Skip to main content

சந்தேக மரணம்... பெண்ணின் உடலை வாங்க மறுத்து மறியல் போராட்டம்!

Published on 21/08/2021 | Edited on 21/08/2021

 

incident in kallakurichi

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது பாலி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு. இவர் அப்பகுதியில் ஊர்க்காவல் படையில் பணியாற்றிவருகிறார். இவரது மனைவி 27 வயது ராஜலட்சுமி. இவர்களுக்கு 11 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இந்தநிலையில், பாலு மனைவி ராஜலட்சுமி நேற்று முன்தினம் (19.08.2021) அவர்களது வீட்டில் தூக்குப்போட்ட நிலையில், இறந்துள்ளதாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து எடைக்கல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, போலீசார் வழக்குப் பதிவுசெய்து ராஜலட்சுமி உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

 

இந்தநிலையில், கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் நேற்று காலையில் ராஜலட்சுமி உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க முன்வந்தனர். ஆனால் ராஜலட்சுமியின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் மருத்துவமனை எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராஜலட்சுமி, உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி மணிமொழியன், போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது இறந்துபோன ராஜலட்சுமியின் உறவினர்கள், “ராஜலட்சுமி தானாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ளவில்லை. அவரது கணவர் ராஜலட்சுமியை அடித்துக் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்னர் கோழிப்பண்ணை அமைப்பதற்காக ராஜலட்சுமியின் பெற்றோரிடம் வரதட்சணையாக பணம் வாங்கி வருமாறு பாலு ராஜலட்சுமியை கட்டாயப்படுத்தியுள்ளார். ராஜலட்சுமியின் பெற்றோர் பணம் இல்லை என்று தெரிவித்துள்ளனர். இதனால் கோபமுற்ற பாலு, ராஜலட்சுமியிடம் அடிக்கடி தகராறு செய்துவந்துள்ளார். எனவே ராஜலட்சுமியின் உயிரிழப்பு தற்கொலை அல்ல, திட்டமிட்ட கொலை. இதற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்” என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.

 

இதையடுத்து போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ராஜலட்சுமி மரணத்தில் சந்தேகம் இருப்பதால் அதுகுறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள். மேலும் ராஜலட்சுமியின் பிரேத பரிசோதனையில் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக அறிக்கையில் தெரியவந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து ராஜலட்சுமியின் உடலைப் பெற்றுக்கொண்டு அடக்கம் செய்வதற்காக அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் கள்ளக்குறிச்சி நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

 

சார்ந்த செய்திகள்