை செய்து விடக்கூடாது என்பதற்காக, தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு அவ்வவ்போது சில இலவசங்களை கொடுத்து, அவர்களின் நலன்களுக்காக இயங்குகிறோம் என்பதாக காட்டி கொண்டு வருகிறது இந்த நிறுவனம். 

 

தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு தேவை இலவசம் அல்ல ; அவர்களுக்கு கடன் உதவிதான். அவர்களுக்கு முன்னுரிமைக் கொடுத்து கடன் வழங்குவதற்காகத்தான் இந்த நிறுவனத்தைத் துவக்கினார் கலைஞர். ஆனால், அவரது நோக்கத்தை  சிதைத்து வருகிறார்கள் தற்போதைய நிறுவனத்தின் முக்கியஸ்தர்கள். இதனால், தாயகம் திரும்பிய தமிழர்களின் மறுவாழ்வு கேள்விக்குறியாகி வருகிறது.

 

தற்போதைய சூழலில் இந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் இயக்குநர்களாக 70 வயதை கடந்து சதாபிஷேகம் காணும் தனியார்கள்தான் கோலோச்சுகின்றனர். மேலாண்மை இயக்குனராக, செயல் இயக்குனராக இருந்தவர்களின் தனிநபர் வருமானம் ஆண்டுக்கு பல கோடிகள்.  

 

தமிழக அரசின் சார்பில் இந்த நிறுவனத்தில் ஒரே ஒரு இயக்குநர் பதவி மட்டுமே இருக்கிறது. அந்த பதவியில் தற்போது ஜெசிந்தா லாசரஸ் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மட்டுமே இருக்கிறார். 

 

இந்த நிலையில், ரெப்கோ வீட்டுக்கடன் நிறுவனத்தின் வருடாந்திர போர்ட் மீட்டிங் நாளை திங்கள் கிழமை (22/08/2022) சென்னையில் நடக்கிறது. இந்த போர்ட் மீட்டிங்கைப் பயன்படுத்தி, கடந்த அதிமுக ஆட்சியாளர்களால் இழந்த தமிழக அரசின் அதிகாரத்தை மீட்டெடுக்க வேண்டும். சிங்கிள் மெஜாரிட்டி ஷேர் ஹோல்டர் என்ற முறையில், நிறுவனத்தின் தலைவர் பதவியை மீண்டும் தமிழக அரசே எடுக்கும் வகையில், ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். 

 

அதன்மூலம் தனியார்களின் ஆதிக்கத்தை தடுக்க முடியும்; கலைஞரின் நோக்கமும் நிறைவேறும். இதனை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் தமிழக முதல்வரின் கவனத்துக்கு செல்லும் வகையில் புகார் கடிதம் கொடுத்தேன்" என்று விரிவாகச் சுட்டிக்காட்டுகிறார் திருவேங்கடம்.

Injustice for Tamils ​​who returned home! Will the Tamil Nadu government intervene?

இதுகுறித்து ரெப்கோ வீட்டுக்கடன் நிறுவனத்தின் தலைவர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தியை தொடர்பு கொண்டோம். ஆனால், நமது அழைப்பைத் துண்டித்தார் அவர். இதனால் அவரது கருத்தை அறியமுடியவில்லை. 

 

தனியார்களின் ஆதிக்கத்திலிருந்து இந்த நிறுவனத்தை தமிழக அரசு மீட்குமா? என்பதே தாயகம் திரும்பிய தமிழர்களின் எதிர்பார்ப்பும் ஏக்கமுமாக இருக்கிறது. நிறைவேற்றுமா தமிழக அரசு?

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்த தென்னிந்திய நடிகர் சங்கம்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
south indian artistes assoociation thanked tn government for new film city

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் கடந்த 19 ஆம் தேதி 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப் பேரவையில் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில் சென்னை பூந்தமல்லியில் அதிநவீன திரைப்பட நகரம் அமைப்பதற்காக ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.  

