Skip to main content

14 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவரைக் குடும்பத்துடன் இணைத்த காவலர்...

Published on 20/07/2020 | Edited on 20/07/2020
a head constable reunites a man with his family who lost 14 years ago

 

கள்ளக்குறிச்சி அருகே 14 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவரை ஒரு காவலர் மீட்டு குடும்பத்தினருடன் இணைத்து வைத்துள்ளார்.

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சின்னான் (55). இவர் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள், உடல்நிலை சரியில்லாமல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தனது மனைவி மணியை பார்ப்பதற்காக, மருத்துவமனைக்கு வந்துள்ளார். ஆனால் இவர் வருவதற்கு முன்பே இவரது மனைவி மணி டிஸ்சார்ஜ் ஆகி மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு சென்று விட்டார்.  மருத்துவமனைக்கு வந்த சின்னான் மருத்துவமனையில் மனைவியை தேடிப் பார்த்துள்ளார் மனைவியைக் காணாத ஏக்கத்தில் அவருக்கு மன நிலை பிறழ்வு ஏற்பட்டிருக்கிறது.

 

மனநிலை மாறிவிட்டதால் தன்வீட்டிற்கு திரும்பி செல்லாமல் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், கூகையூர் இப்படி பல்வேறு ஊர்களில் கடந்த 14 ஆண்டுகளாக அலைந்து திரிந்துள்ளார். பரிதாபப்பட்டு யாராவது சிலர் கொடுக்கும் உணவை உண்டும், இரவு நேரத்தில் கிடைத்த இடத்தில் தங்கியும் இருந்துள்ளார். 

 

இந்தநிலையில் கரோனா ஊரடங்கை முன்னிட்டு, கூகையூர் அருகே உள்ள ஆற்றுப்பாலத்தில் கீழ்குப்பம் உதவி ஆய்வாளர் ஏழுமலை, தலைமை காவலர் கருப்பையா மற்றும் காவலர்கள் தினசரி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சுற்றித்திரிந்த சின்னானை பார்த்த தலைமை காவலர் கருப்பையா, இறக்கப்பட்டு சாப்பாடு, துணிமணிகள் என அவ்வப்போது வாங்கி கொடுத்து உதவி செய்து வந்துள்ளார். அப்போது சின்னானிடம், அவரது குடும்ப விவரங்கள் பற்றி கேட்டபோது சின்னானுக்கு விவரம் சொல்லத் தெரியவில்லை. இதை அடுத்து தலைமை காவலர் கருப்பையா, சின்னானுடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்து அதை வாட்ஸ்அப் குரூப்பில் பதிவு செய்து சின்னான் பற்றிய விபரங்கள் தெரிந்தவர்கள் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு தமது செல்போன் எண்ணையும் பதிவிட்டுள்ளார்.

 

a head constable reunites a man with his family who lost 14 years ago

 

இதை பார்த்த சின்னானின் உறவினர்கள், அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் உடனடியாக கீழ்குப்பம் காவல் நிலையம் வந்தனர். அவர்கள் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஏழுமலையிடம் நடந்த சம்பவங்களைக் கூறினார்கள். வாட்ஸ்-அப்பில் பதிவு செய்துள்ள போட்டோவில் இருப்பது சின்னான் என்பதை உறுதி செய்தனர்.

 

சின்னானை அவரது மனைவியிடம் நேரில் காண்பித்தனர் காண்பித்தனர். அவரைப் பார்த்ததும் அவரது மனைவியும், மகளும் கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீர் வடித்தனர். மேலும் கணவரைக் கண்டுபிடித்து மீட்ட தலைமை காவலர் கருப்பையாவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

 

a head constable reunites a man with his family who lost 14 years ago

 

14 ஆண்டுகளாக பல்வேறு ஊர்களில் சுற்றி திரிந்த சின்னானை அவரது குடும்பத்தினருடன் சேர்த்து வைத்த பெருமை தலைமை காவலர் கருப்பையாவுக்கே சேரும் என்கிறார்கள் சக காவலர்கள். தனது மனைவி மகளைப் பார்த்ததும் அவர்களை அடையாளம் கண்டுகொண்ட சின்னானின் மனம் தெளிவு பெற்றதாகவும் கூறுகின்றனர். மனநிலை பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த ஒருவரை மனித நேயத்தோடு உதவிகள் செய்து அவர் குடும்பத்தினருடன் சேர்வதற்கு உதவியாக இருந்த தலைமை காவலர் கருப்பையாவுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.