Skip to main content

போலீஸ் தடியடி! உழைத்த மண்ணில் கண்ணீர்... கதறல்..! புலம் பெயர் தொழிலாளர்களின் பரிதாபம்!

Published on 18/05/2020 | Edited on 18/05/2020
erode - other state workers



ஓயாத கண்ணீர் காட்சிகள் என்றால் அது புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் இன்றைய நிலைதான். இந்தியா முழுக்க புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது பிறப்பிடம் நோக்கி கால்நடையாக நடந்து செல்லும் மிகப்பெரிய சமூக அவலம் தொடர்ந்து நடந்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் வாழும் மக்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக ஊரு விட்டு ஊரு, மாவட்டம் விட்டு மாவட்டம், மாநிலம் விட்டு மாநிலம் என கடந்த 20 வருடங்களாக பிழைப்பை தேடி, அது எங்கே கிடைக்கிறதோ அங்கு சென்று தங்களது உழைப்பை கொடுத்து வாழ்ந்து வந்தவர்கள்தான் இந்த புலம்பெயர் தொழிலாளர்கள். 


குறிப்பாக தமிழ்நாட்டில் மேற்குவங்க மாநிலம் தொடங்கி குஜராத், உ.பி., ராஜஸ்தான், ஜார்கண்ட், சதீஸ்கர், பீகார், ஒடிசா என வட மாநிலத்தில் உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் கட்டுமான பணியிலும் பின்னலாடை உற்பத்தி மேலும் பல தொழில் சார்ந்த நிறுவனங்களில் தொழிலாளிகளாக பணிபுரிந்து வருகிறார்கள். ஒரு கட்டத்தில் தொழில் துறையில் தமிழ்நாடு வட மாநிலத்தவரின் கையில் சென்று கொண்டிருக்கிறது என்ற பிரச்சாரமும் எழுந்தது. அந்த அளவு வெளிமாநில தொழிலாளர்களின் உழைப்பு தமிழ்நாட்டுக்கு மிகவும் தேவைப்பட்டது. ஆனால் இந்த கொடிய கரோனா என்கிற வைரஸ் ஒட்டுமொத்த மனித சமூகத்தையே புரட்டிப் போட்டுவிட்டது. மத்திய மாநில அரசுகள் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என தொடர்ந்து ஊரடங்கு உத்தரவை திரும்ப திரும்ப போட்டு முடக்கி வருகிறது.

வாழ்விடமாக இருந்த தொழிற்சாலைகளின் கதவுகள் இரும்புக் கம்பிகளால் பூட்டப்பட்டு விட்டது. தொழில் நிறுவனத்தை நடத்தி வரும் உரிமையாளர்களும் மெல்ல,மெல்ல இனிமேல் உங்களுக்கு கொடுக்க எங்களிடம் எதுவும் இல்லை என கைவிரித்து விட்டார்கள். 

 

 

erode - other state workers



என்ன செய்வார்கள் இந்தப் புலம்பெயர் தொழிலாளர்கள்? பசி, பட்டினியால் இறப்புதான் தங்களுக்கு முடிவோ? என்ற அச்சத்தில் அப்படி நேருமானால் அதுதான் பிறந்த பூமியிலேயே இருக்கட்டும் என வேறு வழியே இல்லாமல் இந்திய மூலைகளில் இருந்து தங்களது இருப்பிடம் நோக்கி நடக்கத் தொடங்கி விட்டார்கள். இது ஒரு நாள், இரண்டு நாள் அல்ல, கடந்த 50 நாட்களாக இந்தியாவில் இவர்களின் நடைபயணம் மிகுந்த அவலமாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 


நமது மத்திய அரசோ சாதாரண மக்கள் கணக்கிட முடியாத தொகைகளை மிக இயல்பாக அறிவிக்கிறது. 20 லட்சம் கோடி என்கிறார்கள். இப்போது இவர்களுக்கு தேவை புலம்பெயர்ந்து வந்த இடத்தில் வசிப்பிடம் அல்லது வாழ்வதற்கான உணவு இல்லை என்ற நிலையில், இனிமேல் எங்கள் வாழ்வாதாரம் நாங்கள் உழைக்க வந்த இடத்தில் இல்லாமல் போய்விட்டதால், எங்களை நாங்கள் பிறந்த இடத்திற்கே கொண்டு போய்விடுங்கள் என்று தான் கேட்கிறார்கள். 

