Skip to main content

மக்களைப் பேசவிடாத கிராமசபைக் கூட்டம்! முதல்வரைப் பின்பற்றாத அமைச்சர்கள்!

Published on 26/04/2022 | Edited on 26/04/2022

 

Grama Saba meeting that did not let people speak! Ministers who do not follow MK Stalin

 

இந்தியா முழுவதும் ஆண்டுக்கு 4 முறை கிராமசபைக் கூட்டத்தை நடத்தவேண்டும் என்கிறது பஞ்சாயத்துராஜ் சட்டம்.  தமிழ்நாட்டில் 2016 முதல் 2019 வரை உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படாததால் தனி அதிகாரிகளின் கீழ் நிர்வாகம் நடைபெற்றது. அப்போதும் ஏதாவது ஒரு காரணத்தை கூறி கிராமசபை கூட்டங்களை அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக நடத்தவில்லை. அப்போது தமிழ்நாட்டில் சட்டமன்ற எதிர்கட்சியாக இருந்த திமுக, தங்களது கட்சி சார்பில் கிராமசபா, மக்கள் சபை என்கிற பெயர்களில் கூட்டங்களை நடத்தி, மக்களை சந்தித்து குறைகளை கேட்டது.

 

2019ல் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று தலைவர், கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால், கரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படவில்லை. 2021ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது, தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழக ஆட்சி அமைந்து முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவிக்கு வந்தார். கரோனா மூன்றாம் கட்ட பரவலை முன்னிட்டு திமுகவும் கிராமசபை கூட்டம் நடத்தாமல் தள்ளிவைத்துவந்தது.

 

இந்நிலையில் பஞ்சாயத்துராஜ் சட்டம் நடைமுறைக்கு வந்த ஏப்ரல் 24ம் தேதியை தேசிய ஊராட்சிகள் தினம் என்கிற பெயரில் கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் தமிழகம் முழுவதும் ஊராட்சிகளில் கிராமசபை கூட்டத்தினை நடத்த உத்தரவிட்டார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். அவரும் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகிலுள்ள செங்காடு ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்டார். இதேபோல் தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், தாங்கள் வெற்றி பெற்ற தொகுதிகளில் உள்ள ஏதாவது ஒரு கிராமத்தை தேர்வு செய்து அங்கு நடந்த கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

 

Grama Saba meeting that did not let people speak! Ministers who do not follow MK Stalin

 

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, திருவண்ணாமலை தொகுதிக்கு உட்பட்ட பவித்திரம் ஊராட்சியில் கிராமசபை கூட்டத்தில் கலந்துகொள்வதாக மாவட்ட நிர்வாகத்திடம் கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்த அதிகாரிகள் அந்த கிராமத்தில் ஏற்பாடுகளை செய்து அங்கு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ், ஊரக வளர்ச்சித்துறையின் கூடுதல் ஆட்சியர் பிரதாப் மற்றும் அதிகாரிகள், பஞ்சாயத்துராஜ் சட்டம் குறித்தும், அது மக்களுக்கு வழக்கும் அதிகாரங்கள் குறித்தும் எடுத்துரைத்து பேசினார்கள்.

 

இதில், சிறப்புரையாற்றிய அமைச்சர் எ.வ.வேலு, “ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே குடை ஓலை முறையில் உலகத்துக்கு தேர்தல் ஜனநாயகத்தை கற்று தந்தது தமிழர்கள்தான். அதற்கான கல்வெட்டு உத்திரமேரூரில் உள்ளது. நமக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனுக்குடன் பெறுவதற்காகவே உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர், கவுன்சிலர், சேர்மன்கள் தேர்ந்தெடுக்கிறோம். உலகத்துக்கே நாம் முன்னோடி, இரவெல்லாம் கண்விழித்து நமது முதல்வர் மக்களுக்காக உழைக்கிறார். பல்வேறு நலத்திட்டங்களை கடந்த ஓராண்டில் செய்துள்ளார். அனைத்து திட்டங்களும் இந்த ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு தமிழ்நாட்டில் உத்தமர்காந்தி விருதினை இந்த ஊராட்சி பெறவேண்டுமென கலெக்டர் விரும்புகிறார்; நானும் அதனை விரும்புகிறேன். இந்த மாவட்டத்தில் 860 ஊராட்சிகள் உள்ளன, அவைகள் தன்னிறைவு பெற்ற கிராமங்களாக வேண்டும்” என்று பேசினார். 

 

Grama Saba meeting that did not let people speak! Ministers who do not follow MK Stalin

 

கிராமசபை கூட்டங்கள் என்பது, ஒவ்வொரு கூட்டத்திலும் ஒரு கருப்பொருளை எடுத்துக்கொண்டு அதுகுறித்து விவாதிக்கவேண்டும், மக்கள் கருத்துக்களை கேட்கவேண்டும். இந்த கிராமசபை கூட்டத்தில் ஊரகவளர்ச்சி, நீடித்த வளர்ச்சி என்கிற தலைப்பில் கூட்டத்தினை நடத்தவேண்டும். அதோடு, அடிப்படை பிரச்சனைகள் குறித்தும், வளர்ச்சிப்பணிகள் குறித்தும் மக்களுடன் விவாதிக்கலாம் எனக் கூறியிருந்தது.


முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்ட கிராமத்தில் தனது ஆட்சியின் சாதனைகளை பேசியதோடு, அந்த கிராம மக்களின் குறைகளை கேட்டார். அதில் தங்கள் கிராமத்தில் குடிநீர் பிரச்சனை, கழிவுநீர் கால்வாய் பிரச்சனை, மருத்துவ வசதியில்லாதது, கிட்னி கல் பாதிக்கப்படுவது குறித்தெல்லாம் குறைகளை சொன்னார்கள். அதுகுறித்து அதிகாரிகளுடன் அங்கேயே கலந்து ஆலோசித்து தீர்த்து வைப்பதாக உறுதி அளித்தார்.


அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் கலந்துகொண்ட கிராமசபை கூட்டங்களில் பெரும்பாலும் அப்படியொரு விவாதமே நடைபெறவில்லை. மக்கள் பலர் தங்கள் கிராமத்தின் குறைகளை கூறுவதற்காக இந்த கிராமசபை கூட்டத்திற்கு வருகை தந்திருந்தார்கள். அவர்கள் பேசுவதற்கான வாய்ப்பையே யாரும் தரவில்லை. அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டத்திலேயே இப்படியென்றால் மற்ற ஊராட்சிகளில் நடைபெற்ற கிராமசபை கூட்டங்கள் எப்படி நடந்திருக்கும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

கோடை வெப்பம்; தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Tamil Nadu Chief Minister M. K. Stalin's instructions for summer heat

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக மதுரை, ஈரோடு போன்ற பகுதிகளில் வெப்ப அலை வீசி, மக்களைப் பாதிப்படைய செய்கிறது.

வெப்ப நிலை அதிகமாக இருக்கும் இந்த நிலையில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை எதிர்க்கொள்ளும் வகையில் அரசு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது, “வெப்ப நிலை அதிகரிக்கும். வெப்ப அலை வீசும், என்பது போன்ற செய்திகள் தினந்தோறும் வெளிவந்து கொண்டு இருக்கிறது. இதனை உணர்த்தும் வகையில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அடுத்த 5 நாட்களுக்கு வடதமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிக வெப்பமும் வெப்ப அலையும் ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இத்தகைய சூழலில் பொதுமக்கள் கவனத்துடனும் மிகுந்த எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பொதுவாக கோடை காலம் என்பது வெப்பம் அதிகம் உள்ள மாதங்களாக இருந்தாலும், நாளுக்கு நாள் வெப்ப அளவு அதிகமாகி வருகிறது. இதில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை ஆகும். அதனால்தான் நேற்றைய தினம் தலைமைச் செயலகத்தில் அரசுத் துறை அதிகாரிகளுடன் இது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தினேன். இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மருத்துவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் ஆலோசனையை அரசு அதிகாரிகள் கேட்டுத் தெரிந்து கொண்டதன் அடிப்படையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த அறிக்கையை வெளியிடுவது மிக மிக அவசியமானதாகக் கருதுகிறேன். வெப்பநிலை அதிகமாகும் காலங்களில் குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவிகள், வயதானவர்கள். கர்ப்பிணிப் பெண்கள், உடல்நலக் குறைபாடுகள் உடையவர்கள் அதிகமாகப் பாதிக்கப்படலாம். இவர்களை மிகக் கவனமாக பாதுக்காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கோடை வெயிலினால் அதிக வியர்வை வெளியேறும்போது. உடலில் உப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைச்சுற்றல், தசைப்பிடிப்பு, மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். பணிநேரங்களில் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் இல்லை என்றாலும், போதிய அளவு நீரை தொடர்ந்து பருகவேண்டும். அதிக அளவில் மோர், அரிசிக்கஞ்சி, இளநீர், எலுமிச்சைப் பழச்சாறு போன்றவற்றை பருகவேண்டும். உணவுப் பழக்க வழக்கங்களில் மாறுதல்களைச் செய்து கொள்ள வேண்டும். நீர்ச்சத்து காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். பழச்சாறுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

பயணத்தின்போது துணி, துண்டு, தொப்பி குடிநீர் எடுத்துச் அணிந்து செல்லவேண்டும். தேவையில்லாமல் வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான. தளர்ந்த, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. வயது முதிர்ந்தவர்கள் நடந்து செல்லும் போது களைப்பாக இருந்தால் நிழலில் சற்று ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். வெப்பம் அதிகமாக உள்ள திறந்த வெளியில் வேலை செய்யும்போது, களைப்பு, தலைவலி, தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் ஒருவருக்கு ஏற்பட்டால், உடனடியாக நிழலுக்குச்செல்லவேண்டும். மேலும், தண்ணீர், எலுமிச்சைப் பழச்சாறு, ஓ.ஆர்.எஸ். பருக வேண்டும். மயக்கம், உடல் சோர்வு, அதிக அளவு தாகம், தலைவலி, கால், மணிக்கட்டு அல்லது அடிவயிற்றில் வலி ஏற்பட்டால் அருகிலுள்ள நபரை உதவிக்கு அழைக்கவும். மிகவும் சோர்வாகவோ, மயக்கமாகவோ இருந்தால் மருத்துவ உதவியை நாடவேண்டும். சிறுபிரச்சனை என்றாலும் அதனைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அனைத்து பொதுமக்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

அதிகரித்துவரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மூலமாகவும், அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலமாகவும், பொதுமக்கள். திறந்த இடங்களில் பணிபுரிவோர், நீண்டதூரம் சாலை பயணங்களை மேற்கொள்வோர் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். அரசு அதிகாரிகள், அலுவலர்கள் அனைவரும் மக்கள் பாதுகாப்பில் முழு அக்கறை செலுத்தி பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.