Skip to main content

கஞ்சா வியாபாரி கைது- கஞ்சா, செல்போன்கள் பறிமுதல்

Published on 25/08/2024 | Edited on 25/08/2024
Ganja dealer arrested- Ganja, cell phones seized

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை அதிகமாகி மாணவர்கள், இளைஞர்கள் மாற்றுப் போதைக்கு அடிமையாகி சட்ட ஒழுங்கு பிரச்சனைகளும் அதிகரித்து வருகிறது. ஆகவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே தனிப்படை போலீசார் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இந்நிலையில் கீரமங்கலம் பகுதியில் வெளியூர்காரர்கள் பலர் கஞ்சா கொண்டு வந்து வியாபாரம் செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, மணமேல்குடி தாலுக்கா கிருஷ்னாசிப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த நூர்முகமது மகன் இப்ராம்ஷா (52) என்பவர் கீரமங்கலம் காவல் சரகம் காசிம்புப்பேட்டையில் தங்கியிருந்து கஞ்சா வியாபாரம் செய்வதாக தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் தனிப்படை போலீசார், இப்ராம்ஷா வீட்டிற்குச் சென்று சோதனை செய்த போது விற்பனைக்காக வைத்திருந்த ஒரு கிலோ 20 கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய 2 செல்போன்களையும் பறிமுதல் செய்து இப்ராம்ஷாவை கைது செய்து கீரமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சம்பவம் குறித்து கீரமங்கலம் காவல் ஆய்வாளர் பாரதி விசாரணை செய்து வழக்கு பதிவு செய்துள்ளார். தொடர்ந்து கீரமங்கலம் போலீசார் இப்ராம்ஷாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

சார்ந்த செய்திகள்