 

 

erode - other state workers


 

எத்தனையோ லட்சம் கோடி அறிவிப்புகள் தினம் தினம் காதில் வந்துவிழுகிறது. இரண்டு, மூன்று நாள் ரயில் பயணத்தில் சென்றால் அவர்கள் வசிப்பிடம் வந்துவிடும். இந்த நிலையை மத்திய அரசு எடுக்கவே இல்லை. மனிதர்களை பற்றி சிந்திக்கின்ற எத்தனையோ அமைப்புகள் எதிர்க்கட்சிகள் மன்றாடி கேட்டு விட்டது, அவர்களை அவர்களது இடத்திற்கே கொண்டு போய்விடுங்கள் என்று. ஆனால் மனம் இரங்கவில்லை அரசுகள். ஆனால் கணக்கு காட்ட இந்த அரசாங்கம் சில ஊர்களில் மட்டும் சொந்த ஊருக்கு அனுப்புகிறோம் என ரயில் காட்சிகளை வெளியிட்டு வருகிறார்கள். ஆனாலும் இன்னும் பல லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் இருப்பிடம் செல்ல வேண்டும் என மன்றாடுகிறார்கள். சிலர் நடைபயணமாக செல்வதும் பலர் இருக்கும் இடத்திலேயே அதிகாரிகளிடம் எங்களை எங்கள் ஊருக்கு அனுப்புங்கள் என்று கெஞ்சுவதும் நடந்து கொண்டே இருக்கிறது. அப்படித்தான் ஈரோட்டில் இன்று ஒரு பதட்டமான சம்பவம். 

 

erode - other state workers


ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் புலம்பெயர் தொழிலாளர்கள் பல நூற்றுக்கணக்கானோர் தங்கி உள்ளார்கள். இந்த ஊரடங்கு தொடங்கிய நாள் முதல் அவர்கள் தங்களது இருப்பிடம் நோக்கி செல்லலாம் என எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தார்கள் முடியவில்லை. மாநில அரசுகள் அறிவித்தபடி அரசு நிர்வாகத்திற்கு தங்களை தங்கள் ஊருக்கு அனுப்பக்கோரி விண்ணப்பம் செய்து பார்த்தார்கள். ஆனால் அதுவும் நடக்கவில்லை. இதனால் பொறுமை இழந்து இன்று வீதிக்கு வந்த அவர்கள், ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து எங்களது கோரிக்கையை வைக்கிறோம் என ஒன்று கூடி வந்தார்கள்.

அப்படி வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி முதலில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, ''உங்கள் கோரிக்கையை நாங்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கூறி விடுகிறோம், இப்போது நீங்கள் கலைந்து செல்லுங்கள்'' என போலீசார் எச்சரிக்கை செய்ய, ''ஐயா நாங்கள் மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்தித்தால் நிம்மதியாக கலைந்து செல்கிறோம்'' என கூறினார்கள். ஆனால் போலீஸ் விடவில்லை. பேச்சுவார்த்தை சுமுகமாக முடியாததால் அந்த புலம்பெயர் தொழிலாளர்கள் கூட்டத்தின் மீது லேசாக தடியடி நடத்தினார்கள் ஈரோடு போலீசார். வேறு என்ன வழி இல்லாமல் போலீஸ் அடித்து உதைத்து விடுமோ என்ற பயத்தில் வேகமாக சிதறி ஓடினார்கள் அவர்கள். இந்த மண்ணில் வந்து உழைப்பை செலுத்தி எந்த தொழிலை வளர்த்தார்களோ அந்த மண்ணிலேயே அவர்கள் கண்ணீர் விடும் அவலம் ஏற்பட்டுள்ளதை நினைக்கும்போது வேதனையாகத்தான் உள்ளது. 
 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.