Skip to main content

பால் சப்ளை செய்தவர்களிடம் 32 லட்சம் மோசடி! பாஜகவின் ‘மோடி கிச்சன்’ தம்பதி கைது!

Published on 06/06/2020 | Edited on 06/06/2020
incident cuddalore

 

கடலூர் மாவட்டம், பண்ருட்டியை சேர்ந்தவர் பாவாடை. விவசாயியான  இவர் கறவை மாடுகள் வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் கடந்த 2016 ஆம் ஆண்டு பைத்தம்பாடியை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் தொடர்பு கொண்டு தவளக்குப்பத்தில் குடியிருக்கும் தனது மகள் சுதா, மருமகன் செல்வகுமார் ஆகியோர் பைத்தம்பட்டியில் நடத்தி வரும்  பால் சொசைட்டிக்கு பால் சப்ளை செய்ய  கேட்டுக் கொண்டுள்ளார். அதனடிப்படையில் இதை நம்பிய பலரும் பாவாடையை ஏஜென்டாக கொண்டு பால் சப்ளை செய்து வந்துள்ளனர். குறிப்பிட்ட சில காலங்களுக்கு மட்டும் பணம் வழங்கி வந்த நிலையில், அதன் பின்னர் உரிய பணத்தை கொடுக்காமல் காலம் கடத்தி வந்துள்ளனர்.


இதேபோல பல பகுதிகளை சேர்ந்த சுமார் 70-க்கும் மேற்பட்ட பால் சப்ளை செய்த ஏஜென்டுகள் மற்றும் 2000 விவசாயிகளுக்கும் பணம் தரவில்லை என்பதால் கடந்த 2018 ஆம் ஆண்டு பாவாடை உள்ளிட்ட ஏஜென்டுகள், விவசாயிகள் சொசைட்டிக்கு சென்று செல்வகுமார், சுதா, பன்னீர்செல்வம் ஆகியோரிடம் பணம் கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் பணம் தராமல் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.  இதுபோல் இவர்களுக்கு பால் சப்ளை செய்த பலரிடமும் மொத்தம் 32,17,924 ரூபாய் மோசடி செய்தது கண்டறியப்பட்டுள்ளது.

 

 

incident cuddalore


இதையடுத்து கடந்த 2018-ஆம் ஆண்டு பாவாடை கொடுத்த புகாரின் பேரில், கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு அபிஷேகபாக்கத்தில் இருந்த சுதா, செல்வக்குமார் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்த ஹோண்டா காரை பறிமுதல் செய்தனர். தலைமறைவாகியுள்ள  பன்னீர்செல்வத்தை தேடி வருகின்றனர்.

இந்த செல்வகுமார் சுதா தம்பதியினர் சமீபத்தில் ‘மோடி கிச்சன்’ என்ற பெயரில் குறைந்த விலை உணவகத்தை புதுச்சேரியில் பூஜை போட்டு அக்கட்சியின் தலைவர்களுடன் ஆரம்பித்தனர். இதற்கு ஒரு அறக்கட்டளை இருப்பதாக கூறப்படுகிறது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.