தமிழக அரசு அறிவிப்பிற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. அதில், “சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள தமிழ்த் திரைத்துறையினரின் நீண்ட நாள் கோரிக்கையான திரைப்பட நகரம் குறித்த அறிவிப்பில், சென்னையை ஒட்டி பூந்தமல்லியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் ரூ. 500 கோடி மதிப்பீட்டில் வி.எப்.எக்ஸ். அனிமேஷன் மற்றும் எல்.இ.டி கன்வர்ஷன் போன்ற நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய படப்பிடிப்பு தளங்கள், புரொடக்சன் பணிகள் பிரிவு, 5 நட்சத்திர ஓட்டல் வசதிகளுடன் கூடிய கட்டமைப்புகள் மற்றும் சென்னை தீவுத்திடலில் இயற்கை வனப்புடன் கூடிய சமூக கட்டமைப்பு வசதிகளுடன் திறந்தவெளி திரையரங்கம் அமைப்பதற்கும் நிதி ஒதுக்கீடு செய்திருப்பது தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது

தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகள் குறிப்பாகப் பெரிய படங்களின் படப்பிடிப்புகள் அண்டை மாநிலங்களில் நடப்பதால் இங்குள்ள நடிகர்கள் குறிப்பாகத் திரையுலக தொழிலாளர்களுக்கு வாய்ப்புகள் குறைந்தன. இத்திட்டத்தின் மூலம் தொழிலாளர்கள் நலம் வளம் பெறும். ஒரு காலத்தில் ஆசியாவின் மிகப்பெரும் சினிமா நகரமாக திகழ்ந்து, வரலாறு படைத்திட்ட நகரமிது. காலத்தில் கரைந்து போன அச்சரித்திரத்தை மீட்டெடுக்கும் திட்டமிது. தமிழ்த் திரைப்படங்களை உலக வரைபடத்தில் அழுத்தமாக பதிவதற்கு ஊக்கம் தந்து, படைப்பாளிகளின் கனவுலகத்தை மேலும் விரியச் செய்கின்ற திட்டமிது. தமிழ்த் திரையுலகின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்; அமைச்சரின் கோரிக்கையை ஏற்க மறுத்த ‘ஜாக்டோ - ஜியோ’

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
Indefinite strike; Jacto refused to accept the minister's request - Geo

திட்டமிட்டபடி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என  ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தை அறிவித்திருந்த நிலையில், தமிழக அரசு போராட்டத்தைக் கைவிடுமாறு கோரிக்கை வைத்திருந்தது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது மற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவது உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26 ஆம் தேதி முதல் 'ஜாக்டோ ஜியோ' ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எ.வ. வேலு, ஜாக்டோ ஜியோ சங்க உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதனையடுத்து, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை வைத்திருந்தார். அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், 'கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசு ஊழியர்களின் தேவைக்கேற்ப பல்வேறு நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிதிநிலைக்கு ஏற்ப அரசு பணிவுடன் பரிசீலிக்கும்.

கலைஞர் வழி நடக்கும் அரசு, ஊழியர்களின் நலனை எப்போதுமே கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது. அரசின் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அரும்பணியை மேற்கொள்ளும் அரசு ஊழியர்களின் முக்கியத்துவத்தை அரசு உணர்ந்தே இருக்கிறது. எனவே அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கைவிட்டு அரசுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். அரசுக்குத் தொடர்ந்து ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்' எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஜாக்டோ ஜியோ தரப்பிலிருந்து, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் அறிக்கையை முற்றிலுமாக நிராகரிப்பதாகவும், தங்களின் கோரிக்கையை உடனடியாக முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும் எனவும் நாளை மறுநாள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்தப்படும் என்றும் பிப்ரவரி 26ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கும் என்று ‘ஜாக்டோ ஜியோ’ அறிவித்துள்ளது.