Skip to main content

அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள்; ஆசிரியர் குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி

Published on 30/05/2023 | Edited on 30/05/2023

 

Gold jewellery robbery at teacher's house in Kanchipuram

 

காஞ்சிபுரம் மாவட்டம் திம்மசமுத்திரம் ஊராட்சிக்கு அருகே உள்ள ஜினகாஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அருள்குமார். இவர் அப்துல்லாபுரம் மின்சாரத்துறை போர்மேனாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவியான கல்பனா அப்பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

 

இந்நிலையில், கடந்த 25 ஆம் தேதியன்று அருள்குமார் தன் குடும்பத்துடன் சொந்த ஊரான ஆரணிக்கு குலதெய்வக் கோவிலுக்குச் சென்றுள்ளார். மேலும், அவர் வீட்டை விட்டுச் செல்லும்போது வெளியே இருந்த விளக்குகளை போட்டுவிட்டுச் சென்றுள்ளார். இதையடுத்து, சொந்த ஊரில் தனது உறவினர்களுடன் மூன்று நாட்கள் தங்கியிருந்த அருள்குமார், கடந்த 29 ஆம் தேதியன்று வீடு திரும்பியுள்ளார்.

 

அந்த சமயம், வீட்டுக்கு வெளியே போடப்பட்டிருந்த விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன. வீட்டின் முன் கேட்டில் இருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு திறந்த நிலையில் இருந்துள்ளது. ஒருகணம் இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அருள்குமார், உடனடியாக வீட்டுக்குள் ஓடிச் சென்று பார்த்துள்ளார். அப்போது, வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த சுமார் 5 சவரன் தங்க நகை மற்றும் 120 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

 

Gold jewellery robbery at teacher's house in Kanchipuram

 

இதனால் அதிர்ந்துபோன அருள்குமார், என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்திருந்த நேரத்தில், பக்கத்து வீட்டிலும் ஒரு அலறல் சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக அங்கு சென்று பார்த்தபோது, பக்கத்து வீட்டில் குடியிருக்கும் மாரியப்பன் என்பவரின் வீட்டிலும் சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளும் ஒரு லட்ச ரூபாய் ரொக்கப் பணமும் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

 

இதையடுத்து, இரு வீட்டாரும் இந்த கொள்ளை சம்பவம் குறித்து பாலுசெட்டிசத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில், விசாரணையை தொடங்கிய காவல்துறை அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமெராக்களை ஆய்வு செய்துள்ளனர். அப்போது, பட்டா கத்தியுடன் ஒரே பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள் இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கொள்ளையர்களை வலைவீசித் தேடி வருகின்றனர். அதே சமயம், ஒரே நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.